அமைச்சர் ரிஷாட் சுயநலவாதி- குற்றம் சுமத்துகிறார் முஜிபுர் ரஹ்மான்
Sunday, April 20, 20140 comments
(எம்.எஸ்)
பொது பல சேனாவின் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்திருப்பது கேளிக்கையான விடையமாகும். ஏனெனில் அவரும் அரசின் முக்கியமான பங்காளியாவார். அரசில் இருந்துகொண்டு அவர் யாரிடம் கோரிக்கை விடுக்கிறார் என்பதை தெளிவுபடுத்தவேண்டும் என மேல்மாகாண சபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
இந்த அரசியல் நாடகங்களை மக்கள் நன்கு அறிந்துவிட்டனர். இனிமேல் இவர்களின் கோமாளித்தனமான அரசியலை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மாளிகாவத்தையிலுள்ள ஐ.தே.க.வின் மத்திய கொழும்பு காரியாலயத்தில் அண்மையில் இடம்பெற்ற விஷேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், பொது பல சேனா உள்ளிட்ட சில பேரினவாத அமைப்புகள் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக நாட்டில் மத வாதத்தை தூண்டி வருகின்றது. அத்தோடு ஏனைய மதத்தினரின் உரிமைகளில் தலையிட்டு அதற்கு பங்கம் விளைவிக்கின்றனர். இதற்கு அரசாங்கம் இன்று வரை எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இதனை தடுத்து நிறுத்துமாறு நாம் தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு நாம் அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றோம். இந்நிலையில் தற்போது அமைச்சர் ரிஷாடும் இதனை தடுத்து நிறுத்துமாறு ஊடகங்களுக்கு அறிக்கை விடுத்துள்ளார். அவரின் இந்த கோரிக்கை சந்தோஷமளிக்கிறது.
எனினும் கடந்த இரண்டு வருடங்களாக முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக இவர்கள் செயற்பட்டமைக்கு கண்டணம் தெரிவிக்காது அவருக்கு எதிராக பொதுபலசேனா போர்கொடி தூக்கும் போதே ரிஷாட் இவ்வாறான கோரிக்கையை முன்வைத்துள்ளார். இது வெட்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில் அவரிடம் சமூக நலம் இல்லை சுய நலம் தான் இருக்கிறது.
இன்னுமொரு வெட்கப்பட வேண்டிய ஒரு செய்தியையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த பேரினவாதச் செயற்பாடுகள் தொடர்பில், எமது கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 06 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பெறுமதிமிக்க உரையொன்றை நிகழ்த்தினார். பொதுபலசேனா உள்ளிட்ட பௌத்த பேரினவாத அமைப்புக்கள் மேற்கொண்ட பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல், ஹலால் எதிர்ப்பு நடவடிக்கை போன்றவற்றினூடாக முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிகளை தனது உரையில் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியிருந்தார்.
அந்த உரையை இரண்டு அரசியல்வாதிகள் கடுமையாகக் குழப்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் முஸ்லிம் பிரதிநிதிகளாவர். ஒருவர் அமைச்சர் றிசாத் பதியுத்தீன். மற்றவர் பிரதியமைச்சர் அப்துல் காதராவார். ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றும்போது, அமைச்சர் றிசாத் பதியுத்தீன் சத்தமாகக் குரலெழுப்பி அந்த உரையினை இடையூறு செய்து கொண்டிருந்தார். இதன்போது, ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் றிசாத் பதியுத்தீனைப் பார்த்து 'முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் எதிராக வன்முறைகள் மற்றும் பிரச்சினைகள் எழுந்த போதெல்லாம் ஓடி ஒளிந்து கொண்ட நீங்கள் இன்று உங்களின் மக்களுக்காக குரல் கொடுக்கும் என்னை எதிர்த்து இங்கு கத்திக் கொண்டிருக்கிறீர்கள்' என கடும் தொனியில் காட்டமாகக் கூறினார்.
பொதுபலசேனா போன்ற பௌத்த பேரினவாத அமைப்புக்களால், முஸ்லிம்கள் மீது புரியப்பட்ட அநீதிகள் குறித்து ரணில் விக்கரமசிங்க பேசிய போது, பாராளுமன்றத்தில் 'எந்த றிசாத் பதியுத்தீன்' இடையூறு செய்தாரோ, அதே நபர் மீது - இப்போது, பொதுபலசேனா போர்கொடி தூக்கியுள்ளது. இதனால், ஆவேசமடைந்துள்ள அமைச்சர் றிசாத் பதியுத்தீன் பொதுபலசேனாவுக்கு எதிராய் பேசிக்கொண்டிருக்கிறார்.
இதேவேளை, பொது பல சேனாவுக்கு எதிராக அறிக்கை விட்டுக்கொண்டிருப்பதால் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது. வீனாக அறிக்கை விட்டு மக்களை திசைதிருப்பாது, ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெறும் அமைச்சரவை கூட்டத்தின் போது முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ரிஷாட் பதியுதீன் பேச வேண்டும். ஜனாதிபதிதான் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் எனவே அமைச்சரவையில் அவர் இதற்கு பதிலளிக்க வேண்டும்.
இல்லையென்றால் தனது அமைச்சு பதவியை துறந்து எதிர்கட்சி வரிசையில் அமர்ந்துகொண்டு இவ்வாறான கோரிக்கைகளை விடுங்கள்.
அத்தோடு, முஸ்லிம்களின் பிரச்சினைகள் தீர்பதற்காக ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறும் கோரிக்கை விடுத்திருக்கிறார். இந்த அரசாங்கத்தின் கீழ் பல ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனபோதிலும் அவை செயற்பட்டதாக தெரியவில்லை என முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டினார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment