பொரலஸ்கமுவயில் அமைந்துள்ள பள்ளிவாசலை அகற்றுவதற்கு எமக்கு உதவியளித்தால் நீங்கள் வியாபாரத்தை தொடரலாம், இல்லையேல் இங்கு வியாபாரத்தை நடத்த முடியாது என ஜனாதிபதி ஆலோசகர் ஒருவர் அடங்களான பிக்குகள் இருவர் என்னை வற்புறுத்தினர் என முன்னணி அலங்கார மின்விளக்கு விற்பனை நிலைய உரிமையாளரும் முன்னாள் களுத்துறை நகரசபை தலைவருமான எம்.எஸ்.எம். முபாரக் தெரிவித்தார்.
பொரலஸ்கமுவ பிரதேசத்தில் நகரசபைக்கு சொந்தமான இடத்தில் அலங்கார மின்விளக்கு விற்பனை நிலையமொன்றை நடத்துவதற்கு பிக்குகள் எதிர்ப்பு தெரிவித்தமையால் அங்கிருந்து விற்பனை நிலையம் அகற்றப்பட்ட சம்பவம் ஒன்று கடந்த மாதம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் கடை உரிமையாளரை நம்மவன் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் எம்.எஸ்.எம். முபாரக் மேலும் தெரிவிக்கையில், லாஸ்ட் சான்ஸ் நிறுவனத்தினர் பலவருடங்களாக நாட்டின் பல பாகங்களிலும் ஒரு வருடம் இரண்டு வருடங்கள் என குறுகிய கால மலிவு விற்பனை நிலையங்களை திறப்பது வழக்கம்.
அந்த அடிப்படையில் பொரலஸ்கமுவ, பிலியந்தல வீதியில் நகரசபைக்கு சொந்தமான காணி ஒன்றை கடந்த ஏப்ரல்மாதம் 16 ஆம் திகதி கோரியிருந்தேன். இவ்விடயம் ஏப்ரல் மாதம் 24 நகர சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மாதம் இருபதாயிரம் ரூபா வாடகையில் ஒருவருட குத்தகை அடிப்படையில் நீடித்து கொள்ளும் புரிந்துணர்வில் ஆரம்ப கட்டமாக மூன்று மாதத்துக்கு குத்தகைக்கு பெற்றிருந்தேன். இந்த ஒப்பந்தத்தை நகரசபை ஏகமனதாக ஏற்று, எனக்கான அனுமதியையும் தந்திருந்தது. இதற்கான கடிதத்தை நகரசபையின் செயலாளர் எனக்கு அனுப்பி வைத்திருந்தார். குறித்த காணியை தமது சொந்த செலவிலே துப்பரவும் செய்து சுமார் இருபது லட்சம் ரூபா செலவில் கூடாரம் ஒன்றையும் நிர்மாணித்தோம்.
பின்னர் ஏற்பட்ட பல அசௌகரியங்கள் காரணமாக ஜூலை மாதம் மூன்றாத் திகதியே விற்பனை நிலையத்தை ஆரம்பிக்க முடிந்தது. திறப்பு விழாவுக்கு பொரலஸ்கமுவ நகரசபை தலைவர் கே.டீ.அருண பிரசாதையும் அழைத்திருந்தோம். எனினும் அவர் அலுவல் காரணமாக வர முடியாதிருந்ததாக தெரிவித்தார். விற்பனை நிலையத்தின் திறப்புவிழா இடம்பெற்று இரண்டு மணித்தியாலங்கள் கூட நிறைவடையாத நிலையில் குறித்த மலிவு விற்பனை நிலையத்தினை மூடும் படி தமக்கு பௌத்த பிக்குகளிடமிருந்து அழுத்தம் வருவதாகவும் இதனால் தொடர்ந்து அங்கு வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது எனவும் தொலைபேசியில் தொடர்ப்புகொண்ட நகரசபை தலைவர் என்னிடம் தெரிவித்தார்.
பின்னர் நகரசபை தலைவரை நேரில் சந்தித்து விபரங்களை அறிந்துகொண்டேன். இதற்கமைய ஜனாதிபதி ஆலோசகரும் பிலியந்தல பிரிவெனா விகாரையின் விகாராதிபதியுமான மெதகொட அபே திஸ்ஸ தேரர் மற்றும் பிலியந்தல கட்டுவாவெல விகாரை விகாராதிபதி தொபித்தர தமித தேரர் ஆகியோரின் அழுத்தம் காரணமாகவே வியாபார நடவடிக்கையை முன்னெடுப்பதில் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்விவகாரம் தெடர்பில் கடந்த நோன்புப் பெருநாள் தினத்தன்று ஜனாதிபதி ஆலோசகரான மெதகொட அபே திஸ்ஸ தேரரை நேரில் சந்தித்து கலந்தாலோசித்தேன். எனினும் தமது வியாபார நடவடிக்கை முன்னெடுப்பது தொடர்பில் அவர்களுக்கு விருப்பம் இருக்கவில்லை. அத்தோடு 'தர்கா நகரை ஆக்கிரமித்துள்ளதுபோல் பொரளஸகமுவவையையும் முஸ்லிம்கள் ஆக்கிரமிக்க முற்படுவதை அனுமதிக்க முடியாது. இங்கு பள்ளிவாசல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதனை அங்கிருந்து அகற்றுவதற்கு நீங்கள் பங்களிப்பு செய்தால் உங்களுக்கு வியாபார நடவடிக்கையை அனுமதிக்கலாம்' என தெரிவித்தார். அதற்கு நான் இணங்கவில்லை. அத்தோடு தொபித்தர தமித தேரரை தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு உரையாடினே அவரும் அபே திஸ்ஸ தேரர் கூறியதுபோன்றே கூறினார்.
நாட்டில் எந்த பிரதேசத்திலும் சட்ட ரீதியான வியாபாரத்தை ஆரம்பிப்பதற்கு சட்டத்தில் அனுமதியிருக்கின்றது. இதனை அமுல்படுத்தக்கோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்தேன். இந்நிலையில் நேற்று முன்தினம் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் இருவர் வந்து இவ்விடயம் தொடர்பில் விசாரித்தனர் என்றார்.
பள்ளிவாசலை அகற்ற உதவினால் வியாபாரத்தில் ஈடுபட அனுமதிக்கலாம் - பிக்குகள் வற்புறுத்தல்
Thursday, August 14, 20140 comments
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment