வாழைச்சேனை - அந்நூர் தேசிய பாடசாலை மாணவர்களால் திங்கட்கிழமை ஏற்பாடு செய்த ஆர்பாட்டத்தின் போது, ஏற்பட்ட மோதலில் மாணவரொருவர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மாணவர்கள் பாடசாலை பிரதான கதவை மூடி பாடசாலை முன்பாக பாரிய ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.
பாடசாலையில் கணித, விஞ்ஞான ஆய்வு கூடமும், கட்டடமும் பறிமுதல் செய்யப்பட்டு அருகாமையில் உள்ள ஆயிஷா பெண்கள் பாடசாலைக்கு மாற்றப்படவுள்ளமையால், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த போராட்டம் நடத்தப்பட்டதாக தெரிகிறது.
மேலும் அயல் ஊர்களான ஓட்டமாவடி, மீராவோடையில் உள்ள பாடசாலைகளில் விஞ்ஞான, கணித துறைகளை வளர்ப்பதற்கான முயற்சிகளும், நடைமுறைகளும் மிகக் கூடுதலாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், ஆரம்பத்தில் ஒன்றாக இருந்த பாடசாலையானது ஆண்கள், பெண்கள் என திட்டமிட்டு பிரிக்கப்பட்ட பிற்பாடே பின்னடைவை சந்தித்து வருவதாகவும் உணர்ச்சிகரமான சுட்டிக் காட்டிய மாணவர்கள் இது சம்பந்தமான துண்டுப் பிரசுரம் ஒன்றிணையும் வெளியிட்டனர்.
மாணவர்களின் ஆர்பாட்டம் காரணமாக உடனடியாக பாடசாலைக்கு முன்னாள் உள்ள வீதிக்கு விரைந்து வந்த வாழைச்சேனை பொலிஸ் அதிகாரிகள் பாடசாலை அதிபர் பிர்தௌலுடனும், ஆசிரியர்களுடனும், பொதுமக்களுடனும் இதுசம்பந்தமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
ஆனாலும் வலய கல்விப் பணிப்பாளர் உடனடியாக இதற்குரிய தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து பொது மக்களுக்கும், மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் மாணவர்கள் பலர் காயமுற்றனர்.
இதில் உயர்தர மாணவன் ஒருவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெற்றோர்களே உங்கள் சிந்தனைக்கு என தலைப்பிடப்பட்ட துண்டுப் பிரசுரம் மாணவர்களால் இதன்போது வெளியிடப்பட்டது.




Post a Comment