அரசின் எதிர்காலம் கேள்விக்குறி; பங்காளிகள் தனிப்பயணம் - லக் ஷ்மன் கிரியல்ல
Sunday, May 25, 20140 comments
அரசாங்கத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளதாலேயே பங்காளிக் கட்சிகளான ஜாதிக ஹெல உறுமயவும் தேசிய சுதந்திர முன்னணியும் தாம் பயணிக்கும் பாதையை மாற்ற முயற்சிக்கின்றதென தெரிவித்த ஐ.தே.க.வின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக் ஷ்மன் கிரியெல்ல ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் கையிலிருந்த பெளத்த கொடியை மீட்பதற்கான போராட்டத்திலும் இவ்விரு பங்காளிகளும் களமிறங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பாக லக் ஷ்மன் கிரியெல்ல எம்.பி மேலும் தெரிவிக்கையில்,
அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச ஆகியோர் அரசாங்கத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பது நாடகமல்ல. அவர்கள் உண்மையிலேயே தமது எதிர்ப்பை வெளிக்கொண்டு வர ஆரம்பித்து விட்டனர்.
ஏனென்றால் மக்கள் மத்தியில் அரசாங்கத்திற்கு இருந்து வந்த ஆதரவு மெதுமெதுவாக குறைந்து வருகிறது. அரசாங்கம் கசினோ சூதாட்டத்தை சட்டமாக்க முனைவதோடு இலங்கைக்கு போதைப்பொருள் கொண்டு வருவது, கடத்தல்கள் வியாபாரம் அதிகாரத்திலென்பதை இந்த இரண்டு அமைச்சர்களும் அவர்கள் சார்ந்த கட்சியும் ஏற்றுக் கொள்கிறது.
எனவேதான் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கசினோ சூதாட்ட சட்ட மூல வாக்களிப்பின்போது ஜாதிக ஹெல உறுமயவின் அத்துரலியே ரத்னதேரர் எம்.பி., அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோர் எதிர்த்து வாக்களித்தனர்.
அமைச்சர் விமல் வீரவன்ச வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. அதேபோன்று போதைப் பொருளை முதன்மைப்படுத்தி எதிர்க்கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை வாக்களிப்பிலும் இவர்கள் கலந்து கொள்ளவில்லை. இக்குற்றச்சாட்டுகளை அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் இது எமக்கு கிடைத்த வெற்றியாகும்.
பெளத்த கொடி
அரசாங்கத்தின் இவ்விரு பங்காளிக்கட்சிகளும் பெளத்த கொடியை தமது கையில் வைத்துக்கொண்டு சிங்கள பெளத்த அடிப்படையிலேயே அரசியலை முன்னெடுத்தனர். ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அவர்களிடமிருந்து பெளத்த கொடியை பறித்துக் கொண்டார்.
எதிர்காலம்
இன்று அரசாங்கத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. எனவே, பங்காளிகள் தமது பயணத்தை மாற்றிக்கொள்ள ஆரம்பித்துள்ளனர். அது மட்டுமல்லாது தம்மிடமிருந்து பறித்தெடுக்கப்பட்ட பெளத்த கொடியை மீளக் கைப்பற்றும் போராட்டத்தையும் ஆரம்பித்துள்ளனர்.
தமது எதிர்கால அரசியலை ஸ்திரப்படுத்திக்கொள்ளும் பயணத்தை ஆரம்பித்துள்ளனர் என்றும் லக் ஷ்மன் கிரியெல்ல எம்.பி. தெரிவித்தார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment