நாட்டின் தென்மேல் வடமாகாணங்களில் ஹுத் ஹுத் புயலின் தாக்கம் இன்று (09) சிறிதளவில் செல்வாக்கு செலுத்துமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கான சாத்தியம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. குறிப்பாக மேல், சப்ரகமுவ, கிழக்கு மற்றும் ஊவா வடமத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைக்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுவதாகவும் இம்மழைவீழ்ச்சியின் அளவு 100 மில்லிமீற்றரைத் தாண்டலாம் எனவும் எதிர்வு கூறியுள்ளது.
ஊவா வடமத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை அதிகளவில் எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான பகுதிகளில் பலத்த காற்று வீசலாம் எனவும் குறிப்பாக மலையகங்களில் காற்றின் வேகம் 60 கிலோ மீற்றரைத்தாண்டலாம் எனவும் இதன் காரணமாக ஏற்படும் அசம்பாவிதங்களை தடுக்க பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு வானிலை அவதான நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பிரதான நகரங்களின் காலநிலை
அநுராதபுர மாவட்டத்தில் வெப்ப நிலையானது ஆகக்கூடியது 33 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 24 செல்சியஸ் பாகையாகவும் காணப்படுவதோடு சிறிதளவில் மழை காணப்படலாம். யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆகக்கூடியது 32 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 25 செல்சியஸ் பாகையாகவும் காணப்படும் அதேவேளை யாழ்ப்பாணம் ,மன்னார் ஆகிய பிரதேசங்களில் மிதமான காலநிலை காணப்படலாம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆகக்கூடுதலான வெப்பநிலை 32 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 25 செல்சியஸ் பாகையாகவும் காணப்படும் அதேவேளை கொழும்பு மாவட்டத்தில் ஆகக்கூடுதலான வெப்பநிலை 30 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 25 செல்சியஸ் பாகையாகவும் காணப்படும்.
கண்டி நுவரெலியா இரத்தினபுரி கொழும்பு காலி மாவட்டங்களில் சிறிதளவிலான மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டில் ஆகக்கூடிய வெப்பநிலையாக பொத்துவில் பிரதேசத்தில் 35.2 செல்சியஸ் பாகையும் ஆகக்குறைந்தளவு வெப்பநிலையாக நுவரெலியா மாவட்டத்தில் 13.9 செல்சியஸ் பாகையும் நிலவும் என வானிலை அவதான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
கூடிய மழைவீழ்ச்சி பதிவாகிய பிரதேசம்
அங்கொட பிரதேசத்தில் கூடியளவு மழை வீழ்ச்சியாக 120.5 மில்லி மீற்றர் பதியப்பட்டுள்ளது.

Post a Comment