ஏ.ஆர்.ஏ. பரீல்
ஆனால், எமக்கு மாற்றுக்காணி பள்ளிவாசலுக்கு பின்னாலுள்ள 10 ஏக்கரில் தரப்பட வேண்டும் என்றேன். அப்படித் தந்தால் நாங்கள் ரெடி. நீங்கள் பள்ளிவாசலை உடைக்க வேண்டாம். நாங்கள் குர்ஆனை ஓதி பைத்துடன் ஒவ்வொரு தகரமாக கழற்றித் தருகிறோம் என்றேன்.
தேரரே, நீங்கள் பள்ளிவாசலை உடைத்தால் அது நாட்டுக்கு அவமானம். பள்ளிவாசலை குருமார் உடைக்கிறார்கள் என்பார்கள். இது சர்வதேச ரீதியிலும் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும்.
நாங்கள் பள்ளிவாசலைக் கழற்றிக் கொண்டு போனால் நாங்கள் சமாதானமாகப் போகிறோம் என்பார்கள். நாட்டுக்கும் நற்பெயர் கிடைக்கும் என்றேன்.
இவ்வாறு தான் நான் தம்புள்ளை ரங்கிரி ரஜ மகா விகாரை அதிபதி இனாமலுவே சுமங்கல தேரரிடம் கெஞ்சிக்கேட்டேன் என்று விடி வெள்ளியிடம் மனம் திறந்தார் மௌலவி கலீல்.
தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தில் தலையிட்டுள்ள மௌலவி கலீல் தொடர்பாக அண்மைக்காலமாக ஊடகங்களில் பல விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வந்தன.
முஸ்லிம்களில் ஒரு சாரார் மூடர்கள் என இனாமலுவே தேரரைச் சந்தித்து கருத்து வெளியிட்டதாக சமூகத்திலிருந்து அவருக்கு எதிராக பலத்த கண்டனம் வெளியிடப்பட்டிருந்தது.
அவர் தனது முன்னெடுப்புகள் பற்றி இவ்வாறு விவரிக்கிறார்.
2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தம்புள்ளை ஹைரிய்யா ஜும்ஆப் பள்ளிவாசல் தாக்குதல்களுக்குள்ளானதை அடுத்து சில நாட்களில் தம்புள்ளை பள்ளிவாசலின் இருப்பு பற்றி ஜனாதிபதியுடன் 1 ½ மணித்தியாலங்கள் கதைத்தேன். ஜனாதிபதி எனது விளக்கங்களை கவனமாக செவிமடுத்தார். பள்ளிவாசலை உடைப்பதற்கோ அல்லது இடமாற்றுவதற்கோ நான் விரும்பவில்லை என்றார் ஜனாதிபதி. இனாமலுவே தேரரைச் சந்தித்து உங்கள் நிலைமைகளை விளக்கி சாதித்துக் கொள்ளுங்கள் என்றார். இதனையடுத்து இனாமலுவே தேரரைச் சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது.
கடந்த மே மாதம் 8 ஆம் திகதி இனாமலுவே தேரர் முன்னின்று பாதை அபிவிருத்திப் பணியை முன்னெடுத்தார். பள்ளிவாசலை உள்வாங்கும் வகையில் அந்தப் பாதை அபிவிருத்தி அமைந்திருந்தது.
பாதை அபிவிருத்திப் பணியை தேரர் முன்னெடுத்த போது ஹைரிய்யா பள்ளிவாசல் நிர்வாக சபையைச் சேர்ந்த மூவர் என்னைத் தொடர்புகொண்டார்கள். என்னிடம் கெஞ்சினார்கள். மௌலவி பள்ளிவாசலை காப்பாற்றித்தாருங்கள் என்றார்கள். அமைச்சர்மார் இருந்தும் பலனில்லை. ஒன்றும் நடக்கவில்லை. நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும் என்றார்கள். பள்ளிவசால் ஹஸரத்தும் என்னை தொடர்பு கொண்டு கெஞ்சினார்.
பள்ளிவாசல் மரத்தைக் கழற்றப் போகிறார்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் இருந்தும் பிரயோசனமில்லை. இனாமலுவே தான் நினைத்ததைச் செய்கிறார். நீங்கள் இந்த விடயத்தில் உடனடியாக தலையிடுங்கள் என்றார்கள்.
