முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இழக்கச் செய்வதே அரசின் திட்டம். ஐ.தே.க.வில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்று உறுதியாக இருக்கின்ற நிலையில் அதனை தடுக்கவே முஸ்லிம் கூட்டணியொன்றை ஊவாவில் அரசு களமிறக்கியுள்ளது. இதன் மூலம் முஸ்லிம் கட்சிகள் காட்டிக்கொடுப்பொன்றை செய்துவிட்டதாக முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டினார்.
ஊவா மகாண சபை தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் எந்தவொரு முஸ்லிம் வேட்பாளரும் களமிறக்கப்படாத நிலையில் சில முஸ்லிம் தலைமைகள் காட்டிக்கொடுக்கும் செயற்பாடுகளில் களமிறங்கியுள்ளனர் என மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
வெலிமடை – சில்மியாபுரத்தில் ஐ.தே.க ஊவா மாகாண சபை வேட்பாளர்களான அமீர் மொஹமட் மற்றும் ரவி சமரவீர ஆகியோரை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
ஊவா மாகாண சபை தேர்தல் முக்கியமானதோர் தேர்தலாகும். ஏனெனில் அடுத்து வரப்போகும் ஜனாதிபதி தேர்தலை இத்தேர்தலே தீர்மானிக்கவுள்ளது.
நாட்டில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு பல அசெளகரியங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அத்தோடு சிங்கள மக்கள் கூட இந்த அரசாங்கத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்த முடியாமலுள்ளது. இந்த அளவிற்கு அத்தியாவசிய பொருட்களினது விலையும் சேவைகளினது கட்டணங்களும் பாரிய அளவில் அதிகரித்துள்ளன.
அதேவேளை, முஸ்லிம்கள் நீண்ட காலமாக ஐ.தே.கட்சியையே ஆதரித்து வந்துள்ளனர். தொடர்ந்து ஐ.தே.க. விற்கு செல்லும் வாக்கினை தடுப்பதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இன்றும் அதற்கான சதித்திட்டமொன்று தீட்டப்படுகின்றது.
அரசாங்கத்தில் முஸ்லிம் வேட்பாளர்கள் களமிறக்கப்படாது தேசிய ஐக்கிய முன்னணியில் களமிறக்கப்பட்டுள்ளனர். இது அரசாங்கத்தின் பிற்போக்கு தனத்தையும் முஸ்லிம் கட்சிகளின் காட்டி கொடுப்பையுமே வெளிப்படுத்துகின்றன.
வெறுமனே அரசாங்கத்தின் வெற்றியை உறுதி செய்து முஸ்லிம பிரதிநிதித்துவத்தை இழக்கச்செய்வதே முஸ்லிம் கூட்டணியொன்று களமிறக்கப்பட்டமைக்கு காரணமாகும்.
ஏனெனில் குறித்த கூட்டணியால் ஆசனங்களை பெற முடியாது என்பது அரசுக்கு தெ ளிவாக தெரிந்து விட்டது. எனினும் ஐ.தே.க. ஊடாக முஸ்லிம் பிரதிநிதித்துவம் கிடைப்பதும் அரசுக்கு பிடிக்கவில்லை. இதற்காகவே இரட்டை இலை சின்னத்தில் முஸ்லிம் கட்சியொன்று களமிறக்கப்பட்டுள்ளது. இந்த துரோகம் குறித்து மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்
.jpg)
Post a Comment