ஊவாவில் இரட்டை இலை: மாறு வேடத்தில் கூட்டு நாடகம் (சிறப்புகட்டுரை)

Friday, August 22, 20140 comments


எஸ்.றிபான்

ஊவா மாகாண சபைத் தேர்தல் ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணிக்கு மற்­று­மொரு சோதனைக் கள­மாகும். ஏற்­க­னவே இவ்­வாண்டு நடை­பெற்ற மேல் மாகாண சபைத் தேர்­தலில் ஐ.ம.சு.முன்­னணி ஆட்­சியை கைப்­பற்றிக் கொண்­டாலும், 2009 ஆம் ஆண்டு மேல் மாகாண சபைக்கு நடை­பெற்ற தேர்­தலை விடவும் சுமார் 11 வீத­மான வாக்­கு­களை குறை­வா­கவே பெற்­றுள்­ளது. இதே போன்­றுதான் 2014 ஆம் ஆண்டு நடை­பெற்ற தென் மாகாண சபைத் தேர்­த­லிலும் அர­சாங்­கத்தின் செல்­வாக்கு சுமார் 10 வீதத்­தினால் வீழ்ச்­சி­ய­டைந்து காணப்­பட்­டது.

இந்­நி­லையில், ஊவா மாகாண சபைத் தேர்­த­லிலும் அர­சாங்­கத்தின் செல்­வாக்கு வீழ்ச்­சி­டைந்தால் எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் அல்­லது ஜனா­தி­பதித் தேர்­தலில் ஐ.ம.சு.முன்­னணி பெரும் சவாலை எதிர்க்­கட்­சி­க­ளிடம் இருந்து எதிர் கொள்ள வேண்­டி­யேற்­படும். 2009 ஆம் ஆண்டு நடை­பெற்ற ஊவா மாகாண சபைத் தேர்­தலில் ஐ.ம.சு.முன்­னணி 72.39 வீத வாக்­கு­களைப் பெற்று ஆட்­சியை கைப்­பற்றிக் கொண்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

அர­சாங்­கத்­திற்கு இருக்­கின்­ற ­இச்­சூழ்­நி­லையில் அர­சாங்­கத்தை எவ்­வ­ள­வுதான் திட்டித் தீர்த்துக் கொண்­டாலும், இறு­தியில் அர­சாங்­கத்­தினை கட்டிப் பிடித்துக் கொண்­டி­ருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸும், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸும் தங்­களை நண்­பர்கள் என்று காட்­டு­வ­தனை விடவும் ஆளுக்கு ஆள் எதி­ரிகள் என்று தமது ஆத­ர­வா­ளர்­க­ளிடம் காட்டிக் கொள்­வ­த­னையே பெரு­மை­யாக நினைத்து கொண்­ட­வர்கள். கீறியும் பாம்­பு­மாக செயற்­பட்­ட­வர்கள். வட­மா­காண சபை, மேல் மாகாண சபைத் தேர்­தல்­களில் இக்­கட்­சியின் தலை­வர்­களும், ஆத­ர­வா­ளர்­களும் மோதிக் கொண்ட சம்­ப­வங்­களும் உள்­ளன.


இத்­த­கைய வரலாறுகளைகொண்ட இரு கட்­சி­களும் முஸ்­லிம்­களை பல தட­வைகள் ஏமாற்­றி­யுள்­ளன. ஒரு கட்­சியின் அழி­வில்தான் மறு­கட்­சியின் வாழ்வு இருக்­கின்­ற­தென்று மடித்துக் கட்டிக் கொண்டு செயற்­பட்­ட­வர்கள் ஊவா மாகாண சபைத் தேர்­தலில் கூட்­டாக துஆ கட்­சியின் இரட்டை இலைச் சின்­னத்தில் போட்­டி­யிட இருக்­கின்­றனர்.

இக்­கட்­சிகள் தேர்­தலில் கூட்டு வைத்­துள்­ள­மையை வர­வேற்­கவே வேண்டும். ஆனால், இக்­கூட்டு, சமூ­கத்தின் பாது­காப்பு, நலன்கள் போன்­ற­வற்றை கருத்திற் கொண்டு எடுக்­கப்­பட்­ட­தொரு தீர்­மா­ன­மாக பார்க்க முடி­யா­துள்­ளது. ஏனெனில், இவ்­விரு கட்­சி­களும் பௌத்த இன­வா­தி­க­ளினால் முஸ்­லிம்கள் எதிர்­கொண்ட பிரச்­சி­னைகள் பற்றி பலத்த கண்­டன அறிக்­கை­களை விடுத்­தாலும், ஐ.நாவிற்கு அறிக்கை அனுப்பி வைத்­தாலும், அவற்றின் மூல­மாக அர­சியல் இலாபம் அடைந்து கொள்­ளவே விரும்­பு­கின்­றன. மாறாக ஆளுத் தரப்­புக்கு அழுத்­தங்­களை கொடுத்து, முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு குறைந்த பட்ச தீர்­வு­க­ளை­யா­வது பெற்றுக் கொடுப்­ப­தற்கு முடி­யாத கட்­சி­க­ளா­கவும், அர­சாங்­கத்தில் இருந்து கிடைத்துக் கொண்­டி­ருக்கும் சொகு­சு­க­ளுக்கு வாய் திறந்து கொண்­டி­ருப்­ப­வர்­க­ளா­க­வுமே தங்­களை அடை­யா­ளப்­ப­டுத்திக் கொண்டு வந்­துள்­ளார்கள்.


அளுத்­கம, தர்கா நகர் மற்றும் பேரு­வ­ளையில் நடை­பெற்ற சம்­ப­வங்கள் பற்றி பிர­தமர் பிழை­யான தக­வல்­களை பாரா­ளு­மன்­றத்தில் முன் வைத்த போது கூட, இக்­கட்­சி­களின் மக்கள் பிர­தி­நி­திகள் மௌன­மா­கவே இருந்­தார்கள். தம்­புள்ள பள்­ளி­வா­சலை பாது­காப்போம் என்­றார்கள். இன்று வரைக்கும் அப்­பள்­ளி­வாசல் ஆபத்­தான நிலை­யி­லேயே இருந்து கொண்­டி­ருக்­கின்­றது. முஸ்­லிம்கள் தங்­களின் மத­வி­ழு­மி­யங்­களைப் பின்­பற்றி நடப்­பதில் பாரிய அச்­சு­றுத்­தல்­களை எதிர்­கொண்­டுள்­ளார்கள். இவைகள் பற்றி எந்த ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­க­ளையும் எடுக்க இய­லா­த­வர்­க­ளா­கவே அர­சாங்­கத்தில் இருந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள். ஆனால், பள்­ளி­வா­சல்­களின் மூல­மாக பொது மக்கள் வழங்­கிய பொருட்­களை பேரு­வளை பகு­திக்கு கொண்டு சென்று, அதனை தங்­களின் முயற்­சி­க­ளினால் பெறப்­பட்­ட­தாகக் காட்டி போட்­டோவும் பிடித்துக் கொண்­டார்கள்.

இந்த குணப்­பண்­பு­களைக் கொண்ட இக்­கட்­சிக்­கா­ரர்கள் ஊவா மாகாண சபைத் தேர்­தலில் கூட்டு வைத்து போட்­டி­யி­டு­கின்­றார்கள் என்றால், முஸ்­லிம்­களை ஏமாற்­று­வ­தற்கு மற்­று­மொரு அடித்­த­ளத்தை போட்­டுள்­ளார்கள் என்­ப­துதான் உண்­மை­யாகும். அர­சாங்­கத்தின் முழு­மை­யான அங்­கீ­கா­ரத்தின் அடிப்­ப­டை­யி­லேயே மு.கா, அ.இ.ம.காவும் இணைந்து இரட்டை இலைச் சின்­னத்தில் போட்­டி­யி­டு­கின்­றன.

முஸ்­லிம்­களின் மீது பௌத்த இன­வா­தி­களும், இன­வாத அமைப்­புக்­களும் நாளாந்தம் மேற்­கொண்டு வரு­கின்ற எதிர் நட­வ­டிக்­கைகள் கார­ண­மாக முஸ்­லிம்கள் அர­சாங்­கத்தின் மீது வெறுப்­ப­டைந்­துள்­ளார்கள். முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக செயற்­பட்டுக் கொண்­டி­ருக்கும் நபர்­களை சட்­டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்ற மக்­களின் கோரிக்­கைகள் இன்னும் பாக்­கி­யா­கவே இருந்து கொண்­டி­ருக்­கின்­றது. இதனை செய்­வ­தற்கு அர­சாங்­கத்தில் உள்ள முஸ்லிம் கட்­சி­களும், அமைச்­சர்­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் துணி­வ­தற்கு பதி­லாக கூனிக்­கு­றுகி நிற்­கின்­றார்கள்.


