குருக்கள் மடம் முஸ்லிம் புதைகுழி தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

Friday, October 3, 20140 comments



குருக்கள் மடம் முஸ்லிம் புதைகுழி தொடர்பாக ஆராய்ந்து இம் மாதம் 30ஆம் திகதிக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.றியாழ் களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு இன்று (02)  உத்தரவிட்டார்.

குருக்கள் மடம் பிரதேசத்தில் முஸ்லிம்கள் சிலர் கடத்தி கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் புதைகுழியை தோண்டுவதற்குரிய நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு கோரி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக், சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஊடாக நகர்வு மனுவொன்றை களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்தக் கொண்ட நீதவான் றியாழ், இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து இம் மாதம் 30ஆம் திகதிக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

குற்றவியல் தண்டனைக் கோவைச்  சட்டத்தின் இருபத்தியோராம் பிரிவின் கீழ் இது தொடர்பாக தகவல் தெரிந்த அனைவருக்கும் தங்களுடைய தகவலை நீதிமன்றத்துக்கோ பொலிஸாருக்கோ கொடுப்பதற்கு உரிமை இருக்கிறது. ஆகவே, அத்தகவல் எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டு அதனடிப்படையில் சரியான முடிவுக்கு வருவதற்கு பொலிஸார் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

அதனடிப்படையிலே நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் என்றும் நீதவான் தெரிவித்ததாக, பொறியியலாளர் சிப்லி பாறூக் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

மேலும் வைத்திய  நிபுணர்களை  அவ்விடத்துக்கு கூட்டி வருவதற்கு முற்பாடே புதைகுழிகள் இருக்கும் இடத்தை அடையாளப்படுத்தி இருக்க வேண்டும்.

அடையாளப்படுத்தப்பட்ட புதைகுழிகளை தோண்டுவதற்கே அவர்களை கூட்டி வந்திருக்கவேண்டும்.  ஆகவே, அவர்கள் வந்ததற்கு பிற்பாடு புதைகுழிகள் தோண்டப்படாததற்;குரிய காரணம்  என்ன அது ஏன் தோண்டப்படவில்லை என்ற விடயத்தை   நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டதாக சட்டத்தரணி நிசாம் காரியப்பர் மேலும் தெரிவித்தார்.

இதன் போது நீதி மன்றத்தில் பொறியியலாளர் சிப்லி பாறூக், மற்றும் காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர், நகர சபை உறுப்பினர் றவூப் ஏ மஜீத் ஆகியோர் சமூகமளித்திருந்தனர்.

கடந்த 13.9.2014 அன்று குருக்கள் மடம் முஸ்லிம் புதைகுழி என அடையாளம் காணப்பட்ட இடங்களை தோண்டுவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள கொழும்பிலிருந்து சட்ட வைத்திய நிபுணர்கள் குழுவினர் வருகை தந்திருந்தனர்.

அந்த இடத்துக்கு   வருகை தந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் மற்றும் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் றவூப் ஏ மஜீத் ஆகிய இருவருக்கு மிடையில் இடத்தை அடையாளம் காட்டுவது தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையால், சட்ட வைத்தியர் நிபுணர்கள் குழு எந்தெவாரு தீர்மானமுமின்றி கொழும்பு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி குருக்கள்மடம் முஸ்லிம் புதை குழியை தோண்டுமாறு கோரி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் 68 பேர் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham