முஸ்லிம் சமூகத்தை தனிமைப்படுத்தும் தனித்துவ அரசியலை விட்டுவிட்டு தேசிய அரசியலில் பங்குபற்றுவது தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் இளைஞர் மன்றத்தினால் கொழும்பு மருதானையில் வை.எம்.எம்.ஏ. கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இளைஞர்களுக்கான தெளிவூட்டும் கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்
இன்று அரசியலில் 'நல்லாட்சி' என்ற சொல் அதிகமாக பேசப்படும் சொல்லாக இருக்கின்றது. காலப்போக்கில் இச்சொல் மறக்கப்பட்டுவிடுமோ என்கிற அச்சம் எனக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே காலத்துக்கு காலம் அதிகமாக பேசுபொருளாகவிருந்த ஜனநாயகம், சட்டம், நீதி, ஒழுங்கு போன்ற சொற்கள் மறக்கப்பட்டுவிட்டன. இதன் தொடராக நல்லாட்சி அர்த்தமற்றதாய்போய்விடுமோ என்கிற அச்சமே என்னை ஆட்கொண்டுள்ளது.
நாம் எட்டு வருடங்களுக்கு முன்பிருந்தே இந்த நல்லாட்சி தொடர்பில் கதைக்கிறோம். அதனை எமது அரசியல் உபாயமாகவல்லாது செயற்பாடாக கொண்டுள்ளோம்.
முஸ்லிம் தலைமைகளின் கோசங்கள் வெற்றுக்கோசங்களாக மாறியுள்ளன. நிலத்தொடர்பற்ற மாகாணம் சுருங்கி தென்கிழக்கு மாகாணமாக மாறியது. பின்னர் கரையோர மாவட்டமாக சிறிதாகி மேலதிக அரசாங்க அதிபர் கோரிக்கை என்று வந்து நிற்கிறது.
மைத்திரி ஜனாதிபதியானால் நல்லாட்சி ஏற்பட்டுவிடும் என்று இருந்துவிட முடியாது. இதற்காக நாட்டில் பெரும் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். பொது வேட்பாளர் தீர்வின் ஆரம்பம் மட்டுமே என தெரிவித்தார்.
நஜா முஹம்மத்
தேசிய வேலைத்திட்டங்களிலிருந்து முஸ்லிம் கட்சிகள் ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன. இந்நிலை மாற்றம்பெற வேண்டும். நாட்டில் நல்லாட்சி உருவாவதில் முஸ்லிம்களும் நேரடியான பங்களிப்பை நல்கவேண்டும்.
இன்று முஸ்லிம் சமூகத்தின் தலைவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கின்றது. மக்கள் தலைவர்களை வழிநடத்தும் அளவிற்கு வங்குரோத்து நிலைமையில் அவர்கள் இருக்கின்றனர்.
முஸ்லிம் சமூகம் சார்ந்து நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு மைத்திரியை ஆதரிப்பதனூடாக எமது பங்களிப்பை நாம் வழங்குகிறோம். இது சாதாரண அரசியல் முடிவல்ல. பல மாத முயற்சியின் தீர்மானமாகும்.
பெரும்பான்மை மக்கள் அரசியல் ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தி நல்லாட்சியை ஏற்படுத்த முன்வரும்போது முஸ்லிம் சமூகமும் பின்னிற்கக்கூடாது.
நாங்கள் இந்நாட்டில் ஒதுங்கி வாழ முடியாது. தனித்துவம்பேசி தனிமைப்பட்டுவிடக்கூடாது என்பதில்நாம் தெளிவாக இருக்கிறோம்.
இன்றைய அரசில் நாம் உரிமைகளுக்காக பிச்சை கேட்கவேண்டிய நிலைமைக்கு அரசியல்வாதிகள் மாற்றமடைந்துள்ளனர்.
நியாயத்தின் அடிப்படையில் உரிமைகளை பெற்றுக்கொள்ள அனைவரினது உரிமைகளுக்காகவும் நாம் குரல்கொடுக்கவேண்டும்.
அஸ்மின் அய்யூப்
முஸ்லிம் சமூகம் குறுகிய சிந்தனையுடனே இருக்கின்றது. இது மாற்றியமைக்கப்பட வேண்டும்.
பொது பல சேனா அமைப்பு அரசாங்கத்துடன் இருப்பதனாலும் அவர்களின் முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அரசு ஆதரவு வழங்கியமையாலும் முஸ்லிம்கள் ஆட்சியாளர்களை வெறுக்கின்றனர். இது குறுகிய சிந்தனையாகும். நாம் பரந்தளவில் சிந்திக்கவேண்டும்.
நாடு மாற்றத்தை நோக்கி போராடிக்கொண்டிருக்கும்போது முஸ்லிம் அரசியல்வாதி எம்.பி. பதவி கேட்டு அடம்பிடித்து அதனை பெற்றுக்கொண்டதையிட்டு வெட்கப்படவேண்டியிருக்கிறது.
மக்கள் அரசிலிருந்து முஸ்லிம் தலைமைகள் வெளியேற வேண்டும் என கூறும்போது தலைமைகள் இது கேள்வி அதிகமிருக்கும் காலமாகையால் இன்னும் ஆட்சியாளர்களிடம் கோரிக்கை விடுக்கலாம் என தெரிவிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. நாம் தகுதியில்லாதவர்களை ஆட்சிபீடமேற்றியிருக்கின்றமையினாலேயே இந்நிலமை ஏற்பட்டுள்ளது என்றார்.

Post a Comment