இதனால், முஸ்­லிம்கள் முஸ்லிம் கட்­சி­களின் மீதும், முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களின் மீதும் கோபமும், வெறுப்பும் கொண்­ட­வர்­க­ளா­கவே உள்­ளார்கள்.

முஸ்­லிம்­களின் இந்த மனோ நிலையை மத்­திய மாகாண சபை, வடமேல் மாகாண சபை, மேல் மாகாண சபை ஆகி­ய­வற்றின் தேர்­தல்­களில் அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக இருந்­தது. முஸ்­லிம்­களின் அநே­க­மான வாக்­குகள் எதிர்­கட்­சி­களில் போட்­டி­யிடும் முஸ்லிம் வேட்­பா­ளர்­க­ளுக்கே அளிக்­கப்­பட்­டன.
முஸ்­லிம்­க­ளிடம் காணப்­ப­டு­கின்ற இந்த மன­மாற்­றத்தை தெளி­வாக அறிந்து கொண்ட ஆளுந் தரப்­பினர் மு.காவையும், அ.இ.மு.காவையும் இணைந்து போட்­டி­யி­டு­வ­தற்கும் ஆசிர்­வாதம் வழங்­கி­யுள்­ளார்கள்.


மேற்­படி இரு முஸ்லிம் கட்­சி­களைப் பொறுத்த வரை ஊவா மாகாண சபைத் தேர்­தலில் தனித் தனியே போட்­டி­யிட்­டாலும், அர­சாங்­கத்­துடன் இணைந்து போட்­டி­யிட்­டாலும் கணி­ச­மான வாக்­கு­களைப் பெற்றுக் கொள்ள முடி­யாது. எதிர்­கட்­சியில் போட்­டி­யிடும் முஸ்லிம் வேட்­பா­ளர்கள் கணி­ச­மான வாக்­கு­களை மத்­திய மாகாண சபைத் தேர்­தலில் பெற்றுக் கொண்­ட­தனைப் போன்று பெற்­று­வி­டு­வார்கள் என்ற எடு­கோளின் அடிப்­ப­டை­யி­லேயே எதிரும், புதி­ரு­மாக முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு வெற்று அறிக்­கை­களை விடுத்துக் கொண்­டி­ருந்த மு.காவும், அ.இ.ம.காவும் அதி­கார தரப்­பி­னரின் ஏவ­லுக்கு அமை­வாக கூட்டு வைத்­துள்­ளார்கள்.

அதி­காரத் தரப்­பி­னரின் எண்­ணங்­க­ளுக்கு உயி­ரூட்­டு­வ­தற்­காக களம் இறங்­கி­யுள்ள இக்­கட்­சிகள் வெறு­மனே ஊவா மாகாண சபைத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்­காக மட்­டுமே இணைந்­துள்­ளன. மாறாக, கொள்கை அடிப்­ப­டையில் எதிர்­கால திட்­டங்­களை வகுத்துக் கொள்­ள­வில்லை. ஊவா மாகாண சபையில் முஸ்­லிம்­களின் பிர­தி­நி­தித்­து­வத்தைப் பெற்றுக் கொள்ள வேண்­டு­மென்று தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். ஊவா மாகாண சபையில் முஸ்லிம் வேட்­பா­ளர்­களை இக்­கட்­சி­களின் கூட்டு மூல­மாக பெற்றுக் கொண்டால் முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் தீர்ந்து போய்­வி­டாது. எதிர் கால திட்­டத்தின் அடிப்­ப­டையில் ஒரு உடன்­ப­டிக்கை மூல­மாக முஸ்லிம் சமூ­கத்­தினை மையப்­ப­டுத்தி இனி­வரும் அனைத்து தேர்­த­லிலும் முஸ்லிம் கட்­சிகள் இணைந்து போட்­டி­யிட வேண்டும். எந்த சக்­திக்கு பணிந்து செல்ல முடி­யாத வகையில் கொள்­கைகள் வகுக்­கப்­பட வேண்டும். ஆனால், இவை போன்ற எதுவும் இல்­லாது ஒரு தேர்­தலை சந்­திப்­ப­தற்கு தயா­ராக நிற்­கின்­றார்கள். இந்த கூட்டால் முஸ்­லிம்­க­ளுக்கு நன்­மைகள் இருப்­ப­தாக தெரி­வித்­தாலும், அர­சாங்­கத்­திற்கு அதிக பலன் கிடைக்க இருக்­கின்­றது.

அர­சாங்­கத்­திற்கு எதி­ராக முஸ்­லிம்­க­ளினால் எதிர்க் கட்­சிக்கு அளிக்­கப்­ப­ட­வுள்ள வாக்­கு­களில் ஒரு தொகையை மு.கா, அ.இ.ம.காவின் கூட்டு பெற வேண்­டு­மென்­பதே அர­சாங்­கத்தின் திட்­ட­மாகும். இதன் மூல­மாக அர­சாங்­கத்தின் வெற்றி வாய்ப்பை அதி­க­ரிக்க முடியும் என்­பதில் ஐய­மில்லை.
மு.காவைப் எடுத்துக் கொண்டால், இன்­றைய அர­சாங்­கத்­திற்கு எதி­ராக பிரச்­சாரம் செய்தே அதிக வாக்­கு­களைப் பெற்று வெற்றி வாய்ப்­புக்­களை அதி­க­ரித்துக் கொண்­டது. பல தேர்­தல்­களில் இவ்­வி­த­மாக செயற்­பட்ட இக்­கட்­சி­யினால், எதிர்­வரும் காலங்­களில் அர­சாங்­கத்தை விமர்­சனம் செய்து வாக்­கு­களை பெற முடி­யாது. வாக்­கு­களை பெற்றுக் கொள்­வ­தற்­காக நாடகம் ஆடிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள் என்று மக்கள் தெளி­வ­டைந்­துள்­ளார்கள். இதனை சரி­யாக எடை­போட்டுக் கொண்ட மு.கா தன்னை அழிப்­ப­தற்கு அதி­காரத் தரப்பின் முழு­மை­யான ஆத­ர­வுடன் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்கும் அ.இ.ம.காவுடன் கூட்டு வைத்­துள்­ளது.

இது போதா­தென்று மு.காவை அழிப்­ப­தற்கு புறப்­பட்ட நசீர் அஹ­மட்டின் தலை­மை­யி­லான துஆ கட்­சியின் இரட்டை இலைச் சின்­னத்தில் போட்­டி­யி­டு­வ­தற்கும் மு.கா விட்டுக் கொடுப்பை செய்­துள்­ளது. ஊவாவில் தமக்கு இருக்­கின்ற குறைந்­த­பட்ச ஆத­ர­வுடன் அ.இ.ம.காவுடன் கூட்டு வைத்தால் தமது வேட்­பா­ளரை வெற்றி பெறச் செய்ய முடி­யு­மென்று மு.கா கருதிக் கொண்­டாலும், இதனை ஒரு அர­சியல் கட்­சியின் திட்­ட­மாக பார்க்க வேண்­டு­மே­யன்றி, முஸ்­லிம்­களின் எதிர்­கா­லத்­திற்­கு­ரி­ய­தாக கூற முடி­யாது.

இவ்­விரு கட்­சி­களும் எடுத்துக் கொண்ட முடிவால் நசீர் அஹ­மட்தான் அதிக நன்­மை­களை பெற­வுள்ளார். அவர் மு.காவில் இணைந்து கொண்­டதன் பின்னர் துஆ கட்சி இயங்­காது. அக்­கட்சி இனி அவ­சி­ய­மில்லை என்று ஒரு சில மு.காவினர் தெரி­வித்துக் கொண்­டார்கள். ஆனால், தற்­போது இரட்டை இலை ஊவா மாகாண சபைத் தேர்­தலில் போட்­டி­யிடும் தகு­தியை பெற்­றுள்­ளது.

தமிழர் தரப்­பினர் தங்­களின் எதிர் கால சமூக நலனை கருத்திற் கொண்டு, தங்­களின் ஆரம்ப கட்­சி­யா­கவும், பல­ராலும் பாராட்­டப்­படும் தந்தை செல்­வாவின் கட்­சி­யான தமி­ழ­ரசுக் கட்­சி­யையும் அதன் வீட்டுச் சின்­னத்­தையும் முன் வைத்து தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பை உரு­வாக்­கி­னார்கள். இதனை கொள்­கையின் அடிப்­ப­டையில் நிறு­வி­யுள்­ளார்கள். இக்­கூட்­ட­மைப்பில் உள்ள கட்­சி­க­ளி­டையே கொள்கை அடிப்­ப­டையில் அதிக வேறு­பா­டு­களை காண முடி­யாது.
ஆனால், எல்­லோ­ராலும் மதிக்­கப்­ப­டு­கின்ற மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப் ஆரம்­பித்த கட்­சியின் மரச்­சின்­னத்­தையும், கட்­சி­யையும் வைத்து ஒரு உடன்­ப­டிக்கை செய்து கொள்­ளாது இரட்டை இலையை தெரிவு செய்து இருப்­பது இக்­கட்­சி­களின் கூட்டு ஒரு தற்­கா­லி­க­மா­னது என்­ப­தனை காட்­டு­கின்­றது. இலங்கை முஸ்­லிம்­க­ளி­டையே அதிகம் பரிச்­ச­ய­மா­னது மு.காவின் மரச்­சின்­ன­மாகும். ஆதலால், மரச்­சின்­னத்தில் போட்­டி­யிட்டு இருந்தால் அதிக பலனை கொடுக்கும்.

