சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் பன்மைத்துவ சமூகத்தில் தனது
அரசியல்சார் எழுத்துக்களையும் கருத்துக்களையும் ஒரு தனித்துவமான கோணத்தில் முன்வைக்க கூடியவர். அவரால் 2006 காலப்பகுதியில் எழுதப்பட்ட பன்சலே விப்லவய (பன்சலையில் புரட்சி) என்ற நூல் இலங்கை இனப்பிரச்சினையுடன் பிணைந்துள்ள மதம்சார் பிரச்சினையை அலசுவதுடன் இவ்விடயத்தை ஒரு மாற்று உரையாடல் களத்துக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறது. அந்தவகையில் இன்று முஸ்லிம் சமூகம் நாட்டில் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு சில தீர்வுகளையும் படிப்பினைகளையும் புரிதல்களையும் இந்நூல் உருவாக்கும் என்பதை இந்நூலை வாசிக்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது. காலப் பொருத்தம் கருதி இந்நூலை மையப்படுத்திய சில கருத்துக்களை தொடராக 'நம்மவன்' வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
(தொடர் 01)
கங்கொடவில சோம தேரரின் மறைவுக்கு பின்னர் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்தே நூலாசிரியர் இந்நூலை எழுத ஆரம்பித்ததாக அவரது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். வரலாறு நெடுகிலும் இலங்கை முகம் கொடுத்து வந்துள்ள இனப்பிரச்சினைகளுக்கும் மதங்களுக்கும் வெகுவான தொடர்புண்டு. அதேநேரம் பௌத்த மதம் சிங்கள இனத்துடன் இணைந்தமையும் பிரச்சினைகளுக்கான காரணம் என அவரது முன்னுரையில் தொட்டுக்காட்டியுள்ளார்.
கண்ணுக்கு புலப்படக்கூடிய, புலப்படாத எல்லா வகையான காரணங்கள் தொடர்பிலும் அலசப்படும் போதே எமது நாடு முகம் கொடுத்துள்ள இனம் சார் பிரச்சினைகளுக்கு என்றோ ஒருநாள் தீர்வு கிடைக்கும் என விக்டர் ஐவன் எதிர்வு கூறுகின்றார்.
இலங்கையில் மதங்களுக்கும் இனங்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பில் அலசுவதற்கு முன்னால் மதங்களின் வருகை மற்றும் அவற்றின் விஸ்தரிப்பு தொடர்பிலான ஒரு வரலாற்றுப் பார்வை தேவை.
மனித வரலாற்றின் ஆரம்ப காலப்பகுதியில் மக்கள் சிறு குடிப்பரம்பலுக்குள் சிறுகோத்திரங்களாகவே வாழ்ந்தனர். ஒவ்வொரு கோத்திரத்தினருக்கும் தனியான கடவுள்கள் காணப்பட்டனர். குறித்த கோத்திரத்தின் நிலப்பரப்பை கோத்திரத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த கடவுள்களே பாதுகாத்து வருவதாகவும்
நம்பினர். காலவோட்டத்தில் சிறுகோத்திரங்கள் இணைந்து சிற்றரசுகளாக உருவாகின. அதன்போது சில கோத்திரங்களுக்கு சொந்தமான கடவுள்கள் காணாமல் சென்றதுடன் சிற்றரசுகள் அரசுகளாக மாறியபோது அதிகாரமிக்க சிற்றரசுகளின் கடவுள்கள் மேன்மை பெற்றன.
அதேவேளை, நாடுகளுக்கிடையில் இடம்பெற்ற போர், கொள்ளை, ஆக்கிரமிப்புக்களின் போது அதிகாரம்மிக்க அல்லது வெற்றி பெற்ற அரசுகள் தழுவியிருந்த மதங்களையே ஆக்கிரமிப்புக்கு உள்ளான நாடுகள் பின்பற்ற வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு மக்கள் ஆளாக்கப்பட்டனர்.
இவ்வாறான மதமாற்றங்களின் போது புதிதாக அறிமுகமான கலாசாரங்கள் மக்கள் ஏற்கனவே பின்பற்றிக் கொண்டிருந்த கலாசாரங்களுடன் முரண்படும் நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் மதமாற்றத்துக்கு எதிரான குரல்கள் ஓங்கத்துவங்கின.
கால ஓட்டத்தில் உற்பத்தி மற்றும் அரசியலிலும் மதங்களிலும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின. மக்கள் மேட்டுக்குடியினருடன் முரண்பட்டு தொழிலாளர் வர்க்கத்துக்காக குரல் எழுப்பிய மதங்களுடன் மக்கள் இணைந்து கொண்டதினை வரலாற்றில் இருந்து கண்டு கொள்ள முடியும்.
அதேநேரம் ஒவ்வொரு அரசையும் மையப்படுத்தி மதங்கள் காணப்பட்டன.
அந்த விடயம் காலவோட்டத்தில் மதம் மற்றும் அரசுடன் காணப்பட்ட உறவுகள் தகர்க்கப்பட்டு மதம் என்பது தனி மனித விருப்புடனும் உரிமையுடனும்
தொடர்புபட்ட விடயமாக பரிணாமம் பெற்றதை காண முடிகிறது.
விஞ்ஞான யுகம் உலகில் அறிமுகமானதைத் தொடர்ந்து மதங்கள் தொடர்பில்
புதியதோர் புரிதலையும் பார்வையையும் மக்களுக்கு அது கொடுத்தது.
மதங்களில் காணப்பட்ட பல இரகசியங்களை விஞ்ஞானம் தகர்த்து
வெளிப்படுத்தி காட்டியது. மக்களுக்கும் மதங்களுக்கும் இடையில்
விஞ்ஞானம் ஓர் தளர்வு நிலையை ஏற்படுத்திய போதிலும் கூட விஞ்ஞானத்தால் முழுமையாக மதத்தில் இருந்து மக்களை தூரமாக்க முடியவில்லை.
நாம் மேலே கதைத்த சிற்றரசுகள் ஒன்றிணைந்து அரசாக மாறும் போது சிற்றரசுகள் பின்பற்றிய மதங்களுடன் அரசு உடன்படாத பட்சத்தில் அங்கு புதிய மதம் தோற்றம் பெறுகின்றது என்ற விடயத்தை அடுத்த வாரம் இந்திய அசோக ராஜ்யம் ஐரோப்பிய ரோம இராஜ்யம் என்பவற்றின் நிழலில் நோக்குவோம்.
தொடரும்....
Post a Comment