ஏ.ஆர்.ஏ. பரீல்
நீங்கள் மாறு செய்வீர்களேயானால் உங்களை அல்லாத வேறு சமூகத்தவரை உங்களுக்குப் பகரமாக ஆக்குவேன். இது அல் குர்ஆனின் வாசகங்கள். அல்குர் ஆனில் அல்லாஹ் இவ்வாறு தான் கூறியிருக்கிறான்.
அல்குர்ஆனின் ஆழமான போதனைகள் இன்று உண்மையாகி விட்டன. எமது தலைவர்களுக்கிடையிலான முரண்பாடுகளினாலும் போட்டிகளினாலும் ஹஜ் விவகாரம் முஸ்லிமல்லாதவர்களின் கைகளுக்குள் சங்கமமாகி விட்டன.
அல்குர்ஆனின் ஆழமான போதனைகளை மதியாத சமூக தலைவர்களைப் புறந்தள்ளி அல்லாஹ் அவர்கள் மூலம் எமக்கு நீதியைப் பெற்றுத் தர தீர்மானித்து விட்டான் போலும்.
பல தடவைகள் நீதிமன்றப்படிகளேறி அவதியுற்ற ஹஜ் விவகாரம் கண்ணீர் சிந்துகிறது. அது ஆழ்ந்த துயரத்தின் ஊற்றாகும்.
கடந்த திங்கட்கிழமை இவ்வருட ஹஜ் விவகார பூதாகரத்திற்கு நீதிமன்றம் தீர்ப்பொன்றினை வழங்கி அத்தீர்ப்பினை அமுல் நடாத்துவதற்கு புத்தசாசனம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் எம்.கே.பி. திஸாநாயக்கவிற்கு அதிகாரத்தினை வழங்கியுள்ளது. இவ்வருட ஹஜ் கோட்டாவை முகவர்களுக்கிடையில் திசாநாயக்கவே பகிர்ந்து பட்டியலைத் தயாரித்திருந்தார்.
குறிப்பிட்ட பட்டியலுக்கு அங்கீகாரம் அளித்த உயர்நீதிமன்றம் அதனை சவூதி ஹஜ் விவகார அமைச்சருக்கு தாமதியாமல் அனுப்பி வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தது.
ஹஜ் முகவர்களுக்கென நடாத்தப்பட்ட நேர்முகப்பரீட்சையில் அவர்கள் பெற்றுக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் கோட்டாவை பகிருமாறு உயர் நீதிமன்றம் கடந்த வாரம் அமைச்சின் செயலாளர் திசாநாயக்கவைப் பணித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். தயாரிக்கப்பட்ட புதிய பட்டியலின்படி ஹஜ் முகவரொருவருக்கு அவர்கள் பெற்றுக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் ஆகக் கூடிய கோட்டாவாக 51 உம் ஆகக் குறைந்த கோட்டாவாக 10 உம் வழங்கப்பட்டுள்ளன.
ஹஜ் குழுவினால் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட கோட்டா பகிர்வு பட்டியலில் ஹஜ் குழுவின் இணைத் தலைவர் ஏ.எச்.எம். பௌஸியினால் ஏற்கனவே சவூதி ஹஜ் அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவின்படி திசாநாயக்க தயாரித்த பட்டியலுக்கே சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்றில் ஹஜ் விவகாரம்
செரண்டிப் ஹஜ் உம்ரா முகவர்களின் சங்கம் இந்த வழக்கினை தாக்கல் செய்திருந்தது. இச்சங்கத்தைச் சேர்ந்த10 முகவர் நிலையங்கள் மனுவில் கையொப்பமிட்டிருந்தன.
பிரதிவாதிகளாக ஹஜ் குழுவின் இணைத்தலைவர்களான சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம்.ஏ. காதர் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல் புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சரும் பிரதமருமான டி.எம். ஜயரத்ன அமைச்சின் செயலாளர் எம்.கே.பி. திசாநாயக்க ஹஜ் குழு உறுப்பினர் டாக்டர் என்.எம்.எம். இக்பால் மின்சக்தி வலு அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.ஐ.எம்.றபீக் புனர்வாழ்வு அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எச்.எம். நய்முதீன் உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் என்.எம்.எம். நிப்லி அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் உதவிச் செயலாளர் மௌலவி எம்.எஸ்.எம். தாஸிம் ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர்நீதிமன்றம் ஹஜ் முகவர்களிடையே பகிரப்பட்ட கோட்டா பட்டியலை உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்தது. நேர்முகப்பரீட்சையின் போது முகவர்கள் பெற்றுக் கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் கோட்டா மீள பகிரப்பட வேண்டுமெனவும் உத்தரவிட்டது.
