பொதுவேட்பாளராக களமிறங்க சந்திரிகா தயாராகின்றாரா - சமிஞ்சை வெளிப்டுத்துகிறார்
Sunday, July 6, 20140 comments
ஜனாதிபதித் தேர்தல் அடுத்தவருட முற்பகுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பொது வேட்பாளராக தான் போட்டியிடுவது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க முதல் முறையாகக் கருத்து வெளியிட்டுள்ளார்.
கொழும்பு ஹில்ட்டன் ஹோட்டலில் நடைபெற்ற அமெரிக்காவின் சுதந்திர தின வைபவத்தில் கலந்து கொண்டிருந்த போதே முக்கிய அரசியல் தலைவர்கள் முன்னிலையில் இது குறித்த தன்னுடைய நிலைப்பாட்டை சந்திரிகா குமாரதுங்க வெளிப்படுத்தினார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஐ.தே.க.வின் பிரமுகர்களான ரவி கருணாநாயக்க, மங்கள சமரவீர, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் ஆகியோர் சந்திரிகாவை சூழ்ந்து சமகால அரசியல் நிலைமைகள் குறித்து ஆராய்ந்து கொண்டிருந்த போதே பொது வேட்பாளர் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடுவாரா எனக் வினவிய போது, எதிர்க்கட்சிகள் இணைந்து பொதுவான வேலைத்திட்டம் ஒன்றுடன் இதற்காகச் செயற்பட வேண்டும் என்று பொருள்பட சந்திரிகா பதிலளித்தார்.
இந்த இடத்தில் குறுக்கிட்ட மனோகணேசன் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் உங்களுக்கு முக்கியமான பங்கொன்றுள்ளது என சந்திரிகாவுக்கு சுட்டிக்காட்டியதுடன், அந்த முக்கியமான பங்கை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்த சந்திரிகா, 'தற்போதைய ஜனாதிபதியை பதவிக்குக் கொண்டு வந்தவர் என்ற முறையிலா அவ்வாறு கூறுகிறீர்கள்' எனக் கேள்வி எழுப்பினார். உரிய தருணம் வரும்போது உரிய பங்களிப்பை வழங்குவேன் எனவும் பிடிகொடுக்காமல் சந்திரிகா பதிலளித்தார்.
ஜனாதிபதித் தேர்தலை உரிய காலத்துக்கு முன்னதாக நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருகின்றது. இதில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்து பேசப்படுகின்ற போதிலும், அதில் இறுதியான தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை. சந்திரிகா குமாரதுங்கவின் பெயர் முக்கியமாகப் பேசப்படுகின்ற போதிலும், இது குறித்து தன்னுடைய நிலைப்பாட்டை பகிரங்கமாக வெளியிடுவதை சந்திரிகா தவிர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் எதிர்க்கட்சி முக்கியஸ்தர்கள் முன்னிலையில் சந்திரிகா தற்போது வெளியிட்டுள்ள கருத்துக்கள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment