கடும் குற்றங்களை இழைத்த 18 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி!
Wednesday, December 31, 20140 comments
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 18 கடுமையான குற்றவாளிகளுக்கு கடந்த வாரம் பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில் ஒருவர் 9 கொலைகள், கொள்ளைகள் மற்றும் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டில் 37 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றவர் எனக் கூறப்படுகிறது.
அந்த நபர், தெபேகம பிரியந்த அல்லது தெபேகம பிரியசாந்த அல்லது புச்சா என அழைக்கப்படும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவின் இணைப்புச் செயலாளர் எனவும் தெரியவருகிறது.
மிரிஹான விசேட பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இந்த நபரிடம் இருந்து ரி 56 ரக துப்பாக்கி, ஒரு பிரவுணிக் ரக கைத்துப்பாக்கி, ரி 56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 22 தோட்டாக்கள், 9 கைத்துப்பாக்கி தோட்டக்கள், ஒரு ரம்பே ரக கத்தி, இரண்டு கடவுச்சீட்டுகள், ஒரு கைக்குண்டு ஆகியனவும் கைப்பற்றப்பட்டன.
இந்த நபருக்கு எதிராக 19 வழக்குகள் நடைபெற்று வருவதுடன் அவற்றில் 9 வழக்குகளில் குற்றவாளி என இனங்காணப்பட்ட 37 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் பல வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி இப்படியான பல கடுமையான குற்றவாளிகளுக்கு கடந்த காலத்திலும் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளார்.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும் சிறைச்சாலைகளில் அது தொடர்பான ஆவணங்கள் இருப்பதில்லை.
சிறைச்சாலை புலனாய்வு பிரிவு என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினால் ஆரம்பிக்கப்பட்ட பிரிவினர் குறித்த கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியதாக கூறி வெளியில் அழைத்துச் சென்று விடுகின்றனர்.
இவ்வாறு மேலும் 17 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ராஜபக்சவினர் மேற்கொள்ளவிருக்கும் ஏதேனும் குற்றச் செயலுக்காக இவர்கள் சிறையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என சிறைச்சாலை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
Post a Comment