முஸ்லிம் அல்லாதவர்களின் கைகளில் ஹஜ் விவகாரம்
தனது வாழ்நாள் முழுவதும் சிறுகச் சிறுக ஹஜ்ஜுக்காக சேமித்தவர்கள் ஹஜ் நிறைவேறாத நிலையில் முதுமையடைந்து நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஹஜ் விவகாரம் தற்போது முஸ்லிம் அல்லாதவர்களினாலேயே கையாளப்படும் நிலைக்கு உள்ளாகியுள்ளமை வருந்தத்தக்கதாகும். பிரதம நீதியரசரின் தலைமையிலான நீதியரசர்கள் குழுவே ஹஜ்ஜுக்கு தீர்ப்பு வழங்கியுள்ளது. ஹஜ் கோட்டா எவ்வாறு பகிரப்பட வேண்டுமென பிரதம நீதியரசரினால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
ஹஜ் கோட்டாவை ஹஜ் முகவர்களுக்கிடையில் அவர்கள் பெற்றுக்கொண்டுள்ள புள்ளிகளின் அடிப்படையில் மீள பகிருமாறு உயர்நீதிமன்றம் புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் எம்.கே.பி. திசாநாயக்காவை பணித்திருக்கிறது. எமது ஹஜ் குழுவின் பொறுப்பிலிருந்த இந்தப் பணி தற்போது நீதிமன்றம் மூலம் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அதிகாரியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எனவே எமது ஹஜ் இணைத்தலைவர்கள் தற்போது செயலிழந்து அதிகாரம் பறிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார்கள்.
ஹஜ் குழுவை நியமிப்பவரும் எம்மைச் சேராத ஒருவரே என்பது யாவரும் அறிந்ததே. புத்தசாசனம் மற்றும் மத அலுவல்களுக்குப் பொறுப்பான அமைச்சரினாலேயே இந்த நியமனம் வழங்கப்படுகிறது. எனவே தற்போது ஹஜ் விவகாரம் மாற்று இனத்தவர்களின் கைகளுக்கே முற்றும் முழுதுமாக மாற்றம் பெற்றிருக்கிறது.
ஹஜ் குழுவினால் தயாரிக்கப்பட்ட கோட்டா பகிர்வு பட்டியல்
2240 ஹஜ் கோட்டாவும் 91 முகவர் நிலையங்களுக்கிடையில் பகிரப்பட்டிருந்தன. ஒரு முகவர் நிலையத்துக்கு ஆகக் கூடிய கோட்டாவாக 85 உம் ஆகக் குறைந்த கோட்டாவாக 5உம் வழங்கப்பட்டிருந்தன. முஸ்லிம் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட முகவர்களுக்கான நேர்முகப் பரீட்சையில் 50 க்கும் மேற்பட்ட புள்ளிகளைப் பெற்றுக் கொண்டவர்களுக்கே கோட்டா வழங்கப்பட்டது. 50 க்கும் குறைவான புள்ளிகளைப் பெற்ற முகவர்களுக்கு கோட்டா வழங்கப்படவில்லை.
நேர்முகப் பரீட்சைக்கு 115 ஹஜ் முகவர்கள் அழைக்கப்பட்டிருந்தும் 113 முகவர்களே சமூமளித்திருந்தனர். இரு முகவர்கள் நேர்முகப் பரீட்சைக்கு சமூகமளிக்கவில்லை. நேர்முகப் பரீட்சையில் முகவர்கள் பெற்றுக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் கோட்டா பகிரப்படவில்லை என்பது கோட்டா பட்டியலை பரிசீலித்த போது உறுதியானது. தலா 79 புள்ளிகள் பெற்றுள்ள மூன்று முகவர் நிலையங்களுக்கு சமமாக கோட்டா பகிரப்படவில்லை. 55, 30, 30 என்றே பகிரப்பட்டுள்ளன.
