ஏ.ஆர்.ஏ. பரீல்
இதற்கான முயற்சிகளில் பிரதியமைச்சர் பைசர் முஸ்தபாவும், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்காவும் ஈடுபட்டுள்ளார்கள். இதனை கிரேண்ட்பாஸ் மோலவத்தை பகுதி பெரும்பான்மை மக்களும், விகாரை அதிபதியும் விரும்பவில்லை.
அவ்வாறு புதிய பள்ளிவாசல் திறக்கப்பட்டால் அப்பகுதியில் மீண்டும் இனமுறுகல்கள் உருவாகி கலவரங்கள் ஏற்படும். இதற்கான பொறுப்பை பிரதியமைச்சரும், பிரதி பொலிஸ்மா அதிபருமே ஏற்றுக்கொள்ள வேண்டும்' என ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் பெரும்பான்மை மக்கள் வெசாக் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினார்கள். நாடெங்கும் வெசாக் அலங்காரப் பந்தல்கள் பல வர்ணங்களில் புத்த பெருமானின் வாழ்க்கை முறைமையினை மக்களுக்கு நினைவூட்டின.
வீதிகள் தோறும் அன்னதானசாலைகள் புத்தபெருமானின் பெயரால் அமைக்கப்பட்டிருந்தன. இந்த அன்னதான சாலைகள் பெரும்பான்மை மக்களின் நிதியுதவியினால் மாத்திரமல்ல முஸ்லிம்களும் தமது பங்களிப்பினை வழங்கியிருந்தனர். நகர் மற்றும் சேரிப்பகுதிகளில் பெளத்த கொடிகள் முஸ்லிம்களின் வீட்டுச் சுவர்களிலும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
கிராண்ட்பாஸ் மோலவத்தை பகுதியிலும் இந்நிலைமையினை காண முடிந்தது. இது மக்களுக்கான மதச் சுதந்திரம். அவர்களது உரிமை. கிராண்ட்பாஸ் மோலவத்தை பகுதியில் முஸ்லிம்கள் அன்னதான சாலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. பெளத்த கொடிகளுக்கும் சோடனைகளுக்கும் முகம் சுளிக்கவில்லை. பெரும்பான்மையினருடன் இணைந்து செயற்பட்டார்கள். அன்னதானசாலைகளுக்கு நிதியுதவி வழங்கினார்கள்.
இதேபோன்று இன்னுமோர் சமூகம் தனது ரமழான் மாத செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளது. இம்முன்னெடுப்புகள் அன்னதானசாலைகளாக இல்லை. சோடனைகளுடன் கூடியதான சமயக் கடமையாக இல்லை. இரவுநேர தொழுகைகளும், மார்க்க பிரசங்கங்களுமே அவை.
கிராண்ட்பாஸ் மோலவத்தை பகுதி முஸ்லிம்கள் ரமழான் மாதத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். சுமார் 450 குடும்பங்கள், சுமார் ஆயிரம் மக்கள் தொழுகைகளுக்காகவும், பயான்களை கேட்பதற்காகவும் ஒன்றுகூட வேண்டியுள்ளது. ஆனால், அவர்களுக்கு தற்போது இருப்பதோ 1 3/4 பேர்ச் காணியில் அமைந்துள்ள ஒரு சிறிய பள்ளிவாசல். மிஞ்சிப்போனால் சுமார் 50 பேர் ஒன்றுகூடலாம். பள்ளிவாசலின் நீளம் 33 அடிகள் மாத்திரமே.
கடந்த வருடம் ரமழான் மாதத்தில் தீனுல் இஸ்லாம் பள்ளிவாசல் ஒரு புதிய கட்டிடத்தில் இயங்கியது. அது மாடிக் கட்டிடம். அது ஒரு களஞ்சியசாலை. கட்டிடம் என்று இரகசியமாக அமைக்கப்பட்டு பள்ளிவாசலாக மாற்றப்பட்டதாக விமர்சனத்துக்குள்ளாகியது. இதனையடுத்து இக்கட்டிடத்தை ரமழான் மாத சமயக் கடமைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துவதற்கு புத்தசாசன மற்றும் சமய விவகாரங்களுக்கான அமைச்சு அனுமதி வழங்கியிருந்தது.
கடந்த வருடம் ரமழான் முற்றுப்பெற்ற கையோடு அந்தப் புதிய பள்ளிவாசல் கட்டிடத்தை மூடிவிட்டு ஜமாஅத்தார்கள் வெளியேற இருந்த நிலையில் பெருநாளன்று மறுதினம் பெரும்பான்மையினரால் தாக்கப்பட்டது. முஸ்லிம்களும் தாக்கப்பட்டார்கள். அப்பிரதேசத்தில் பதற்ற நிலை உருவாகியது. பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டனர்.
புதிய பள்ளிவாசல் இழுத்து மூடப்பட்டது. புதிய பள்ளிவாசல் கட்டிடத்தில் பள்ளிவாசல் இயங்கக்கூடாது என மதவிவகாரங்களுக்கான அமைச்சின் செயலாளரும் தடை விதித்தார்.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி புத்தசாசன மற்றும் மதவிவகாரங்களுக்கான அமைச்சில் அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் கிராண்ட்பாஸ் தீனுல் இஸ்லாம் பள்ளிவாசல் விவகாரம் தொடர்பான கூட்டமொன்று கூட்டப்பட்டு சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீனுல் இஸ்லாம் பள்ளிவாசலின் இடப்பற்றாக்குறையினை தீர்ப்பதற்காக 6 பேர்ச் காணி பெற்றுத் தருவதாக அமைச்சின் செயலாளர் உறுதி வழங்கியிருந்தார்.
இந்நிலையில் சுமார் ஒரு வருட காலமாகியும் பள்ளிவாசல் விவகாரத்தில் அளிக்கப்பட்ட உறுதி மொழிகள் நிறைவேற்றப்படாமை குறித்து முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா, அமைச்சின் செயலாளர் திஸாநாயக்காவுக்கு கடிதமொன்றினை அனுப்பிவிட்டு இரு வாரங்களுக்கு முன்பு மோலவத்தை பகுதிக்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்காவையும் தன்னுடன் அழைத்துச் சென்றிருந்தார். அவர்கள் பழைய பள்ளிவாசலையும், புதிதாக நிர்மாணிக்கப்பட்டு கடந்த வருடம் ரமழான் தொழுகையுடன் மூடப்பட்டுவிட்ட பள்ளிவாசலையும் பார்வையிட்டனர். இதற்கு ஜாதிகஹெல உறுமய கட்சி கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.
கிராண்ட்பாஸ் மோலவத்தையில் மீண்டும் பள்ளிவாசலை புனர்நிர்மாணம் செய்ய முனைந்தால் பெளத்தர்களின் பொறுமை எல்லை தாண்டிவிடும். மீண்டும் இப்பகுதியில் முறுகல் நிலை தோன்றி இன மோதல்கள் ஏற்படும் என்று ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளதுடன் இதற்கான முழுப் பொறுப்பையும் பிரதியமைச்சர் பைசர் முஸ்தபாவும், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்கவுமே பொறுப்பேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
பத்தரமுல்லையிலுள்ள ஜாதிக ஹெல உறுமயவின் தலைமையகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அக்கட்சியின் ஊடக செயலாளரும், மேல் மாகாண சபை உறுப்பினருமான நிஸாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ள கருத்துக்கள் மோலவத்தை பகுதி முஸ்லிம்களிடையே ஒரு பீதியை உருவாக்கியுள்ளமையை அவதானிக்க முடிகிறது.
