கஃபாவை அழிக்க அப்ரஹா மன்னன் பயணித்த பாதை கண்டு பிடிக்கப்பு!
Thursday, November 6, 20140 comments
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அப்ரஹா மன்னனின் யானைப்படை புனித கஃபாவை அழிப்பதற்காக பயன்படுத்திய பாதை ஒன்றை சவூதி அரேபியாவின் கிங் சவூத் பல்கலைக்கழக வரலாற்று ஆய்வாளர்களான இளைஞர் குழுவினர் கண்டு பிடித்துள்ளனர்.
இந்த யானைப்படை தொடர்பில் புனித அல்-குர்ஆன், 1௦7 ஆம் அத்தியாயத்தில், சுருக்கமாகவும் யானைபடைக்கு நேர்ந்த கதியை தெளிவாகவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இது தொடர்பில் பதினான்காம் நூற்றாண்டின் குர் ஆன் ஆய்வாளரான இப்னு கதீர் என்பவர் குறிப்பிடுகையில் அப்ரஹா அல் ஆஸ்ரம் (Abraha Al-Ashram) என்பவன் யெமன் நாட்டில் ஒரு கவர்னராக இருந்தான். அப்பொழுது அவனது தலைமையில் ஒரு யானைப் படயினைத் திரட்டி புனித கஃபாவை அழிக்கும் நோக்குடன் படையெடுத்து மக்கா நோக்கி வந்தான். அந்த நேரம் அல்லாஹ்வின் கோபப்பார்வை அவன் மீது விழுந்தில் அல்லாஹ் அவனுக்கும் அவனது படையினருக்கும் எதிராக அபாபீல் என்கிற சிறு பறவைகளைக் கொண்டு கல்மாரி பொழியச் செய்தான். யார் தலைமையில் யானைப் படைகள் வந்ததோ அவனும் 13 யானைகளுடன் கூடிய அவனது படைகளும் சின்னாபின்னப்படுத்தப்பட்டன. அதில் எல்லாக் கற்களும் அவனது படையினர் மீது விழவில்லை. இருப்பினும் அப்படையினரின் உடலில் உள்ள தசைகள் வெடித்து சிதருண்டு போய் சப்பித் துப்பிய வைக்கோல் போலாகினர். இதனைக் கண்ணுற்ற அப்ரஹா மக்காவை விட்டு எமனுக்கு தப்பியோடும் வழியில் தனது தசைகளும் வெடித்து சிதறியதில் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆய்வை மேற்கொள்ள மலைகளினூடாகவும், கரடு முரடான கற்பாறைகளினூடாகவும் மிகவும் களைப்புடன் தொடர்ந்த இந்த இளம் ஆய்வுக் குழுவினரின் அதீத ஆய்வின் போது இதற்கு ஆதாரமாக இருந்த பல இடங்களையும், அடையாளங்களையும் நஜிரானின் வட பகுதியிலும்,(north of Najran,) ஆசிர் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியிலும்(east of Asir) மற்றும் பாஹா பகுதியின் கிழக்கு எல்லையிலும்(east of Baha) எடுக்கப்பட்ட பெறுமதிமிக்க புகைப்படங்கள் மூலம் பதிவு செய்துள்ளனர்.
மேலும் அவர்களின் ஆய்வுக்கு வலு சேர்க்கும் வகையில் தத்லித் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் (southeast of Tathlith) உள்ள அல்கஹ்ர் மலையில் (Al-Qahr Mountain) பல முக்கியமான வரலாற்றுப் பதிவுகளாக யானைகளின் உருவம் செதுக்கப் பட்ட கல்வெட்டுக்களையும், அசீரின் கிழக்குக்ப் பகுதியில்(east of Asir) ஹபாயிரில்(Hafaer) உள்ள பழமை வாய்ந்த கிணறு ஒன்றையும் மற்றும் பாஹா பிரதேசத்தின்(Baha region) அகீக்கின் நகராட்சிக்குட்பட்ட கரா பகுதியில்(Kara in Aqeeq) நடை பாதை ஒன்றையும் கண்டு பிடித்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட King Saud பல்கலைக்கழக புவிச் சரிதவியல் பிரிவின் தலைமை அதிகாரியான Mohammed Al-Amry, அவர்கள், அப்ரஹாவும் அவனது யானைப்படைகளும் பயணித்த நடை பாதையை Tathlith மற்றும் Baha பகுதிகளில் தான் கண்டுள்ளதாகவும், இந்தப் படையணி அராபிய ஆட்சிப் பகுதிக்குள் நுழைந்ததற்கு ஆதாரமாக மலைக் குன்றுகளில் Humairiya மொழியில் செதுக்கப்பட்டுள்ள எழுத்துக்களையும் காணக் கூடியதாகவுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தப் படையெடுப்பு தொடர்பில் இஸ்லாமிய வரலாறுகளை எடுத்து நோக்கினால் அப்ரஹா ஒரு கிறிஸ்தவனாக இருந்து கஅபாவின் வடிவத்தை ஒத்த கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றை யேமணில் உள்ள சன்ஆ பகுதியில் அமைப்பதன் மூலம் கஅபாவில் புனித கடமைகளை நிறைவேற்றும் அரபியர்களை அந்த தேவாலயத்தில் புனித கடமைகளை நிறைவேற்றச் செய்ய நினைத்தான். இதன் மூலம் இந்த புனித யாத்திரை காலங்களில் மக்காவுக்கு வியாபாரங்கள் மற்றும் ஏனைய வழிகளில் கிடைக்கும் வருமானங்களை தனது பகுதிக்கு திருப்ப முற்பட்டான். தனது ஆலோசனையை எத்தியோப்பிய நாட்டின் மன்னரிடம் தெரிவித்து அவரது முன் அனுமதியையும் பெற்றுக் கொண்டான்.
அதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட ஆலயம் கட்டி முடிக்கப் பட்ட நிலையில் அரபியர்கள் அங்கு சென்று தங்கள் புனித கடமைகளை முடிக்க மறுப்புத் தெரிவித்தனர். அரபியர்களின் இந்த செயலானது அவனை சீற்றம் கொள்ளச் செய்ததுடன் கஅபாவை அழிக்கும் பொருட்டு ஒரு படையையும் திரட்ட வேண்டிய இழிநிலைக்குத் தள்ளியது.
இதன் பொருட்டு அவன் தலைமையில் திரட்டப்பட்ட படை மாக்கா நோக்கி வரும்பொழுது அதற்குப் பல திசைகளிலும் அரேபியப் படைகளின் பலத்த எதிர்ப்பு இருந்தாலும், அவனது யானைப் படையின் முன் அராபியர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.அவன் பறவைக் கூட்டங்களின் கல்மாரி கொண்டு அழிக்கப்பட்டு வரை அனைத்து அராபிய வீரர்களையும் கொன்றொழித்துக் கொண்டே இருந்தான். என்று இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
நன்றி : அரப் நியுஸ்
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment