இலங்கை அரசாங்கத்திற்கு சவூதி அரேபிய அரசாங்கம் நன்கொடையாக வழங்கிய பேரீச்சம் பழப் பக்கற்றுகளை புறக்கோட்டைச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரத்தை பரவலாக்கி நாட்டை மத்திய மாகாண சபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்தார்.
நீதியில்லாத நாட்டில் நீதியமைச்சராக பதவி வகிக்கும் ரவூப் ஹக்கீம் தனது சமூகம் தாக்கப்படும் போது என்ன செய்தார் என்று பரிகாசமாக கேள்வியும் எழுப்பினார்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அசாத் சாலி இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
ரமழான் மாதத்தை முன்னிட்டு சவூதி அரேபிய அரசாங்கம் இலங்கை முஸ்லிம்களுக்கு விநியோகிப்பதற்காக வழங்கிய பேரீச்சம் பழப்பக்கற்றுகளை அமைச்சரொருவர் வியாபாரிகளுக்கு வழங்கி இன்று அவை புறக்கோட்டை சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. இரண்டு கிலோ எடைக் கொண்ட இவ் பேரீச்சம் பழப்பக்கற்றுகளில் சவூதி அரசின் நன்கொடை இதனை விற்பனை செய்ய முடியாது என வாசகம் அச்சிடப்பட்டுள்ளது.
இதனை கவனத்தில் கொள்ளாது சட்ட விரோதமான முறையில் விற்பனை செய்யப்படுகின்றன. இது தொடர்பில் வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சின் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு கடிதம் அனுப்பினேன்.
ஆனால், இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. எனக்கு பதில் கிடைக்கவுமில்லை.
நீதி இன்று நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பொலிஸார் அமுல்படுத்த வேண்டிய சட்டத்தை பொது பல சேனாவினர் கையிலெடுத்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை பதுளையிலுள்ள முஸ்லிம் வர்த்தகர்களுக்கு சொந்தமான புடவைக் கடைக்குள் புகுந்து இச்சேனாவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பெண்கள் ஆடை மாற்றும் போது வீடியோ படம் எடுத்ததாகவும் குற்றம் சாட்டியே அங்கு ஊழியர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றிருக்குமானால் அதற்கு எதிராக பொலிஸாரே நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் பொது பல சேனாவினர் சட்டத்தை கையிலெடுத்துள்ளனர்.
அதுமட்டுமல்லாது நகரங்களிலுள்ள முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் இலக்கு வைத்து தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலை தொடர்கதையாகி விட்டது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. நீதியே இல்லாத நாட்டில் நீதியமைச்சர் பதவி வகிக்கும் ஹக்கீம் தனது சமூகம் தாக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றார்.

Post a Comment