நிஸாந்த ஸ்ரீ வர்ணசிங்க ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ள கருத்துகள் மிகவும் ஆழமாக நோக்கப்பட வேண்டியதாகும். அவர் இவ்வாறு கூறியுள்ளார். கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தொடர்பான பிரச்சினையை சர்வதேச மட்டம் வரைகொண்டு சென்ற முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் இலங்கையை மத சுதந்திரமற்ற நாடாக சித்தரித்துக் காட்டியுள்ளார்கள். சுவர்ண சைத்திய வீதியில் களஞ்சியசாலை என்று கூறி ஒரு பள்ளிவாசலை நிர்மாணித்து அதில் சமய கடமைகளை ஆரம்பித்தபோது இப்பகுதி மக்களிடையே குழப்ப நிலை ஏற்பட்டது. இந்த கட்டிடத்தை பள்ளிவாசலாக மாற்றுவதற்கு மத விவகார அமைச்சு தடை விதித்தது.
பல வருடங்களாக இயங்கி வந்த தீனுல் இஸ்லாம் பள்ளிவாசலுக்கு இடையூறாக இருந்த அரச மரமும் அகற்றப்பட்டது. அமைச்சர்கள் முன்னின்று மத நல்லிணக்கத்தை பாதுகாப்பதற்காக தீர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பிரச்சினைக்குத் தீர்வும் காணப்பட்டது.
ஆனால், மூடிய நிலையிலுள்ள குறிப்பிட்ட களஞ்சியசாலையை ரமழான் மாதத்தை இலக்காக வைத்து பள்ளிவாசலாக மாற்றுவதற்கு சில சக்திகள் முயன்று வருகின்றன.
அண்மையில் இக்களஞ்சியசாலை பொலிஸ் பாதுகாப்புடன் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக பிரதியமைச்சர் பைசர் முஸ்தபாவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்கவும் சென்றுள்ளனர். புனர்நிர்மாணப் பணிகளை பார்வையிட வந்த இவர்கள் இப்பகுதி சுவர்ண சைத்திய விகாரை அதிபதியையும் சந்தித்துள்ளனர். இப்பகுதியில் பள்ளிவாசலை அமைக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இவ்விருவரதும் இவ்வாறான செயற்பாடுகள் இப்பகுதியில் அணைந்திருந்த இனவாதத்தை மீண்டும் ஆரம்பித்து வைத்துள்ளன. இப்பகுதியில் மீண்டும் இன முறுகல் நிலை உருவானால் அதனால் ஏதும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதற்கு ஜாதிக ஹெல உறுமய கட்சியையோ அல்லது வேறு மத அமைப்புகளையோ குற்றம் சுமத்த வேண்டாம். விளைவுகளுக்கு பைசர் முஸ்தபாவும் அநுர சேனாநாயக்கவுமே பொறுப்பாக இருக்க வேண்டும்.
பெளத்தர்களை எப்போதும் ஏமாற்றி விடலாம் என்று எண்ண வேண்டாம். தீனுல் இஸ்லாம் பள்ளிவாசல் விவகாரத்தில் எமது வணக்கத்துக்குரிய பொருளான அரச மரத்தையே முஸ்லிம் மக்களுக்காகவும் மத நல்லிணக்கத்துக்காகவும் தியாகம் செய்துள்ளோம். பெளத்த மக்களை ஏமாற்றும் முயற்சிகள் தொடர்ந்தால் அவற்றுக்கு எதிராக பெளத்தர்களின் உரிமைகளுக்காக நாம் போராட வேண்டியேற்படும்.
பிரதியமைச்சர் பைசர் முஸ்தபாவினதும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்கவினதும் கிராண்ட்பாஸ் மோலவத்தை பிரதேசத்துக்கான விஜயம் அப்பகுதி இனங்களுக்கிடையில் மீண்டும் முறுகல் நிலையை தோற்றுவிக்கலாம் என தீனுல் இஸ்லாம் நிர்வாக சபை உறுப்பினர் எம்.எம்.சம்சுதீன் கடந்த வாரம் விடிவெள்ளிக்கு தெரிவித்திருந்தமையை இவ்விடத்தில் ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது.
