யாழ்ப்பாணத்தை போன்று பேருவளையிலும் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுபலசேனாவிற்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்ற கோத்தபாய ராஜபக் ஷவின் கேலிக்கையான கருத்தை நாங்கள் நம்ப தயாரில்லை என நவசமசமாசக் கட்சியின் தலைவரும், தெஹிவளை நகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தின்படி சுகாதார துறையின் பிரச்சினைகளை மூடி மறைக்க தாதியர்களுக்கும் குடும்ப நல ஊழியர்களுக்குமிடையே அரசு பிரச்சினைகளை தோற்றுவிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
கொழும்பில் அமைந்துள்ள நவசமசமாஜக் கட்சியின் தலைமை காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
தற்போது நாட்டில் சுகாதார துறையில் பாரிய குழறுபடிகளுக்குள் சிக்கிக்கொண்டுள்ளது. தாதியர்களுக்கும் குடும்ப நல ஊழியர்களுக்குமிடையேயான பிரச்சினை தொடர்பில் தெரிந்தும் தெரியாதது போல் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன செயற்படுகிறார். இப்பிரச்சினையை பேசி தீர்மானிக்க முடியாது.
இப்பிரச்சினை தொடர்பில் புதிய வடிவிலான சுற்றறிக்கை வெளியிடப்பட வேண்டும். இதேவேளை சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி சுகாதார துறையிலுள்ள பதவி உயர்வு, சம்பள நிலுவை போன்ற பிரச்சினைகளை மூடிமறைக்க தாதியர்களுக்கும் குடும்பநல ஊழியர்களுக்குமிடையே பிரச்சினையை தோற்றுவிக்கும் வகையில் அரசு செயற்பட்டு வருகிறது. அதேபோன்று நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி வருமானத்திலிருந்து கல்விக்கான நிதி குறைந்தளவிலேயே ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
கோத்தபாயவின் கருத்து தொடர்பில்
இந்நிலையில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ தனக்கும் பொதுபலசேனாவிற்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்று கூறுகிறார். அவ்வாறு கூறிய பின்புதான் குற்றப்புலனாய்வு பிரிவு பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரிடம் விசாரணை செய்கிறது. அதேபோன்று, இலகுவில் பெற்றுக்கொள்ள முடியாத விசாவினையும் அமெரிக்கா தடை செய்துள்ளது.
ஆகவே, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவின் கேலிக்கை மிகுந்த கருத்தினை நம்பத் தயாரில்லை. பொதுபலசேனா அமைப்புக்கும் கோத்தபாய ராஜபக் ஷவுக்குமிடையே உள்ள தொடர்புகள் சம்பந்தமான ஆதாரங்கள் தம்மிடம் இல்லையென்றாலும் அவ் அமைப்புடன் பாதுகாப்பு செயலாளருக்கு தொடர்பு இருக்கும் என்பதை செயலில் வைத்து கண்டுபிடித்து விட முடியும்.
அளுத்கம கலவரத்தின்போது பாதுகாப்பு பிரிவினர் செயற்பட்ட விதத்தையும் பொதுபலசேனாவுக்கு அளுத்கமவில் ஊர்வலம் செய்வதற்கு அனுமதி வழங்கியதிலிருந்து இது பாதுகாப்பு செயலாளரின் நடவடிக்கையென தெரிகிறது.
இக்கலவரத்திற்கு நாடு பூராகவுமுள்ள அனைவரும் எதிர்ப்பினை வெளியிட்டனர். தற்போது அப்பிரதேசத்திற்கு 700 இராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் பிரகாரம் பேருவளையில் வீதிகளை சீர்செய்தல், வீதி கடைகள், வீடுகளை திருத்தியமைத்தல், தேநீர் தயாரித்தல் போன்ற வேலைகளை செய்கின்றனர். இதனால் யாழ்ப்பாணத்தை போன்று பேருவளையிலும் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு தற்போது பொலிஸாருக்கு கூட நியாயம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

Post a Comment