நான் உடனே மத விவகாரங்களுக்கு பொறுப்பான விஷேட பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்கவை தொடர்பு கொண்டேன். அவரிடம் பாதை அபிவிருத்திப் பணியை நிறுத்தி பள்ளிவாசலை பாதுகாக்கும்படி வேண்டினேன்.
அவர் பள்ளிவாசல் லெட் (கழிவறை) உடையும் என்றார். லெட் இல்லாமல் வாழவே முடியாது என்றேன். இது அவமானம். அசௌகரியம். லெட் உடைப்பதை உடன் நிறுத்துங்கள் என்று அநுர சேனநாயக்கவிடம் வேண்டினேன்.
நான் அநுர சேனநாயக்கவிடம் வேண்டுகோள் விடுத்து 10 நிமிடத்தில் அவர் பாதை அபிவிருத்திப் பணியை நிறுத்தினார். அன்று ஜனாதிபதியுடன் ½ மணித்தியாலம் பேசினேன். எதற்கு பள்ளியை உடைக்க வேண்டும். உடைக்கக்கூடாது என்றேன்.
மே மாதம் 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பள்ளிவாசல் நிர்வாக சபை என்னை ஜும்ஆப் பிரசங்கம் நடத்த அழைத்தது. அங்கு சென்று சிங்களத்தில் ஜும்ஆப் பிரசங்கத்தை நிகழ்த்தினேன். எனது பிரசங்கம் டேப்பில் பதிவு செய்யப்பட்டு இனாமலுவே தேரரிடம் கொடுக்கப்பட்டது.
டேப்பை செவிமடுத்த தேரர் இவருக்கு அறிவுள்ளது மார்க்கப்பற்றுடன் தேசப்பற்றும் இருக்கிறது எனத் தெரிவித்தார்.
கடந்த 11 ஆம் திகதி நான் இனாமலுவே தேரரைச் சந்திக்க தம்புள்ளை ரங்கிரி விகாரைக்குச் சென்றேன். சொல்லிவிட்டுப் போனேன். தேரரின் நாடியைப் பிடித்து பேசிவிட்டு வருகிறேன் என்று பள்ளிவாசல் நிர்வாகிகள் சிலரிடம் கூறிச் சென்றேன்.
அங்கு சென்று தேரரிடம் ஏன் பள்ளிவாசலை உடைக்கப் போகிறீர்கள்? என்று கேட்டேன்.
அவர் இவ்வாறு பதில் சொன்னார். நான் 1955 ஆம் ஆண்டில் துறவியானேன். அப்போது எனது வயது 7. 1960ஆம் ஆண்டு உதுமாலெப்பை இப்ராஹிம் என்றொருவர் காத்தான்குடியிலிருந்து வந்தார். அவர் ஒரு பொட்டனி வியாபாரி. பென்சி ஐட்டம் விற்பனை செய்தார். பன்சலை காணியிலே வியாபாரத்தை நடத்தினார்.
பன்சலை கேட்டடியில் தான் படுத்துத் தூங்குவார். அவர் மார்க்கப்பற்றுள்ளவர். ஒரு நாள் இப்ராஹிம் இங்கே வா என்று அவரைக் கூப்பிட்டேன்.
நான்கு தடிகள் நட்டு ஒரு தற்காலிக கடை நடத்த இடம் கொடுத்தேன். இப்ராஹிம் இறந்ததன் பின்பு அந்த சிறிய கடை கூடாரமானது. அவரது மகன் கடையை நடத்தினார். ஒருநாள் நான் அங்கு சென்றபோது அதிர்ச்சிக்குள்ளானேன். கடையின் பின்னால் பள்ளிவாசல் உருவாகியிருந்தது.
இது வேண்டாம் என்றேன். அவர்கள் கேட்கவில்லை. அவர்கள் பள்ளிவாசலை செய்தார்கள். நகர சபையின் அனுமதி பெறப்படவில்லை. வேறு அரச நிறுவனங்களின் அனுமதி பெறப்படவில்லை. பதிவுகள் இல்லை. இதுதான் கூடாரத்தின் வரலாறு.
உங்களிடம் பிரத்தியேக வரலாறு இருந்தால் என்னிடம் கொண்டு வந்து காட்டுங்கள் என்று தேரர் என்னைப் பார்த்து சவால்விட்டார்.
இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று இனாமலுவே தேரரிடம் வினவினேன். ஒன்றும் செய்ய முடியாது என்றார்.
தம்புள்ளை ரங்கிரி ரஜ மகா விகாரைக்குச் சொந்தமான காணி 1982 ஆம் ஆண்டு கெசற் பண்ணப்பட்டுள்ளது. புனித பூமியாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அதற்கான வரைபடமும் என்னிடம் உள்ளது. 1982 ஆம் ஆண்டு கசெற் பண்ணப்பட்டதும் அன்று யுத்த சூழல் நிலவியதால் அபிவிருத்திப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு பெற்றுக்கொள்ள முடியாமற் போனது.
யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு தற்போது சமாதான சூழல் நிலவுவதால் கடந்த பெப்ரவரி மாதம் புனித நகர் அபிவிருத்தி பணிகளுக்கு அரசாங்கம் 550 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளது. இந்த நிதியினால் நான் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கின்றேன். பாதை அகலமாக வெட்டப்படுகின்றது. ஆனால், அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க பள்ளிவாசல் தடையாக இருக்கிறது என்றார்.
இந்த விபரங்களை நான் பள்ளிவாசல் நிர்வாக சபையிடம் தெரிவித்தேன். பள்ளிவாசலை உடைப்பது தான் தேரரின் முடிவு என்பதை விளக்கினேன். புனித பிரதேசமாக பள்ளிவாசல் காணி உட்பட்ட பிரதேசம் கெசற் பண்ணப்படுவதற்கு முன்பு முஸ்லிம் அமைச்சர்கள் பேசியிருக்க வேண்டும். எதிர்ப்புத் தெரிவித்திருக்க வேண்டும். நியாயங்களை எடுத்து விளக்கியிருக்க வேண்டும். ஆனால் ஒருவரும் வாய் திறக்கவில்லை.
பின்பு பள்ளிவாசல் நிர்வாகம் பின்னாலுள்ள டாக்டர் புத்ததாசவினால் அரசுக்கு வழங்கப்பட்ட 10 ஏக்கர் காணியில் பள்ளிக்கு இடம்பெற்றுத் தாருங்கள் என்றார்கள். அன்று நான் உம்றாவுக்கு சென்ற நேரம். மக்காவிலிருந்து கூட இனாமலுவே தேரருடன் பேசினேன். பள்ளிவாசலுக்குப் பின்னால் காணியை பெற்றுக்கொள்ள உதவுங்கள் என்று கெஞ்சினேன்.
கடந்த மே மாதம் 25 ஆம் திகதி வை.எம்.எம்.ஏ.இயக்கம் அதன் தலைமையகத்தில் கூட்டமொன்றினை ஏற்பாடு செய்திருந்தது. கூட்டத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை வக்பு சபை பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள். அக்கூட்டத்தில் இனாமலுவே தேரரின் நிலைப்பாட்டினை நான் விளக்கினேன். பள்ளிவாசல் உடைக்கப்படும் என்பதையும் தெரிவித்தேன்.
பள்ளிவாசலுக்கு பின்புறமாக உள்ள காணியை டாக்டர் புத்ததாச பன்சலைக்கு எழுதித் தந்துள்ளதாக இனாமலுவே கூறுகிறார். இந்தக் காணியில் ஒரு பகுதியியை கேட்டு பெற்றுத்தர முயற்சிக்கிறேன் என்றும் கூட்டத்தில் தெரிவித்தேன்.
இதனையடுத்துத் தான் கடந்த முதலாம் திகதி மீண்டும் ரங்கிரி ரஜமகா விகாரைக்குச் சென்று தேரரைச் சந்தித்து பள்ளிவாசலை நாம் அகற்றிக்கொள்ள விருப்பம். ஆனால், பள்ளிவாசலுக்கு பின்புறமாக உள்ள பகுதியில் மாற்றுக்காணி தரப்பட வேண்டும் என்று அவரிடம் வலியுறுத்தினேன்.