மேலும் தலா 77 புள்ளிகள் பெற்றிருந்த மூன்று முகவர் நிலையங்களுக்கு கோட்டா 25,40,50 என வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். மற்றும் தலா 59 புள்ளிகள் பெற்றுக்கொண்ட மூன்று முகவர் நிலையங்களுக்கு 10, 25, 15 என பகிரப்பட்டுள்ளது. இவ்வாறு கோட்டா முறைகேடாக சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் பகிரப்பட்டுள்ளதாக செரண்டிப் ஹஜ் உம்ரா முகவர் சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.எச். முஹம்மத் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை காரியாலய வசதிகள் எதுவுமற்ற புடவைக் கடையொன்றில் இயங்கி வரும் ஒரு முகவர் நிலையத்துக்கு நேர்முகப் பரீட்சையின் போது 79 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த ஹஜ் முகவர் நிலையம் உல்லாச பயண சபை மற்றும் IATA அனுமதிப் பத்திரங்களைக் கூட பெற்றிருக்கவில்லை. இந்நிலையில் இம்முகவர் நிலையத்துக்கு நேர்முகப் பரீட்சையில் 79 புள்ளிகள் வழங்கப்பட்டு 30 கோட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளமையை எவ்வாறு நியாயப்படுத்தலாம் என செரண்டிப் ஹஜ் உம்ரா முகவர் நிலையத்தின் தலைவர் முஹம்மத் கேள்வி எழுப்பியுள்ளார்.
முறையற்ற நேர்முகப் பரீட்சை
நேர்முகப்பரீட்சை நடத்திய குழு உறுப்பினர்களாக முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளரின் நண்பர்கள் நால்வர் நியமிக்கப்பட்டிருந்ததாகவும் பணிப்பாளருக்கு எதிராக செரண்டிப் முகவர்கள் சங்கம் கை நீட்டியுள்ளது.
புள்ளிகள் குறைவாக பெற்றுக்கொண்ட சில அரசியல்வாதிகளின் நண்பர்களான ஹஜ் முகவர்கள் அரசியல்வாதிகள் மூலம் இணைத்தலைவரைத் தொடர்பு கொண்டு கோட்டாவை அதிகரித்துக் கொண்டுள்ளார்கள் எனவும் பகிரங்கமாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எக்சன்ட் முகவர் நிலையம்
இவர் கடந்த 7 வருடங்களாக உம்ரா சேவையை நடத்தி வருபவர். இவருக்கு திணைக்களம் 2011 ஆம் ஆண்டு ஹஜ் முகவர் அனுமதிப்பத்திரம் வழங்கியது. 2013 ஆம் ஆண்டு இவருக்கு 5 ஹஜ் கோட்டாவும் வழங்கப்பட்டது. ஆனால் இவ்வருடம் இவருக்கு கோட்டா வழங்கப்படவில்லை. நேர்முகப்பரீட்சையின் போது ஹஜ் ஏற்பாடுகளில் அனுபவம் என்பதற்கான புள்ளிகள் ஒன்று கூட வழங்கப்படவில்லை 0 என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் நேர்முகப்பரீட்சையில் பெற்றுக்கொண்ட மொத்தப்புள்ளிகள் 45 ஆகும்.
இது தொடர்பாக ரியாஸ் அஹமட் புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சர் மற்றும் ஹஜ் குழு இணைத்தலைவர் எ.எச்.எம்.பௌசி முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல் ஆகியோருக்கு முறைப்பாடுகளை எழுத்து மூலம் அனுப்பியும் இதுவரை எதுவித பதிலும் அனுப்பப்படவில்லை.
மில்லியன் கணக்கில் செலவிடும் முகவர் நிலையங்கள் உயர் நீதிமன்றில் வழக்கு
தாக்கல் செய்துள்ள செரண்டிப் ஹஜ் உம்ரா முகவர்கள் சங்கம் 70 முகவர் நிலையங்களின் சார்பில் நீதியை நிலைநாட்ட களமிறங்கியது. இவர்களில் சுமார் 50 முகவர்கள் நீதிமன்றுக்கு சமூகமளித்திருந்தனர். இவர்கள் சுமார் 4 மில்லியன் ரூபாய்களை சட்டத்தரணிகளுக்கும் வழக்கு தொடர்பான நடவடிக்கைகளுக்கும் செலவிட்டுள்ளனர்.
இதேவேளை 20 முகவர்களை உள்ளடக்கிய இலங்கை ஹஜ் உம்ரா முகவர்கள் சங்கமும் உயர்நீதிமன்றில் வழக்கொன்றினை தாக்கல் செய்திருந்தது. ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஹஜ் கோட்டா பகிர்வு பட்டியலை நீதிமன்றம் அங்கீகரிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தது.