இந்த பள்ளிவாசல் விவகாரத்தினால் இனங்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்படுவதையோ குரோத மனப்பான்மை உருவாகுவதையோ நாங்கள் விரும்பவில்லை. இந்தப்பகுதி பெரும்பான்மை மக்களுடனும் பெளத்த குருமாருடனும் கலந்து பேசி மூடிக்கிடக்கும் பள்ளிவாசலை திறந்து தருவதற்கான நடவடிக்கைகளை அரசியல் தலைமைகளும் சமூகத்தலைவர்களுடனும் முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்திருக்கிறார்.
கிராண்ட்பாஸ் மோலவத்தை பகுதி சைத்திய விகாரை அதிபதி தம்மானந்த தேரரும் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். எனவே, மூடிக்கிடக்கும் களஞ்சியசாலை என்று கூறப்படும் பள்ளிவாசல் கட்டிடத்தை மீண்டும் திறப்பதற்கு ஜாதிக ஹெல உறுமய மாத்திரமல்ல அப்பகுதி விகாரையில் குருமார்களும் விரும்பவில்லை என்பது தெளிவாகிறது.
பிரதியமைச்சரின் விஜயத்தினையடுத்து இப்பகுதி பெரும்பான்மையின மக்கள் சிறு சிறு குழுக்களாகக்கூடி பல விமர்சனங்களை முஸ்லிம்களை பாதிக்கும் வகையில் தெரிவித்து வருவதாகவும் இப்பகுதி முஸ்லிம்கள் தெரிவிக்கின்றனர். எனவே, அரசியல்வாதிகள் இப்பிரச்சினையில் மூக்கினை நுழைப்பதை விடுத்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, வக்பு சபை பிரதிநிதிகள் அப்பகுதி விகாரையைச் சேர்ந்த குருமார்களுடன் சுமுகமான பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கவுடனான எனது விஜயம் தீனுல் இஸ்லாம் பழைய பள்ளிவாசலை புனர்நிர்மாணம் செய்யும் நோக்குடனேயே அமைந்திருந்தது. ஜாதிக ஹெல உறுமய கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் நிஸாந்த ஸ்ரீவர்ணசிங்க ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ள கருத்தினை முற்றாக மறுக்கிறேன்.
நானும் அநுரசேனநாயக்கவும் கிராண்ட்பாஸ் புதிய பள்ளிவாசல் புனர்நிர்மாணப் பணிகளைப் பார்வையிடச் செல்லவில்லை. பழைய பள்ளிவாசலையே பார்வையிடச் சென்றோம். புதிய பள்ளிவாசலை திறக்கும் நோக்கமும் என்னிடமில்லை.
9 மாதங்களுக்கு முன்பு புத்தசாசன மற்றும் சமய விவகாரங்களுக்கான அமைச்சின் செயலாளர் தீனுல் இஸ்லாம் பள்ளிவாசலை புனர்நிர்மாணம் செய்ய ஏற்றுக் கொண்டிருந்தார். 6 பேர்ச் காணி வழங்குவதாகவும் உறுதி வழங்கியிருந்தார். 9 மாத காலமாகியும் உறுதி மொழி நிறைவேற்றப்படாமையினாலேயே அங்கு சென்று மக்களைச் சந்தித்து கலந்துரையாடினேன். இது தொடர்பாக அமைச்சின் செயலாளருக்கு கடிதமொன்றினையும் அனுப்பினேன்.
அப்பகுதியிலுள்ள விகாரைக்கும் சென்று மத குருமாரைச் சந்தித்து தீனுல் இஸ்லாம் பள்ளிவாசல் அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடினேன். அவர்களின் அனுமதியினையும் பெற்றுக்கொண்டேன்.
இதைவிடுத்து அப்பகுதியில் மீண்டும் இனமுறுகலை எற்படுத்த வேண்டும் என்ற தேவை எனக்கில்லை. இனங்கள் நல்லிணக்கத்துடன் தத்தம் மதங்களைப் பின்பற்ற வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். நான் பெளத்த மதத்துக்கும் பல உதவிகளைச் செய்துள்ளேன் என்பதை அறியாதவர்களே இவ்வாறு பேசுகிறார்கள் என்றார்.
முஜிபுர் ரஹ்மான்
மேல் மாகாண சபை (ஐ.தே.க) உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் விடிவெள்ளிக்கு பின்வருமாறு கருத்து தெரிவித்தார்.அரச அதிகாரிகள் உறுதியளித்தவாறு பள்ளிவாசல் நிர்மாணித்து வழங்கப்பட வேண்டும். அரசாங்கம் நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக உறுதி மொழிகளை வழங்கி விட்டு மௌனமாக இருப்பதினாலேயே பள்ளிவாசல்களுக்கு இவ்வாறான நிலைமை ஏற்படுகின்றன.
தீனுல் இஸ்லாம் பள்ளிவாசல் விவகாரத்தில் அரசியல் வாதிகள் தமது சுயலாபம் கருதி தலையிடுவது மேலும் பிரச்சினைகளையே உருவாக்கும். ஜாதிக ஹெல உறுமயவும் இது தொடர்பாக நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் இனவாதத்தையே உருவாக்கியிருக்கிறது.
அரசியல்வாதிகள் மத விவகாரங்களில் தலையிட்டு தமது செல்வாக்கினை அதிகரித்துக் கொள்ள முனைவதை சமூகம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது.
இவ்விவகாரத்தை அரசியல் மயப்படுத்துவதால் பாதிக்கப்படப்போவது கொழும்பிலும் ஏனைய பிரதேசங்களிலும் உள்ள அப்பாவி முஸ்லிம் மக்களே. இவ்விவகாரத்தில் ஆளுக்கு ஆள் சுயமாக இயங்குவது நல்லதல்ல. பள்ளிவாசல் நிர்வாகத்துடன் இணைந்து கொழும்பிலுள்ள தலைமைகளுடன் கலந்தாலோசித்தே அடுத்தகட்ட நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும். வெறுமனே அடுத்த தேர்தலை இலக்குவைத்து இயங்கி, வாக்கு வங்கியை நிரப்பலாம் என கனவுகாணக் கூடாது.
உண்மையில் இவ்விவகாரத்திற்கு கடந்த வருடம் அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் புத்தசாசன அமைச்சில் இடம்பெற்ற கூட்டத்தின் போது தீர்வு எட்டப்பட்டது. எனினும் அதனை அரசு நடைமுறைப்படுத்தவில்லை. இந்நிலையில் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான முனைப்புகளையே மேற்கொள்ள வேண்டும். மாற்றமாக புதிய முறையில் பிரச்சினையை அணுகும் போது வேறுபல பிரச்சினைக்கு வழிவகுக்கும் என்றார்.
பள்ளிவாசல் மற்றும் மதவிவகாரங்களில் அரசியல் இடம்பெறக்கூடாது என்பதே சமூகத்தின் எதிர்பார்ப்பாகும். அரசியல் தலைவர்கள் பள்ளிவாசல் விவகாரங்களில் நேரடியாக ஈடுபடாது மதத்தலைவர்கள் மூலம் தங்கள் பங்களிப்பினைச் செய்ய முன்வருவதே நன்மை பயக்கும். பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா புத்தசாசன மற்றும் மத விவகாரங்களுக்கான அமைச்சின் செயலாளர் திஸாநாயக்க அளித்த உறுதி மொழி நிறைவேற்றப்படாமை குறித்தே களத்தில் இறங்கியுள்ளார். பிரதியமைச்சரை குறை காணுவதன் மூலம் ஹெல உறுமய தனது அரசியலை பலப்படுத்திக் கொள்வதற்கு முனைந்திருக்கிறது. பெரும்பான்மையினரின் வாக்குப்பலத்தினை அதிகரித்துக்கொள்ள முயற்சித்திருக்கிறது.
இவ்வாறு மத விவகாரங்களில் அரசியல் கலக்கப்படுவதினால் பாதிக்கப்படப்போவது மோலவத்தை பிரதேச மக்களே என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
நன்றி விடிவெள்ளி

Post a Comment