சம்மாந்துறை பிரதேச சபைக்குச் சொந்தமான அப்துல் மஜீத் நகர மண்டபத்தில் ஐ.தே.கட்சிக் கூட்டம் நடாத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் தலையீட்டையடுத்து நீக்கப்பட்டது.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து சம்மாந்துறை அப்துல் மஜீத் நகர மண்டபத்தில் பொதுக்கூட்டமொன்றை நடாத்துவதற்கு சம்மாந்துறையைச் சேர்ந்த எம். முஸ்தபா லெவ்வை சம்மாந்துறைப் பிரதேச சபையின் மண்டபத்திற்கான 4000 ரூபா வாடகைப் பணத்தைச் செலுத்தி அனுமதியையும் பெற்றுக்கொண்டார். இந்நிலையில் கடந்த 11 ஆம் திகதி காலை 9 மணியளவில் மண்டபம் தர முடியாது என சபைச் செயலாளரிடமிருந்து அறிவித்தல் ஏற்பாட்டாளருக்குக் கிடைக்கப் பெற்றது. அவர் ஏனைய ஏற்பாட்டாளர்களுடன் சேர்ந்து பொலிஸார் தொடக்கம் தேர்தல்கள் ஆணையாளர் வரை ஐ.தே. கட்சிக் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றது எனக் குறிப்பிட்டு முறைப்பாடு செய்தார்.
இம் முறைப்பாட்டையடுத்து தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உடனடியாகச் செயற்பட்டு அம்பாறை உதவி தேர்தல்கள் ஆணையாளர் திலின விக்ரமரத்னவை இவ்விடயம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு பணித்தார். அதனையடுத்து அவர் சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் ஏ.எ. சலீமிடம் கலந்துரையாடி தீர்வைப் பெற்றுக்கொடுத்துள்ளார்.

Post a Comment