ரமழானுக்கு பின்பு தமிழ் மொழிதின போட்டிகளை நடத்துங்கள் - இஸ்லாமிய ஆசிரியர் சங்கம்
Sunday, July 6, 20140 comments
தமிழ் மொழித்தின தேசிய மட்டப் போட்டிகளை புனித ரமழான் நோன்பிற்குப் பின்னர் நடாத்துமாறு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சைக் கேட்டுள்ளதாக அதன் தேசியத் தலைவர் எம். அனஸ் தெரிவித்தார்.
இது தொடர்பாக இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,
அகில இலங்கை தமிழ்த் தினப் போட்டிகள் 2014 ஜூலை மாதம் 19,20ஆம் திகதிகளில் மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்திலுள்ள கொட்டகலையில் இடம்பெற வேண்டும் என்று குறிப்பிட்டு, 29ஃ 2013ஆம் இலக்கச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், பரிசளிப்பு விழாவை ஜூலை மாதம் 26ஆம் திகதி நடாத்தப்பட வேண்டும் எனவும். அகில இலங்கை தமிழ்மொழித் தினம் 2014-2018 க்கான 2013ஃ33ஆம் இலக்க சுற்றறிக்கையின் பின்னிணைப்பில் பாடசாலைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் மொழி மற்றும் மானுடவியற் கல்விக்கிளை, தமிழ் மொழித் தின தேசிய மட்டப் போட்டிகளை, நடாத்தத் திட்டமிட்டுள்ள காலம், முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாந் தவணை ரமழான் நோன்பு கால விடுமுறைக்குள் வருவதால் சங்கம் இக்கோரிக்கையை விடுத்துள்ளது.
அத்துடன், இப்போட்டிகளை நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ள இடம் பருவகால மழைவீழ்ச்சியினால் இயல்பு நிலை அதிகளவில் பாதிக்கப்படக்கூடிய பகுதியாக இருப்பதனாலும் இக்கோரிக்கை விடுக்கப்படுகிறது.
இதுதவிர, முஸ்லிம் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் தங்கி நோன்பு நோற்கக்கூடிய சுற்றுச்சூழல் வசதி வாய்ப்புக்கள் அற்ற பிரதேசமாகவும் போட்டி நடாத்துமிடமுள்ளது.
அத்தோடு, முஸ்லிம் மாணவர்கள் நோன்பு நோற்றுக் கொண்டு, தூரப்பிரயாணம் செய்து, உற்சாகமாக போட்டிகளில் பங்கேற்பார்கள் என்றும் எதிர்பார்க்க முடியாது.
எனவே, இந்நிலைமைகளைக் கருத்திற் கொண்டு, போட்டித் திகதியை மாற்றி, ரமழான் நோன்பிற்குப் பின்னரான தினமொன்றில் நடாத்துமாறும், அதனை வழமை போன்று கொழும்புப் பிரதேசத்தில் நடாத்துமாறும், அல்லது அனைத்து மாணவர்களும் இலகுவில் பங்கேற்கக்கூடிய வேறு இடமொன்றில் நடாத்துமாறும் சங்கம் மாணவர்கள் சார்பாகக் கோரிக்கை விடுக்கின்றது என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment