அரசாங்கம் பைத்திய காரரர்களின் கூடம் - விக்டர் ஐவன்
Friday, October 17, 20140 comments
அரசாங்கம் பைத்தியக்காரர்களின் கூடாரம் என்றும், புலனாய்வுப் பிரிவினர் முற்றிப் போன பைத்தியங்கள் என்றும் ராவய ஆசிரியர் விக்டர் ஐவன் கடுமையாக சாடியுள்ளார்.
ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் அமைப்பு அண்மையில் ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கொன்றை ஏற்பாடு செய்திருந்தது. எனினும் இந்த கருத்தரங்கை நடத்தவிடாமல் தடுப்பதற்கு அரசாங்கம் பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தது.
புலனாய்வுப் பிரிவினரைப் பயன்படுத்தி கருத்தரங்கு ஏற்பாட்டாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. மேலும் கருத்தரங்கு புலிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகக் கூறி, கருத்தரங்கில் கலந்து கொள்பவர்கள் தாக்கப்படுவார்கள் என்றும் புலனாய்வுப் பிரிவினர் அச்சுறுத்தி இருந்தனர்.
மேலும் கருத்தரங்கு நடைபெற இருந்த கொழும்பு, திம்பிரிகஸ்யாய ஜானகி ஹோட்டலுக்கும் மர்மப் பார்சல் ஒன்றை வீசி இனந்தெரியாதவர்கள் அச்சுறுத்தல் விடுத்திருந்தனர். கருத்தரங்கு நடைபெற்றால் புலிகளுக்கு ஆதரவளித்ததாக கருதி ஹோட்டலும் தாக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மிகவும் ரகசியமான முறையில், மறைவான ஒரு இடத்தில் கருத்தரங்கு நடைபெற்றது.
இந்நிலையில் இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ராவய பிரதம ஆசிரியர் விக்டர் ஐவன், அரசாங்கத்துக்கு பைத்தியம் பிடித்திருப்பதாக சாடியுள்ளார். ஊடக சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டிய அரசாங்கமே கீழ்த்தரமான செயற்பாடுகளில் ஈடுபட்டு, தனது பைத்தியக்காரத்தனத்தை பறைசாற்றிக் கொள்வதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் புலனாய்வுப் பிரிவினர் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமே அல்லாது, அப்பாவி ஊடகவியலாளர்களை அச்சுறுத்தக் கூடாது என்றும் விக்டர் ஐவன் கடுமையாக சாடியுள்ளார். புலனாய்வுப் பிரிவினர் அரசியல்மயப்படுத்தப்பட்டதன் காரணமாக முற்றிப் போன பைத்தியங்கள் போன்று நடந்து கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்தவின் ஊடக ஆலோசகராக இருந்த விக்டர் ஐவன் அண்மைக்காலமாக அரசாங்கத்தையும், புலனாய்வுப் பிரிவினரையும் கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment