இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை ஆதாரபூர்வமாக ஆவணப்படுத்தி, “The Muslims of Sri Lanka – One thousand years of Ethnic Harmony (900-1915)” என்ற நூலை எழுதிய கலாநிதி லோனா தேவராஜாவின் மறைவிற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனுதாபத்தை தெரிவித்துள்ளது.
அவ்வமைப்பின் ஊடகப் பிரிவு செயலாளர் அஷ்-ஷைக் பாழில் பாரூக் அனுப்பி வைத்துள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பல புத்தகங்களை எழுதிய வரலாற்று ஆசிரியையான கலாநிதி லோனா தேவராஜா , இந்நாட்டு முஸ்லிம்களின் வரலாறு மூடிமறைக்கப்படும் சந்தர்ப்பத்தில் மேற்குறிப்பிட்ட புத்தகத்தை எழுதியது மிகவும் காத்திரமானதொரு பணியாக கருதப்பட வேண்டும். அன்னாரது இந்த நூலின் மூலம் அவர் ஒரு வரலாற்றையே பதித்து விட்டார். ஒரு சில விமர்சனங்களுக்கு மத்தியிலும் உண்மையான வரலாற்றை மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில், அன்னார் தனது நூலை எழுதி வெளியிட்டது பாராட்டத்தக்கதாகும். இத்தகைய, மனசாட்சியுடன் செயற்படக்கூடிய வரலாற்று ஆசிரியர்கள் மூலமே உண்மையான வரலாறு பாதுகாக்கப்படுகின்றது.
அன்னாரின் சேவையை இந்நாட்டு மக்கள் பொதுவாகவும் இலங்கை முஸ்லிம்கள் குறிப்பாகவும் மறக்க முடியாது. மேற்குறித்த பணியை முஸ்லிம் சமூகம் நன்றியுடன் நினைவுகூற கடமைப்பட்டுள்ளது. மேலும் கலாநிதி லோனா தேவராஜா அவர்களின் மரணத்தால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்திற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இந்நாட்டு முஸ்லிம்கள் சார்பாக தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது.

Post a Comment