கரையோர மாவட்ட யோசனை குறித்த பிரேரனையை நிராகரித்தது அக்கறைப்பற்று மாநகரசபை
Thursday, November 20, 20140 comments
கரையோர மாவட்டம் தொடர்பான யோசனையை முன்வைத்து அக்கரைப்பற்று மாநகர சபையின் தான் கொண்டுவந்த பிரேரனையை நிராகரிக்கப்பட்டமை ஜனநாயகத்திற்கு முரணானது எனவும் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் அச்சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி தெரிவித்தார்.
இதேவேளை அண்மையில் கல்முனைக் கரையோர மாவட்டம் தொடர்பாக பெருந் தேசியக் கட்சிகளால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் குறித்தும் அவர் தமது கண்டனத்தை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
பெருந்தேசியக் கட்சிகளின் சுய அரசியல் இலாபங்களுக்காகவே ‘கல்முனைக் கரையோர மாவட்டம்’ என்னும் முற்போக்கான தென் கிழக்குத் தமிழ்பேசும் மக்களுக்கான நிருவாகக் கட்டமைப்புக் கோரிக்கையானது தொடர்ந்தேச்சையாகப் புறந்தள்ளப்பட்டு வந்திருக்கின்றது. இதில் பெருந்தேசியக் கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் மட்டுமன்றி தமது சுயநலம் கருதி அரசியலில் ஈடுபட்டு வருகின்ற முஸ்லிம் சமூக அரசியல்வாதிகளும் இடையிடையே சம்பந்தப்பட்டு தமது வீட்டு வாசலடியில் இக்கரையோர மாவட்ட நிர்வாகம் வந்தமைய வேண்டும் என எதிர்பார்ப்பதனாலேயே இம்மக்களுக்கு எப்போதோ கிடைத்திருக்க வேண்டிய இக்கரையோர மாவட்ட நிர்வாகக் கட்டமைப்பானது இன்று வரைக்கும் பலராலும் மாறி மாறிப் பந்தாடப்பட்டு வருவது நம் எல்லோரினது கவனத்திலும் பதிவாகியுள்ள கசப்பான உண்மையாகும்.
கிழக்கு மாகாணத்தின் தென்பகுதியில் தமிழைத் தமது தாய்மொழியாகக் கொண்டுள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் அவர்களது அரச, நிருவாகக் கடமைகளைத் தமது சொந்த மொழியில் மேற்கொள்ளும் வகையில் நீண்ட காலமாகக் கோரப்பட்டு வந்ததே “கல்முனைக் கரையோர மாவட்டக் கோரிக்கையாகும். இதனை எதிர்க் கட்சியின் முக்கியஸ்தர்களும், ஆளும் கட்சியின் பிரமுகர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கென பிரத்தியேகமாக தமது சமயத்தையும், சமூக அடையாளத்தையும் முன்வைத்து நாட்டில் பிரிவினையைத் தோற்றுவிக்க முனைவதாகக் கூறுவது சுத்த அபத்தமாகும்.
புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்கென ஆலோசனைகளையும், பரிந்துரைகளையும் வழங்குவதற்காக 1978ஆம் ஆண்டு அன்றைய அரசினால் நியமிக்கப்பட்ட மொறகொட ஆணைக்குழுவானது அதன் பரிந்துரைகளில் கிழக்கு மாகாணத்திலுள்ள கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் ஆகிய தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கியதாக “கல்முனைக் கரையோர மாவட்டம்” ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென அறிக்கையிட்டிருந்தது.
மொறகொட ஆணைக்குழுவின் நேர்மையான அந்த அறிக்கையை அன்றிலிருந்து தொடர்ந்தேச்சையாக மாறி மாறி ஆட்சி செய்து வந்த அரசுகள் நிறைவேற்றுவதற்குத் தவறி வந்துள்ளன. இதனை காலங் கடந்தாயினும் இப்போதாயினும் நிறைவேற்றுங்கள் என்றுதான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த அரசாங்கத்தைக் கோரி நிற்கின்றது.
தமிழ் மொழியைப் பேசுகின்ற, அம்மொழியில் கருமமாற்றக்கூடிய ஓர் அரச அதிபரை நியமிக்குமாறு தமிழ் - முஸ்லிம் மக்களால் நீண்டகாலமாகக் கோரப்பட்டு வந்த கோரிக்கைகள் தொடர்ந்தேச்சையாக நிராகரிக்கப்பட்டே வந்திருக்கின்றன. கடந்த 43 ஆண்டுகளாக தமிழ் மொழி தெரிந்த ஓர் அரச அதிபரை அம்பாரைக் கச்சேரியில் அமர்த்தி இங்கு வாழ்கின்ற தமிழ்பேசும் மக்களின் நியாயமான தேவைகளை இலகுவாக வழங்கத் தவறிய கடின மனோபாவத்தில் அரசுகள் இருந்து வரும் வரலாற்றினை மாற்றியமைக்கவே இன்று கல்முனைக் கரையோர மாவட்டத்தினை நிறுவுவதன் மூலம் புரையோடிப்போயிருக்கின்ற இப்பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளலாம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதற்கான அரசியல் முன்னெடுப்புகளைச் செய்து வருகின்றது என்றும் அவர் தெரவித்தார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment