அரச உடைமைகளை அமைச்சர் றிஷாத் பதியூதீன் தேர்தலுக்குப் பயன்படுத்துவதாக தேர்தல்கள் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில்
2013ம் ஆண்டு பெரும்போக விவசாயத்தின்போது கடுமையான வரட்சி நிலவியதன் காரணமாக வட மாகாணத்தில் விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டனர்.
இதனால் இப்பிரதேசத்திற்கு நஷ்ட ஈடுகள் வழங்கப்பட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் அவர்கள் விஷேட நிதி ஒதுக்கீடு ஒன்றினை அரசாங்கத்திடம் கோரி இருந்தார். அத்துடன் இதே விடயத்தை வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் கோரியிருந்தனர்.
இந்நிலையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினூடாகவும் விவசாயத் திணைக்களத்தினூடாகவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் குறித்த வரட்சிநிதி, 2014 செப்டம்பர் முதல் வழங்கப்பட்டது. அரசியல் தலையீடுகள் காரணமாக குறித்த நிதி மன்னார் மாவட்டத்திற்கு உரிய நேரத்தில் வழங்கப்படவில்லை.
தற்போது ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு தேர்தல் திகதி குறிப்பிடப்பட்டு தேர்தல் பிரச்சாரங்கள் மும்முரமாக இடம்பெறுகின்றன.
இந்நிலையில் நீண்ட காலமாக முடக்கி வைக்கப்பட்டிருந்த மேற்படி வரட்சி நிதியினை நேற்றையதினம் (13.12.2014) முசலி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் அமைச்சர் றிஷாட் விநியோகித்து வைத்தார்.
மன்னார், முசலி, மாந்தை மேற்கு, மடு, நானாட்டான் போன்ற பிரதேச செயலகத்தில் வெவ்வேறு திகதிகளில் விநியோகிப்பதற்கு வழங்கப்பட்ட அறிவித்தல்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு நேற்றையதினம் அனைத்துப் பிரதேச செயலாளர்களும் பயனாளிகளும் முசலி முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு அழைக்கப்பட்டனர்.
இதற்கு அரச வாகனங்கள், அரச அதிகாரிகள், அரச உடைமைகள் என பல விடயங்கள் பயன்படுத்தப்பட்டன. இது தேர்தல் சட்ட விதிகளை மீறும் நடவடிக்கையாகும்.
மக்களுக்கு கிடைக்கவேண்டிய நலன்கள் நீண்ட காலமாக தடுத்து நிறுத்தப்பட்டது மாத்திரமன்றி அவற்றை தேர்தல் காலங்களில் பயன்படுத்தியமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்படி விடயத்தினை மன்னார் பிரதேச மக்கள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் அவர்களின் கவனத்திற்கும், வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் அவர்களின் கவனத்திக்ரும் கொண்டு சென்றுள்ளனர்.
அத்துடன் இது தொடர்பில் தேர்தல் திணைக்களத்திலும் மக்கள் முறைப்பாடு ஒன்றினையும் பதிவு செய்துள்ளனர்.
Post a Comment