(Reza Mohideen)
ஊவா மாகாணம் இரு மாவட்டங்களை உள்ளடக்கி உள்ளது. அவையாவன மொனராகலை , பதுளை என்பனவாகும். இவற்றில் மொனராகல மாவட்டத்தில் எம்மவர் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பதால் அதனை விடுத்து பதுளை மாவட்டத்தில் மட்டும் கவனம் செலுத்துவோம்.
பதுளை மாவட்டத்தில் மொத்தம் ஒன்பது தொகுதிகள் உள்ளன, இவற்றில் மொத்தமாக சுமார் நாற்பத்து எட்டாயிரம் முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். இத்தொகை சிலவேளை கொஞ்சம் கூடவோ அல்லது குறையவோ வாய்ப்பு உண்டு. ஆனால் நிச்சயம் ஒரு சிலர் சுயநலத்துக்காக பீற்றுவதுபோல் முஸ்லிம்களின் தொகை அறுபதாயிரம் எழுபதாயிரம் அல்ல. இவ்வாறு எக்கச் சக்கமாக எண்ணிக்கையைக் கூட்டி கணக்கு பார்ப்போர் அதன் பாதிப்பை அறியாதோரே. உள்ள வாக்காளர்களிலும் வாக்களிக்க செல்வோர் அதிக பட்சம் அறுபது சத வீதமானோரே. அவ்வாறு பார்க்கும்போது ஏறக்குறைய இருபத்து எட்டாயிரம் பேர் மட்டுமே வாக்களிக்கச் செல்வது வழக்கமாகவுள்ளது.
எப்போதும் இவாறான கணிப்புகளின்போது குறைந்த பட்ச எண்ணிக்கைகலையே கணக்கு எடுக்க வேண்டும். சென்ற முறை முஸ்லிம் அபேட்சகர்களுக்கு கிடைத்த மொத்த வாக்குகளின் எண்ணிக்கை இருபது எட்டாயிரம் மட்டுமே. இதில் ஐக்கிய முன்னணி முஸ்லிம் வேட்பாளர் ஜனப். மதாருக்கு கிடைத்த சிங்கள வாக்குகளை கழித்தால் இருபத்து மூவாயிரம் வாக்குகள் மட்டுமே தனி முஸ்லிம் வாக்குகளாக கருதப் பட முடியும். எனவே இம்முறை ஐயாயிரம் வாக்குகளை மட்டுமே கூட்டி கணக்கெடுக்க வேண்டும். இந்த கணிப்பும் ஒரு விதத்தில் எனது கணிப்பினை உறுதிப் படுத்துவதாகவே உள்ளது. இந்நிலையில் ஒரு அரசியல் கட்சியோ சுயேச்சை குழுவோ ஒரு பிரதிநித்துவத்தை பெற வேண்டுமேன்றால் குறைந்த பட்சம் பதினைந்து ஆயிரம், பதினாறாராயிரம் வாக்குகளை எடுக்க வேண்டி உள்ளது.
சென்ற முறை முஸ்லிம் காங்கரஸ் தனித்துப் போட்டி இட்டதால் நான்காயிறது ஐநூறு வாக்குகள் பிரிக்கப் பட்டு எமது பிரதிநிதித்துவம் வெறும் ஐநூறு வாக்குகளினால் இளக்கப்பட்டது. இம்முறை மீண்டும் அவர்கள் பொதுக் கட்சி பொது சின்னம் என்று போட்டியிட முன் வருவார்களேயானால் மீண்டும் ஒருமுறை எமது பிரதிநிதித்துவம் இலக்கப்படக் கூடிய அபாயம் உள்ளது. ஏற்கனவே பிரதிநித்துவம் இல்லாமையினால் சொல்லொணா பிரச்சினைகளுக்கும் நெருக்கடிகளுகும் முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் எம்மவர்கள மீண்டும் சுயநலவாத சந்தர்ப்பவாத அரசியல் சக்திகளினால் நசுக்கப் படுவதை எந்த ஒரு கலிமா சொன்ன முஸ்லிமாலும் சகிக்க முடியாது. அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் சேர்ந்து ஒரு சில செல்வாக்கு இல்லாத மகிந்த ஆதரவு முஸ்லிம்களும், சுயநலவாத பழைய முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் சிலரும் இச் செயலில் ஈடுபடுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று உள்ளது.
ஏற்கனவே இவர்களது வெற்றுக் கூச்சலும், இனவாத வீராப்பு , வாய்ச் சவடால்களும் சிங்கள மக்கள் மத்தியில் , உவா மாகாண முஸ்லிம் புலிக் கட்சி எனும் புரளியை உண்டாக்கி விட்டுள்ளது. ஊவா மாகாணத்தில் ஒற்றை வாக்கை கூட பெற முடியாத ரிசாத் பதியுதீன் இந்த சதிக்கு ஆதரவு அளிப்பது மேலிடத்தின் உத்தரவாக இருக்குமோ எனும் ஊகத்தை வலுப் படுத்துகின்றது. அப்படித்தான் தப்பித் தவறி ஒரு பிரதிநிதியைப் பெற்றாலும் அவர் அரசுடன் சேருவது திண்ணம். எம்மவர் பெரும்பான்மையாக வாழும் கிழக்கில் ஒன்று பட முடியாதோர் சிறுபான்மையாக வாழும் எம்மவர் மத்தியில் ஒற்றுமை பற்றிப் பேசுவது இதுவும் மகிந்த சிந்தனையின் சித்து விளையாட்டோ என்றே எம்மை சிந்திக்க வைக்கிறது. அவ்வாறுதான் இங்குள்ளோரில் பெரும்பாலானோர் கருதுகின்றனர். அதிலும் இவர்கள் கூறும் பொய் எத்தகையது என்றால் அனைவரும் ஒன்று சேர்ந்து வாக்களித்தால் மூன்று உறுப்பினர்களை பெற முடியும் என்பதாகும். மக்களை ஏமாற்றுவதற்கு ஒரு அளவே இல்லையா... இந்த சதித்திட்டத்துக்கு ஒரு சில அரசியல் கத்துக் குட்டிகளும், புதிதாக முளைத்த காளான்களும் துணை போவது மன வருத்தமாக உள்ளது. குர்ஆன், ஹதீஸின் அடிப்படையில் கட்சியை அமைத்து விட்டு தனிப்ப் பட்ட வாழ்க்கையிலோ ,அரசியல் வாழ்க்கையிலோ இஸ்லாமிய விரோத வாழ்க்கையை மேற்கொள்ளும் இவர்களுக்கு வாக்களிப்பது பாவத்துக்கு துணை போகும் காரியம் ஆகும். ஒற்றுமை என்பது தூய இஸ்லாமிய அடிப்படையில் நல்ல காரியங்களுக்கு மட்டுமே இருக்க வேண்டும்.
இதே வேளை, 2004 இல் இடம்பெற்ற மாகாண சபை தேர்தலில் முஸ்லிம்கள் ஐக்கிய தேசியக் கட்சி மூலம் இரண்டு உறுப்பினர்களை பெற்று கொண்டதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். எனவேதான் எந்த கட்சி மூலமாயினும் சரி மக்களை குழப்பாமல் இனவாதத்தை ,பிரிவினைகளை உண்டாக்காமல் பெரும்பனமையினருடன் சார்ந்து எம்மவர்களில் பெரும்பானமையினரின் விருப்பு வெறுப்புகளை உணர்ந்து எமது பிரதிநித்துவத்தை பெற்றுக் கொள்வதே சாலச் சிறந்தது. மாறாக ஒற்றுமை எனும் போர்வையில் விச சக்திகளுக்கும் சுயநல சந்தர்ப்பவாத சகதிகளுக்கு இடம் கொடுத்தல் நமது தலையில் நாமே மண்ணை அள்ளிக் கொட்டுவது போலாகும். இஸ்லாத்தை விற்று, சமுதாயத்தை ஏமாற்றி அமைச்சுப் பதவிகளை அலங்கரித்துக் கொண்டிருக்கும் சுயநல ,அரசியல்வாதிகளையும் , அவர்களுக்கு கூஜா தூக்கும் எடுபிடிகளையும் இனியும் நம்பிக் கொண்டிருப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை. மாறாக ஊவாவிலிருந்து தகுதியான, இஸ்லாமிய தலமைகளை உருவாக்கி எமது பிரச்சினைகளை அகிம்சை வழியில் தீர்த்துக் கொள்வதே புத்திசாலித்தனம்.

Post a Comment