புத்த மதத்தின் தாய் வீடாகக் கருதப்படும் அசோக ராஜ்யம் சந்திரகுப்தனால்
ஆரம்பிக்கப்பட்ட மகத ராஜ்யத்தின் பரிணாமத்தின் இறுதிக்கட்டம் என
கூறமுடியும்.
ஆரம்பத்தில் சிற்றரசாக காணப்பட்ட மகத அரசு காலவோட்டத்தில் பல அரசுகளை தன்வசம் உள்வாங்கியதுடன் வித்தியாசமான பல்வேறுபட்ட கலாசாரம் கொள்கைகளை கொண்ட மக்களை உள்ளடக்கிய மிகப் பெரிய இராஜ்யமாக பரிணமித்தது.
இதனால் காலவோட்டத்தில் கோத்திர முறை நீங்கி பிரமாண்டமான மக்களைக் கொண்ட இராஜ்யமாக மாறியது.
சந்திரகுப்த மன்னனுக்கு பின்னர் அவரது மகன் பிந்துசார மன்னன் அவரது
செயற்பாடுகளை பின் தொடர்ந்த போதிலும் அசோக மன்னனின் செயற்பாடுகள்தான் தர்க்க ரீதியாக வரலாற்றை இறுதிக்கட்டத்துக்கு கொண்டு சென்றது.
பிந்துசார மன்னனுக்கு நூறு பிள்ளைகள். அவரின் மகன்களில் ஒருவரான அசோக் தனது ஓரிரு சகோதரர்களை விட்டு விட்டு அனைவரையும் கொலை செய்து ஆட்சியைப் பிடித்தான்.
இந்தப் பரம்பரையில் முக்கியமான மன்னனாகக் கருதப்படும் அசோக மன்னன் அவரது தந்தையால் கைப்பற்ற முடியாது போன காளிங்க இராஜ்யத்தை (தற்போதைய ஒரீசா) நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்று கைப்பற்றினான்.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து மன அவஸ்தைக்கு உள்ளான மன்னன் புத்தமதத்தை தழுவிக் கொண்டார். அசோக மன்னன் புத்த மதத்தை பின்பற்ற எந்த விடயம் காரணமாக இருந்த போதிலும் மகத ராஜ்யத்தில் ஏற்கனவே ஆதிக்கத்தில் இருந்த வைதீக மதத்தை மிகைத்து பௌத்த மதமும் ஜைன (சமண) மதமும் மேலோங்கி தமக்கான ஒரு இடத்தை உருவாக்கிவிட்டது.
பௌத்த மதத்தின் ஸ்தாபகர் புத்த பெருமான் மற்றும் ஜைனத்தின் (சமண)
ஸ்தாபகர் மஹா வீரர் ஆகியோர் உயர் குடி சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த போதிலும் அவர்கள் விளிம்பு நிலை வாசிகளுக்காகவே தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தனர்.
புத்த மதத்துக்கும் ஜைன (சமண) மதத்துக்கும் மக்களிடம் கிடைக்கப் பெற்ற முன்னுரிமையால் ஏற்கனவே மகத ராஜ்யத்தில் முன்னணியில் இருந்த வைதீக மதத்தை கைவிட்டு மக்கள் இம்மதங்களை பின்பற்ற ஆரம்பித்தனர். இந்த இராஜ்யத்தின் ஆரம்ப கர்த்தாவாக இருந்த சந்திரகுப்த மன்னன் தனது கடைசி காலப்பகுதியில் தனது அரசை கைவிட்டு விட்டு ஜைன (சமண) மதத்தை ஏற்றுக்கொண்டதன் ஊடாக மதங்களின் தாக்கத்தையும் விஸ்தரிப்பு முறைமையையும் கண்டுகொள்ள முடிகிறது.
அதே போல் அசோக இராஜ்யத்தின் அரச மதமாக பௌத்த மதம் மாறியதிலும் கூட இவ்வாறானதொரு தாக்கத்தையே கண்டுகொள்ள முடிகிறது.
கடந்த வாரம் நாம் பார்த்த மதங்களின் பரவல் அல்லது ஆதிக்க முறை எவ்வாறு உருவானது என்பதை இதனூடாக புரிந்து கொள்ள முடிகிறது. இவ்வாறு தான் அதிகாரம்மிக்க ஒருவர் ஒரு மதத்தை பின்பற்றும் போது ஏற்கனவே இருந்த மதங்களின் ஆதிக்கம் குறைந்து அதிகாரம்மிக்க மதம் மேல் எழுகிறது என்பதை விளங்கி கொள்ள முடிகிறது.
தொடரும்....

Post a Comment