மேலும், மரச்­சின்­னத்தில் இணைந்து போட்­டி­யி­டு­வ­தற்கு முன் வரா­தது, அஸ்­ரப்பின் கொள்­கைகள் இக்­கட்­சி­க­ளிடம் எந்த இடத்தில் உள்­ள­தென்று தெளி­வா­கின்­றது.

முஸ்லிம் கட்­சிகள் ஒற்­று­மை­யுடன் செயற்­பட வேண்டும். முஸ்­லிம்­களின் வாக்­குகள் பிள­வு­பட்டால், சமூ­கத்தில் இருப்பும், அர­சியல் பலமும் பல­வீ­னப்­பட்­டு­விடும். இது முஸ்­லிம்­க­ளுக்கு ஆபத்தை ஏற்­ப­டுத்தும். ஆதலால், முஸ்லிம் கட்­சி­களும் தலை­வர்­களும் சமூ­கத்தின் நன்­மைக்­காக ஒற்­று­மைப்­பட வேண்­டு­மென்று பல தட­வைகள் முஸ்லிம் அமைப்­புக்­க­ளினால் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. ஆனால், அவற்றை ஏற்று நடக்கும் பக்­குவம் முஸ்லிம் தலை­வர்­க­ளுக்கு இருக்­க­வில்லை. தங்­களை பெரும் சக்­தி­யாக கணிப்­பிட்டுக் கொண்­டார்கள். ஒற்­றுமை பற்றி பேசி­ய­வர்­களை தட்டிக் கழித்­தார்கள்.

2009ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைக்கு தேர்தல் நடை­பெற திகதி குறிக்­கப்­பட்ட போது, கிழக்கு மாகாண சபைக்கு முஸ்லிம் முத­ல­மைச்­சரை பெற வேண்டும். முஸ்லிம் கட்­சிகள் யாவும் ஓர­ணியில் இணைந்து போட்­டி­யிட வேண்­டு­மென்று ஒரு குழு­வினர் முயற்­சி­களை எடுத்­தார்கள். ஆனால், இதற்கு ஒரு கட்­சியும் ஒத்­து­ழைக்­க­வில்லை.

மு.கா மரச்சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்றது. மற்றைய கட்சிகள் பொதுச்சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்றும், அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட வேண்டுமென்றும் இரு திட்டங்களை கொண்டிருந்தார்கள். இறுதியாக தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமைந்ததென்று சொல்ல வேண்டியதில்லை.

தங்களின் சுயநலன்களுக்கு முன்னுரிமை வழங்கி பல கட்சிகளை தொடங்கினார்கள். விட்டுக் கொடுப்பதற்கு முன் வராது இருந்தார்கள். எல்லோரும் அமைச்சர்களாக வேண்டுமென்று ஆசைப்பட்டார்கள். ஒவ்வொருவரும் தங்களுக்கென தனியான அஜண்டாவை வைத்துக் கொண்டு செயற்பட்டு, முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பலத்தை பிளவுபடுத்திக் கொண்டவர்கள், முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பலத்தை மீளவும் கட்டி எழுப்புவதற்கு திட்டமிடாது, ஊவா மாகாண சபைத் தேர்தலை மட்டும் கருத்திற் கொண்டு, இணைந்து நிற்பது ஆளுந் தரப்புக்கு இலாபங்களை பெற்றுக் கொடுப்பதற்கே. அரசாங்கத்தில் உள்ள முஸ்லிம் கட்சிகளும், தலைவர்களும் தனித்துப் போட்டியிடுவதும், இணைந்து போட்டியிடுவதும், அரசாங்கத்தை விமர்சனம் செய்வதும் முஸ்லிம் சமூகத்தின் நன்மைக்காகவல்ல. மாறாக ஆளுந் தரப்பினது நன்மைக்கும், தாங்கள் அரசியல் பிழைப்பு நடத்த வேண்டும் என்பதனாலுமாகும்.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham