சமூக பொறுப்புடன் செயல்படுமாறு ஊடகங்களுக்கு அரசு வேண்டுகோள்!
Tuesday, June 17, 20140 comments
நாட்டின் சமாதானம் மற்றும் மக்கள் மத்தியிலான நல்லிணக்கம், ஒற்றுமைக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் தகவல்களை வெளியிடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அரசாங்கம் ஊடகங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
அதேபோன்று தவறான பிரசாரங்கள், வதந்திகளைப் பரப்ப வேண்டாமென பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ள அரசாங்கம், தெரிந்து கொண்டே இவற்றைச் செய்வது சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக நேற்று அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நாட்டின் சமாதானம், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையில் வெளியிடப்படும் ஊடகச் செய்திகள் மற்றும் அறிக்கைகள் சமூக சகவாழ்விற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை புதிதாகக் கூறத் தேவையில்லை.
அளுத்கம பிரதேசத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ள சம்பவம் தொடர்பில் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றமை மற்றும் இச்சம்பவத்திற்கு தவறான வடிவம் கொடுக்கப்பட்டு பல்வேறு தகவல்கள் அறிக்கைகளை வெளியிடுகின்றமையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இத்தகைய செயற்பாடுகள் ஊடக தார்மீகத்திற்கும் அதன் ஒழுக்க விழுமியங்களுக்கும் முரணானது.
நாட்டில் பல இனமக்கள் வாழ்கின்றனர். அவர்கள் மத்தியில் நிலவும் ஒற்றுமையை பாதிக்கும் வகையில் தகவல்களையும் அறிக்கைகளையும் வெளியிடுவதைத் தவிர்ப்பது ஊடகங்களின் பொறுப்பாகும்.அதேபோன்று நாட்டில் வாழும் பல்லின மற்றும் பல மதங்களைச் சேர்ந்த மக்களிடையே தவறான கருத்துக்களை பரப்புவது போன்ற நடவடிக்கைகளைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அரசாங்கம் மக்களைக் கேட்டுக் கொள்கின்றது.
அண்மையில் இடம்பெற்றுள்ள சிறு சம்பவம் தொழில்நுட்பங்களின் உதவியுடன் பாரியதொரு சம்பவமாக காட்டப்பட் டுள்ளது. இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமென்றும் அரசாங்கம் பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
அத்துடன் தெரிந்து கொண்டே தவறான தகவல்களையும் வதந்திகளையும் பரப்புதல் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment