தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உலமா கட்சித்தலைவருடன் பேச்சு வார்த்தையை முடித்திருப்பதாகவும் தேசிய பட்டியல் மற்றும் பெருந்தொகை பணம் பெற்று எதிர்வரும் தேர்தலில் தமிழ் கூட்டமைப்பில் போட்டியிடவுள்ளதாகவும் இணையத்தளங்களில் வெளிவந்த செய்தி அப்பட்டமான பொய்யாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது;
இன்றிருக்கும் சூழ் நிலையில் சிங்கள பேரினவாதத்திலிருந்து தென் மாகாண முஸ்லிம்களை பாதுகாப்பதாயின் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஜனநாயக ரீதியாக ஒப்பந்த அரசியலூடாக கிழக்கில் ஒன்றுபட வேண்டும் என்பதில் உலமா கட்சியிடம் மாற்றுக்கருத்து இல்லை. யுத்த காலத்தில் முஸ்லிம்கள் தமிழ் ஆயுத போராளிகளால் பாதிக்கப்பட்டிருந்தாலும் இன்றைய சமாதான காலத்தில் கூட சிங்கள பேரினவாதத்தினால் பள்ளிவாசல்களை இழந்துள்ளதோடு பேருவளையில் பாரிய இன ஒழிப்புக்கும் முகம் கொடுத்தது. நாம் நம்பியோரே நமது கழுத்தை அறுத்து விட்ட நிலையில் தமிழர்களும் முஸ்லிம்களும் பழையனவற்றை மறந்து ஒற்றுமைப்பட வேண்டிய நேரம் வந்துள்ளது. அத்தகைய ஒற்றுமையை ஏற்படுத்த உலமா கட்சி முயன்று வருகிறது. அந்த வகையில் தமிழ் கூட்டமைப்பு முன் வந்தால் உலமா கட்சி அவர்களுடன் இணைந்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையாக செயற்பட தயாராகவே உள்ளது.
அதேபோல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்வது போன்ற ஒரு காலை அரசாங்கத்தில் வைத்துக் கொண்டு இன்னொரு காலை தமிழ் கூட்டமைப்புடன் வைத்துக் கொள்ளும் பச்சோந்தி ஏமாற்று அரசியல் உலமா கட்சியிடம் ஒரு போதும் இல்லை. அந்த வகையில் தமிழ், முஸ்லிம் ஒற்றுமைக்காக உலமா கட்சியும் தமிழ் கூட்டமைப்பும் இணைந்து எதிர்காலத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது என்பதில் மாவை சேனாதிராஜா எம்பியும் உலமா கட்சியின் தலைமையும் இணக்கப்பாட்டை எட்டியுள்ளது. ஆனாலும் அது சம்பந்தமான பேச்சுவார்த்தை எதுவும் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை.
இந்த நிலையில் உலமா கட்சியின் அரசியல் முன்னேற்றத்தை பொறுக்க முடியாதோர் அக்கட்சி பற்றிய பொய்களை அவிழ்த்து விடுவதை வண்மையாக கண்டிக்கிறோம் என தெரிவிப்பதுடன் இவ்வாறான பொய்யான சலசலப்புக்களுக்கு உலமா கட்சி அஞ்சாது என்பதையும் சொல்லி வைக்கிறோம் எனவும் தெரிவித்தார்.

Post a Comment