எஸ்.என்.எம்.ஸுஹைல்
இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுவது, கிண்ணத்தை இழப்பது என்று பல தடவைகள் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களை ஏமாற்றிவிட்டது. இருப்பினும் இலங்கை ரசிகர்கள் சோர்ந்து போகவில்லை. தொடர்ச்சியாக இலங்கை கிரிக்கெட் அணிக்கு தமது ஆதரவினை வெளிக்காட்டி உட்சாகமூட்டி வந்தனர். 18 வருட காலம் சுமந்திருந்த ஏமாற்றங்களை இலங்கையின் கிரிக்கெட் சிங்கங்கள் போக்கிவிட்டன. இந்த வெற்றி தேசத்தின் வெற்றியாக நாடெங்கும் கொண்டாடப்பட்டுவருகின்றது.
கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதி 5 ஆவது உலக கிண்ண போட்டிகள் ஆரம்பமாகின. முதற்கட்டமாக தகுதிகாண் போட்டிகளுக்காக குழு 'ஏ' யில் பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஹொங்கொங், நேபால் ஆகிய ஆசிய நாடுகளும் குழு 'பி' யில் நெதர்லாந்து, அயர்லாந்து, சிம்பாவே, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய அணிகள் மோதின. அச்சுற்றிலிருந்து பங்களாதேஷ் மற்றும் நெதர்லாந்து அணிகள் தகுதி பெற்று 'சுபர் டென்' அணிகளுள் இடம்பிடித்தன.
பின்னர் இலங்கை, நியுஸிலாந்து, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகள் குழு ஒன்றிலும் இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகள் குழு இரண்டிலும் இடம்பிடித்தன. இவ்விரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற லீக் போட்டிகளுக்கமைய அறையிறுதி போட்டிக்கு குழு '1' இருந்து இலங்கை அணியும் தென்னாபிரிக்கா அணியும் குழு '௨' இல் இருந்து இந்திய அணியும் மேற்கிந்தியத்தீவுகள் அணியும் தகுதிபெற்றன.
ஆரம்பத்தில் முதல் இரண்டு போட்டிகளிலும் தென்னாபிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கெதிராக வெற்றியை சுவைத்த இலங்கை அணி, இங்கிலாந்து அணிக்கெதிராக அதிர்ச்சி தோல்வியடைந்தது. இதன்போது அறையிறுதிக்கான நம்பிக்கையிருந்த போதிலும் நியுஸிலாந்து அணிக்கெதிராக கட்டாயம் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது. இப்போட்டியில் எதிர்பாராத விதத்தில் ரங்கன ஹேரத்தின் அபார பந்து வீச்சால் பெரு வெற்றியை பெற்றது இலங்கை..
அறையிறுதிக்கு தகுதிபெற்ற நிலையில் அப்போதைய நடப்பு சாம்பியனும் அதிரடி துடுப்பாட்டக்காரர்கள் மற்றும் அச்சுறுத்தும் பந்துவீச்சாளர்களை கொண்ட மேற்கிந்தியத்தீவுகள் அணியை எதிர்கொண்டது இலங்கை அணி. இப்போட்டி பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. எனினும் இலங்கை அணியினரின் வெற்றிக்கான வியூகத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணி தோற்றுப்போனது. அத்தோடு அன்றைய தினம் பெய்த ஐஸ் கட்டி மழையும் போட்டியின் சுவாரஸ்யத்தை குறைத்துவிட்டது. இதேவேளை இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவானது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (06) பரபரப்பான இறுதிபோட்டியில் இந்திய அணியை எதிர்கொண்டது இலங்கை அணி. மிர்பூரில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை இந்திய அணிக்கு வழங்கியது.
இதன்படி, துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்த நிலையில் 130 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 17.5 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது.
தமது இறுதி இருபதுக்கு இருபது போட்டியில் விளையாடிய, முன்னாள் அணி தலைவர்களான குமார் சங்ககார ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களையும், மஹேல ஜனவர்தன 24 ஓட்டங்களையும் பெற்று வெற்றிக்கு வழிவகுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை இலங்கை அணி முதல் முறையாக வெற்றிக்கொண்டது.
2009ஆம் 2012ஆம் ஆண்டுகளில் இருபதுக்கு 20 உலக கிண்ண இறுதி போட்டிக்கு இலங்கை அணி தகுதி பெற்றியிருந்த நிலையிலும் கிண்ணத்தை சுவீகரிக்க முடியாது போனது.
இந்த நிலையில், 1996ஆம் ஆண்டு இலங்கை அணி உலக கிண்ணத்தை கைப்பற்றி இருந்த நிலையில், 18 வருடங்களுக்கு பின்னர் உலக கிண்ணம் ஒன்றை இலங்கை அணி தற்போது கைப்பற்றியுள்ளது.
இதுவரை இடம்பெற்ற இருபதுக்கு-20 உலகக் கிண்ணத்தை முறையே இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள் ஆகிய அணிகள் கைப்பற்றியுள்ளன.
இந்நிலையில் இந்த இருபதுக்கு -20 உலகக் கிண்ண போட்டிகளில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அந்த வகையில் பல சாதனைகளுக்கு சொந்தமாக இலங்கை அணியும் அவ்வணி வீரர்களும் காணப்படுகின்றனர்.
இதன்படி நோக்கும் போது இருபது ஓவர் உலகக் கிண்ண போட்டியில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை இலங்கை அணி வீரர்களே பெற்றுள்ளனர்.
இதுவரை 31 இருபதுக்கு 20 உலக கிண்ண போட்டிகளில் விளையாடியுள்ள மஹேல ஜெயவர்தன, 1016 ஓட்டங்களை குவித்துள்ளார். இதுவே இருபதுக்கு -20 உலகக் கிண்ண போட்டியில் ஒரு வீரரின் அதிகபட்ச மொத்த ஓட்டங்கள் ஆகும். இதில் ஒரு சதம், 6 அரைசதங்கள் அடங்குகின்றன.
இதேவேளை, அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இலங்கையின் லசித் மலிங்க முதலிடத்திலுள்ளார். 31 போட்டிகளில் விளையாடி 38 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார்.
அணிகளின் சாதனையிலும் இலங்கை முதலிடம் பெற்றுள்ளது. 2007 ஆம் ஆண்டு இடம்பெற்ற இருபதுக்கு-20 உலகக் கிண்ணப் போட்டியில் அதிகபட்சமாக இலங்கை 6 விக்கெட் இழப்புக்கு 260 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இச் சாதனையை கென்யா அணிக்கு எதிராக இலங்கை அணி படைத்தது.
இருபதுக்கு -20 உலகக் கிண்ண போட்டியில் மிகக் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்த சாதனை இந்த உலகக் கிண்ண போட்டியின் போதுதான் படைக்கப்பட்டது. அதனையும் இலங்கை அணியே நிகழ்த்தியிருந்தது.
நெதர்லாந்து அணி இலங்கை அணிக்கு எதிராக 10.3 ஓவர்களில் 39 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததே மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கை ஆகும்.
இதற்கு அடுத்தபடியாக இலங்கைக்கு எதிராக நியூஸிலாந்து 15.3 ஓவர்களில் 60 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தமையாகும்.
இறுதி இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி இந்திய அணியினை தோற்கடித்து வெற்றிக் கிண்ணத்தை பெற்றுள்ள நிலையில், சர்வதேச தரப்படுத்தல் வரிசையில் இலங்கை அணி பாரிய முன்னேற்றத்தை கண்டுள்ளது. ஏற்கனவே ஒருவருடகாலமாக முதலிடத்தை தக்கவைத்திருந்த இலங்கை இந்த உலககிண்ண போட்டின் போது இங்கிலாந்து அணியிடம் தேல்வியடைந்ததையடுத்து இரண்டாம் நிலைக்கு பின்தள்ளப்பட்டது. எனினும் அடுத்தடுத்து தொடந்தும் பெற்ற ஹெற்றிக் வெற்றியின் மூலம் மீண்டும் முதலிடத்தை பெற்றுக்கொண்டது.
குறிப்பாக தரப்படுத்தல் வரிசையில் துடுப்பாட்டத்தில் 5வது இடத்தில் இருந்த குசல் பெரேரா, உலக தரத்தில் முதல் 10 இடத்திற்குள் முன்னேறிய இலங்கை வீரர் என்ற நிலையை எட்டியுள்ளார். அதேபோல அஞ்சலோ மத்தியு உலக தரத்தில் 41 ஆவது இடத்திலும் உள்ளார். திசர பெரேரா மூன்று படிகளால் முன்னேறியுள்ளார். 20க்கு 20 கிரிக்கட் போட்டிகளில் இருந்து விடைபெறும் மஹேல ஜயவர்தனா 12 ஆவது இடத்திலும், குமார் சங்கக்கார 17வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
பந்து வீச்சு தரப்படுத்தலில் லசித் மாலிங்க 13வது இடத்திலும், ரங்கன ஹேரத் 70வது இடத்திலும் உள்ளார்கள்.
இவ்விடத்தில் நாம் முக்கிய விடயமொன்றை நோக்க வேண்டியுள்ளது. கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக முதலிடத்தை தக்கவைத்துள்ள இலங்கை அணி வீரர்கள் தரப்படுத்தலில் முன்நிலையில் இல்லை. அணியை தொடர்ந்தும் முதலிடத்தில் வைத்துள்ள வீரர்களிடத்தில் சுயநலம் இல்லை என்பது சுட்டிக்காட்டத் தக்கதாகும்.
இலங்கை இருபதுக்கு 20 கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமல் பாராட்டத்தக்கவர். ஏனெனில் சந்திமல் தொடர்ந்தும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க தவறியமையால் தலைமைப் பதவியை பாதுகாக்காது அணியின் வெற்றிக்காக அவர் செய்த விட்டுக்கொடுக்கொடுப்புக்கு ஒரு சபாஷ் சொல்லலாம். அத்தோடு நின்றுவிடாது இலங்கை அணி இறுதிப்போட்டியில் களத்தடுப்பை மேற்கொண்ட போது விக்கட் காப்பாளருக்கு தலைகவசத்தையும் அவரே கொண்டுவந்தார். இவ்வாறு ஒரு பணிவும் விட்டுக்கொடுப்புமுள்ள அணித் தலைவர் இருப்பது நாட்டிற்கே பெருமையாகும்.
இருபதுக்கு 20 போட்டியில் துடுப்பாட்டமே ஆதிக்கம் செலுத்தி வந்தன அந்த விதியினை மாற்றியமைத்தவர் உலக கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை அணிக்கு தலைமை வகித்த லசித் மலிங்கவாகும்.
இம்முறை போட்டிகளில் இலங்கை அணிக்கு ஓரளவு துடுப்பாட்டம் கைகொடுத்தாலும் அதிகமாக பந்துவீச்சே கைகொடுத்துள்ளதை மறுக்க முடியாது.
இலங்கை கிரிக்கெட் சபையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் புரிய நிர்வாகத்தினரின் செயற் திறன் அர்ப்பணிப்புகள் இந்த வெற்றிக்கு உறுதுனையாக இருந்துள்ளன.
தெரிவுக்குழு தலைவரும் முன்னாள் கிரிக்கெட் அணியின் தலைவருமான சனத் ஜயசூரிய , பயிற்சியாளர் புஅல் பெப்ரக் துடுப்பாட்ட பயிற்சியாளர் மாவன் அத்தபத்து, வேகப் பந்துவீச்சு பயிற்சியாளர் சமிந்த வாஸ், சுழல் பந்துவீச்சு பயிற்சியாளர் முத்தைய முரளிதரன் களத்தடுப்பு பயிற்சியாளர் ருவன் கல்பகே ஆகியோரது பங்களிப்பு முக்கியமானதாகும்.
ஐந்தாவது உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் அணியின் தலைவராக தினேஷ் சந்திமலும் உப தலைவராக லசித் மலிங்கவும் செயற்பட்டனர். எனினும் இறுதி லீக் போட்டி, அறையிருதி போட்டி மற்றும் இறுதிப் போட்டிக்கு லசித் மலிங்கவே தலைமை வகித்தார். முதல் மூன்று லீக் போட்டிக்கும் சந்திமல் தலைமை தாங்கினார்.
அத்தோடு அனுபவ வீரர்களும் இலங்கை கிரிக்கெட் அணியின் மூம் மூர்த்திகள் என வர்ணிக்கப்படுபவர்களுமான திலகரத்தின டில்ஷான், மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்ககார ஆகியோர் இளம் வீரர்களை அழகாக வழி நடத்தினர். குஷால் பெரேரா, திஸர பெரேரா, லகிரு திரிமண்ணே ஆகியோரின் அதிரடியான துடுப்பாட்டம், சகலதுறை ஆட்டக்காரர் அஞ்சலோ மத்தியூஸின் நிதான ஆட்டம், ரங்கன ஹேரத், சசித்ர சேனாநாயக்க, அஜந்த மெண்டிஸ் ஆகியோரின் சுழல் பந்துவீச்சு, லசித் மலிங்க, நுவன் குலசேகர ஆகியோரின் பந்து வீச்சின் வேகம், சுரங்க லக்மல், சீகுகே பிரசன்ன ஆகியோரின் ஒட்டுமொத்த பங்களிப்பே இந்த வெற்றிக்கு வழிவகுத்தன.
இறுதி போட்டி மைதானத்தில் இந்திய அணிக்கான ஆதரவாளர்கள் அதிகமாக இருந்த போதிலும் இலங்கை அணி சோபிக்க தவறவில்லை. இலங்கையிலிருந்து விஷேட விமானம் மூலம் இறுதி போட்டியன்று பங்களாதேஷக்கு ரசிகர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அத்தோடு மீபூர் மைதானத்திற்கு போட்டியை கண்டுகளிக்க அமைச்சர் ரவூப் ஹக்கீமும் சென்றிருந்தார். மஸ்லிம்களை பிரிதிநிதித்துவப் படுத்தி அவர் அங்கு சென்றமை வரவேற்கத்தக்கது.
சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்த இலங்கை தேசிய கிரிக்கட் அணிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ஜனாதிபதி தொலைபேசியின் ஊடாக அணியின் தலைவர் லசித் மாலிங்க, ஆட்ட நாயகன் குமார் சங்கக்கார மற்றும் சிறந்த துடுப்பாட்டக்காரர் மஹெல ஜயவர்தனா ஆகியோரை தொடர்பு கொண்டு தமது வாழ்த்தினை வெளியிட்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதேவேளை, 18 வருட இடைவெளிக்குப் பின்னர் உலக கிண்ணம் ஒன்றை இலங்கை அணி நாட்டிற்கு கொண்டு வருவது மகிழ்ச்சியை அளிப்பதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவின் வாழ்த்து செய்தியில், குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் இணைந்து இலங்கை கிரிக்கட்டிற்கு அளப்பரிய பெரும் பங்கினை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்ட இலங்கை கிரிக்கட் அணியினர் நேற்று முன்தினம் இலங்கை ரசிகர்களின் மேள தாளங்களுடன் வரவேற்கப்பட்டனர்.
விமான நிலையத்தில் வரவேற்கப்பட்ட பின்னர் திறந்த பஸ் வண்டியொன்றில் ஏற்றப்பட்டு நீர்கொழும்பு பழைய வீதியின் ஊடாக காலிமுகத் திடலுக்கு அழைத்து வரப்பட்டனர். இங்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கிரிக்கட் வீரர்களுக்கு கோலாகலமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
உலக வெற்றிக் கிண்ணத்தை பெற்றிருக்கும் இலங்கை அணியினருக்கு சர்வதேச கிரிக்கட் கவுன்சில் 14கோடி ரூபாவை பரிசாக வழங்கியிருக்கிறது.
இத்துடன், மேலதிகமாக இலங்கை கிரிக்கட் சபை இந்த வீரர்களின் சாதனையைப் பாராட்டி மேலும் 20 கோடி ரூபாவை பரிசாக வழங்க உள்ளது.
இலங்கையின் கிரிக்கட் வரலாற்றில் இதுவே முதல் தடவையாக இவ்வளவு பெருந்தொகை கிரிக்கட் அணிக்கு அன்பளிப்பாக கொடுக்கப்படவுள்ளது.
தற்போது இலங்கை கிரிக்கட் வீரர்களுக்கு கொடுக்கும் சம்பளத்திற்கு மேலதிகமாகவே இந்த அன்பளிப்பும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறும் மஹேல ஜயவர்தனவும், குமார் சங்கக்கார ஆகியோருக்காக இலங்கை கிரிக்கட் சபை இன்னுமொரு விசேட கெளரவிப்பு நிகழ்வினையும் ஒழுங்கு செய்ய உள்ளது.
கூட்டாக செயற்படுதல், ஒரு குழுவில் உள்ள ஒவ்வொருவரும் தமது பங்களிப்பை இதய சுத்தியோடு ஆற்றுதல், தலைமைத்துவத்திற்கு கட்டுப் படுதல், குழுவை தலைமை அரவணைத்து வழிநடாத்தல்,
ஒவ்வொரு நகர்வின் போதும் கூட்டாகவே ஆலோசனைகள் செய்து அமுலுக்கு கொண்டுவரல், தலைமை தனியாளாக எதேச்சாதிகாரமாக நடந்து கொள்ளாதிருத்தல் போன்ற பண்புகள் இலங்கை அணியின் வெற்றிக்கு கைகொடுத்துள்ளது. அத்தோடு வெற்றியிலும் தோல்வியிலும் நிதானத்தை பொறுமையை கடைபிடிப்பதில் இலங்கை அணிக்கு நிகர் இலங்கை அணியினரே.
இந்த இருபதுக்கு 20 உலக கிண்ண வெற்றி எல்லோருக்கும் மகிழ்ச்சி தரக் கூடியதாக இருக்கின்றது. அத்தோடு 21 மில்லியன் மக்களுக்கு மற்றுமொரு உலக கிண்ணத்தை பெற்றுக்கொடுக்க 18 வருடங்கள் தேவைப்பட்டன. பொறுமையிழக்காது ஆதரவாளர்கள் தொடர்ந்தும் உட்சாகப்படுத்தியமைக்கு கண்ணீரோடு நன்றி தெரிவிக்கும் இலங்கை வீரர்களின் மட்டற்ற மகிழ்ச்சி எல்லேரையும் நெகிழவைத்து விட்டது. ஆசிய கிண்ணத்தையடுத்து இருபதுக்கு 20 கிண்ணத்தை வென்றது இலங்கை. அடுத்து 2015 உலகக் கிண்ண போட்டிகளுக்காக காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.



















Post a Comment