அரசானது தமிழ் - முஸ்லிம் மக்களின் பூர்வீக காணிகளை விற்று எவ்வாறு வெளிநாட்டு நிறுவனங்களை நிறுவி வருகின்றதோ அவ்வாறே பௌத்த விகாரைகளை அப்புறப்படுத்தி அதற்கு சொந்தமான காணிகளையும் கைப்பற்றி இதனையும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்க முயற்சித்து வருவதாக தெஹிவளை கல்கிசை மாநகர சபை உறுப்பினரும் நவசமசமாஜ கட்சியின் தலைவருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தின தெரிவித்தார்.
நவசமசமாஜ கட்சியின் தலைமை காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே விக்கிரமபாகு கருணாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
அரசானது வடகிழக்கில் எவ்வாறு தமிழர்களின் பூர்வீக காணிகளை சுவீகரித்து இராணுவ தேவைக்கு பயன்பெற்று வருகின்றதோ அவ்வாறே இன்று பௌத்த விகாரைகளையும் கைப்பற்றி வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்க முயற்சிக்கின்றது. மறுபுறம் அரசின் ஊழல் செயற்பாடுகளினால் அரச கூட்டுத்தாபனங்கள் அரச நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்படும் நிலைமை காணப்படுகின்றது. இவ்வாறு நிறைவேற்று அதிகாரத்தை தம்மிடம் வைத்துக்கொண்டு அரசானது நாட்டை பயங்கரமான நிலைக்கு கொண்டு செல்கின்றது.
அரசும் அரச குடும்பத்தை சார்ந்தவர்களும் தத்தமது பிள்ளைகள் நாம் என்று சுயநலம் கருதி செயற்பட்டு எமது நாட்டு மக்களையும் நாட்டையும் அசௌகரியத்திற்கு இட்டு செல்கின்றார்கள். நிறைவேற்று அதிகாரத்தை நாட்டில் செயல்படுத்தும் முன்பே நாம் இதனை கொண்டு வருவதனை எதிர்த்தோம். நிறைவேற்று அதிகாரத்தை நாட்டில் செயல்படுத்த ஜனாதிபதிக்கு அனுமதிக்கக்கூடாது என நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினோம். அப்போது அதனை எந்த கட்சியும் செவிமடுக்கவில்லை. இப்போது அதன் பலனை அனைவரும் அனுபவிக்கின்றனர். எமது முன்னைய தேசத் தலைவர்கள் இருந்திருந்தால் இந்த அரசின் செயற்பாடுகளை பார்த்து வெட்கப்பட்டிருப்பார்கள்.
எமது நாட்டில் சுபீட்சமான ஒரு நிலைமை மக்களின் எதிர்காலம் மிகவும் நல்ல நிலைமையை எட்ட வேண்டுமானால் சிறந்த ஒரு ஆட்சி மாற்றம் தேவை என அவர் தெரிவித்தார்.

Post a Comment