மஹிந்தவை இனிமேலும் நம்ப முடியாது - முசலியில் முஜிபுர் ரஹ்மான்
Thursday, December 18, 20140 comments
இரண்டு தவணை காலத்தில் வடக்கில் முஸ்லிம்களை மீள்குடியேற்றாத ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தவணை காலத்தில் அதனை செய்வார் என நம்ப முடியாது என மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து விலகி ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துகொண்ட வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக்கை வரவேற்கும் நிகழ்வு நேற்று முன்தினம் முசலியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முஜிபுர் ரஹ்மான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், மஹிந்த ராஜபக்ஷவிற்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கின்ற நிலையில், அவசரப்பட்டு ஜனாதிபதி தேர்தலுக்கு அழைப்பை விட்டுள்ளார். இரண்டு வருடங்களின் பின்னர் அவரின் செல்வாக்கு வீழ்ச்சியடையும் என்பதை அவர் உறுதியாக நம்பி இப்போது தேர்தலை நடத்துகிறார்.
2005 ஆண்டு ஜனாதிபதிக்கு ஆதரவளித்த மக்கள் விடுதலை முன்னணி 2010 ஆம் ஆண்டு தேர்தலின்போது அவருக்கு எதிராக செயற்பட்டது. 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதியுடன் இருந்த ஜாதிக ஹெல உறுமயவும் இன்று வெளியேறியிருக்கிறது. ஆட்சியாளர்களின் மோசடி காரணமாகவே இன்னும் பலர் வெளியேறி எதிரணியுடன் இணைந்து நாட்டின் நல்லாட்சிக்காக பாடுபடுகின்றனர்.
இந்த அரசாங்கத்தின் கீழ் மன்னார் மாவட்ட முஸ்லிம்களின் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. இதனால் அம்மக்கள் மீள்குடியேற முடியாமல் முகாம்களுக்குள் முடங்கி கிடக்கின்றனர். நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுமாயின் மன்னாரில் மீள்குடியேற்றங்களை திட்டமிட்டு மேற்கொள்ள முடியும். எனவே மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளித்து ஆட்சி மாற்றத்துடன் மக்களுக்கு சுபீட்சத்தை ஏற்படுத்த முன்வர வேண்டும் என்றார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி
.jpg)
Post a Comment