ஆனால், தேரரின் மனோபாவம் வேறு விதமாக இருந்தது. மாற்றுக் காணியொன்று தந்து தான் இந்தப் பிரச்சினையை முடித்துக் கொள்வதற்கு எனக்கு எந்தத் தேவையுமில்லை. உங்களுக்குத்தான் காணி தேவை.
காணியொன்று தேடிக் கொள்ளுங்கள். நான் புதிய பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டித் தருகிறேன். பன்சலைக்கு சொந்தமாக உள்ள புனித பூமியின் ஒரு துண்டுகூட தரமாட்டேன்.
புனித பூமியின் எல்லைகளாக மிரிஸ்கோனியா பாலம். குருநாகல் பாதையில் தம்புளுஓயா பாலம். மாத்தளை பாதையில் தம்புளுஓயா பாலம். கந்தமை எரவ்வல பாலச் சந்தி என்பன அமைந்துள்ளன. இந்த எல்லைக்கு வெளியே காணி தேடிக்கொள்ளுங்கள் என்றார்.
தேரரே நீங்கள் இப்படிச் சொன்னால் எப்படி? நாங்கள் தம்பிமார் நீங்கள் அண்ணன்மார் எங்களை விரட்டி விடாதீர்கள். பள்ளிவாசல் நிர்வாகம் உங்கள் உதவியையே எதிர்பார்க்கிறது என்றேன்.
புனித பூமியில் எந்த சமயத்தினதும் கட்டிடம் இருக்க விடமாட்டேன். புதிதாக கட்டவும் விடமாட்டேன் என்றார்.
பள்ளிவாசல் நிர்வாக சபையின் சிலரது அனுமதியுடனே நான் தேரரைச் சந்தித்தேன். நான் நிர்வாகத்துக்கு அறிவிக்காது தேரரைச் சந்தித்தது என்று குறைகூறுவது தவறாகும்.
தேரரே நீங்கள் எல்லைகளைக் குறிப்பிட்டு அதற்கு அப்பால் காணி தேடிக் கொள்ளுங்கள் என்கிறீர்கள். நான் சமூகத்திடம் பள்ளிவாசல் நிர்வாகத்திடம் மசூரா பண்ணிவிட்டு வருகிறேன் என்று விடைபெற்றேன்.
கடந்த திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு நான் ஜனாதிபதியுடன் அரை மணிநேரம் பேசினேன். தேரருடனான எனது கலந்துரையாடலை ஜனாதிபதியிடம் விளக்கினேன். பள்ளிவாசலுக்கு புனித பூமிக்கு வெளியே வேறிடம் பார்த்துக் கொள்ளும்படி தேரர் உறுதியாக இருக்கிறார் என்றேன்.
ஜனாதிபதி இது விடயமாக பிரதமரைச் சந்திக்கும் படியும் பிரதமருக்கு அவர் தொலைபேசியில் விபரம் தெரிவிப்பதாகவும் என்னிடம் தெரிவித்தார்.
நான் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அநுரசேனநாயக்கவுடனும் பேசினேன். பொலிஸ் மா அதிபரின் செயலாளருடனும் பேசினேன்.
பிரதமருடன் கலந்துரையாடும் பொறுப்பு வை.எம்.எம்.ஏ. தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இனாமலுவே தேரர் மறுமுறை இங்கு வருவதென்றால் நல்ல முடிவுடன் வாருங்கள். இல்லாவிட்டால் வர வேண்டாம் என்று என்னிடம் தெரிவித்துள்ளார்.
இது தான் நடந்த கதை. என்னை வீணாக குறைகூறுவதில் அர்த்தமில்லை. சமூகத்துக்காக அல்லாஹ்வின் பாதையில் எனது பணிகளை நேர்மையாகவே முன்னெடுத்துள்ளேன் என்றார்.
இது தொடர்பில் வை.எம்.எம்.ஏ.யின் தலைவர் கே.என்.எம். டீன் தனது கருத்தை பின்வருமாறு தெரிவித்தார்.
தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பாக கலீல் மௌலவி நேரடியாக ரங்கிரி ரஜமகா விகாரைக்குச் சென்று இனாமலுவே தேரரைச் சந்தித்து கலந்துரையாடினார். அவரின் துணிச்சல் வை.எம்.எம்.ஏ.யைக் கவர்ந்தது. இதனையடுத்து நாம் கலீல் மௌலவியைத் தொடர்பு கொண்டோம். அவர் மூலம் தம்புள்ளை இனாமலுவே தேரருக்கும் எமக்குமிடையில் ஒரு நல்லுறவினை ஏற்படுத்திக் கொள்ள முயற்சித்தோம்.
வை.எம்.எம்.ஏ. தலைமையகத்துக்கு தம்புள்ளை பள்ளிவாசல் நிர்வாக சபை, அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபை, முஸ்லிம் இயக்கங்களின் பிரதிநிதிகள், கலீல் மௌலவி என்போரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினோம்.
பள்ளி நிர்வாக சபையைச் சேர்ந்த 8 உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள். சுமார் 25 பேர் கலந்துரையாடலில் பங்கு கொண்டார்கள்.
அபிவிருத்திப் பணிகளுக்கு நாங்கள் தடையாக இருக்க விரும்பவில்லை. பெரும்பான்மையினரிடம் நல்லுறவாக வாழ விரும்புகிறோம். எமக்கு வசதியான இடம் வழங்கப்படுமென்றால் அவ்விடத்திலிருந்து பள்ளிவாசலை இடம்மாற்றுவது பற்றி சிந்திப்போம் என்று நிர்வாக சபை கூறியது. ஆரம்பத்தில் அவ்விடத்திலிருந்து அசைவதில்லை என்றிருந்தவர்கள் தமது நிலைப்பாட்டினை தளர்த்தியிருந்தார்கள்.
இந்த நிலைப்பாட்டினைத் தெரிவிப்பதற்காகவே கலீல் மௌலவியின் தலைமையில் இரண்டாவது விஜயம் ரங்கிரி விகாரைக்கு மேற்கொள்ளப்பட்டது. இந்தக் குழுவில் மௌலவியுடன் வை.எம்.எம்.ஏ. வைப் பிரதிநிதித்துவப்படுத்தி டாக்டர் என்.எம்.எம். இக்பால் மற்றும் மொஹமட் நியாஸ், மொஹமட் பைசல் ஆகியோர் அடங்கியிருந்தனர்.
கலீல் மௌலவியின் இரண்டாவது விஜயத்தினையடுத்து தம்புள்ளை இனாமலுவே தேரரின் நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கு மௌலவி விளக்கியிருந்தார். ஜனாதிபதி பிரதமரை சந்தித்து கலந்துரையாடுமாறு எம்மை வேண்டியிருக்கிறார். நான் விரைவில் பிரதமரைச் சந்தித்துப் பேசவுள்ளேன். பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தற்போது ஆவணங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறோம்.
இனாமலுவே தேரர் அன்றிருந்த கடினமான நிலைப்பாட்டில் தற்போது இல்லை. அதனால் அவருடன் மேலும் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளோம்.
சிங்கள முஸ்லிம் சமாதானத்தை தம்புள்ளையிலிருந்து காண்பிப்போம் என்றும் தேரர் கூறியுள்ளார்.
தம்புள்ளையில் முஸ்லிம் சிங்கள உறவு நிலைக்க வேண்டும். சக வாழ்வு உறுதிப்படுத்தபட வேண்டும். இதுவே வை.எம்.எம்.ஏ. யின் நிலைப்பாடு. இந்நாட்டில் முஸ்லிம்களும் சிங்களவர்களும் ஒற்றுமையாக வாழ்கிறார்கள் என்பதை சர்வதேசத்துக்கு காட்ட வேண்டும்.
முஸ்லிம்கள் வாழும் இடத்தில் பள்ளிவாசல் அமைய வேண்டும். அது பிரச்சினைகள் இல்லாத இடமாகவும் இருக்க வேண்டும் என்பதை பிரதமரிடம் தெளிவாக விளக்குவோம் என்றார். (நன்றி விடிவெள்ளி)

Post a Comment