இம்முகவர் சங்கத்தின் அங்கத்தவர்களுக்கு ஆகக்கூடிய கோட்டா (85 முதல் 50 வரை) வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தமக்கு வழங்கப்பட்ட கோட்டாக்களுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு விட்டதாகவும் அவற்றுக்கான காப்புறுதியையும் செலுத்தி விட்டதாகவும் இக்குழுவினர் தெரிவித்தனர்.
இம்முகவர் நிலையங்களுக்கு வழங்கப்பட்ட கோட்டாக்கள் 85 லிருந்து 30 வரையிலான எண்ணிக்கையை புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் 35 – 18 க்குமிடையில் குறைக்கப்பட்டமை.
ஹஜ்குழு இணைத்தலைவர் பிரதியமைச்சர் காதர்
நான் ஹஜ் குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவராக இருந்தும் கோட்டா பகிர்ந்தளிப்பது தொடர்பான கலந்துரையாடல்களுக்கு என்னை எவரும் அழைக்கவில்லை. இணைத்தலைவர்களில் ஒருவன் என்ற வகையில் என்னையும் உள்ளடக்கியே தீர்மானங்கள் எடுத்திருக்க வேண்டும். இது என்னை பழிவாங்கிய நடவடிக்கையாகும்.
இம்முறை கோட்டா உரிய முறையில் பகிரப்படாமையே நீதிமன்றம் வரை செல்ல வேண்டியதாக அமைந்தது. கோட்டா அதிகமாக பெற்றுவரும் முகவர்களுக்கே அதிகமாக வழங்கப்பட வேண்டுமென்பது நியதியல்ல. கோட்டாக்கள் அனைவருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும்.
ஹஜ் ஏற்பாடுகளில் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை தலையிட்டிருக்க வேண்டும். இது முஸ்லிம்களின் புனித கடமையும் இறுதிக் கடமையுமாகும். பள்ளிவாசல் கடமைகளைக் கவனிப்பது மாத்திரம் உலமா சபையின் கடமையாக இருக்கக்கூடாது. சமூகத்தின் சமய விடயங்களில் எங்கெல்லாம் அநீதிகள் விளைவிக்கப்படுகின்றதோ அவற்றுக்கெல்லாம் உலமா சபை குரல் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். பிரதியமைச்சர் காதரின் வேண்டுகோள் வரவேற்கத்தக்கதாகும்.
செரண்டிப் முகவர்கள் சங்கத் தலைவர் முஹம்மத்
கோட்டாக்களை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக நாங்கள் போராடவில்லை. காலா காலமாக ஹஜ் விவகாரங்களில் இடம்பெறும் அநீதிகள் களையப்பட வேண்டும் என்பதற்காகவே போராடினோம். இது எமது நேர்மைக்கு கிடைத்த வெற்றியாகும் என்று உயர்நீதிமன்ற வளாகத்துக்கு வெளியேயிருந்து கருத்து வெளியிட்டார்.
எதிர்கால ஹஜ் ஏற்பாடுகள்
ஹஜ் ஏற்பாடுகளை அரசாங்கமே கையேற்க வேண்டும் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் கையேற்பதன் மூலம் ஹஜ் விவகாரத்தை ஊழலின்றி தொடர முடியுமா என்பது சந்தேகத்துக்குரியது.
ஹஜ் முகவர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஒரு சிலர் ஹஜ் கோட்டா பெற்றுக்கொள்வதில் தமது மேலாதிக்கத்தை செலுத்தி வந்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். இவர்கள் தாம் சொகுசு வசதிகள் வழங்குதாக கூறி இலட்சக்கணக்கான ரூபாய்களை ஹஜ் கட்டணமாக அறவிட்டு வயிறு வளர்த்து வருகின்றார்கள். குறிப்பிட்ட இவ்வாறான ஹஜ் முகவர்கள் இதனை ஒரு புனித பணியாக கருத வேண்டும். கொள்ளை இலாபம் ஈட்டும் வர்த்தகமாக நோக்கக்கூடாது. இவ்வாறான நோக்கம் இருக்கும் வரை அல்லாஹ் அந்நியர்களின் கரங்களினாலேயே ஹஜ் விவகாரத்தை விட்டு வைப்பான் என்பது நான் சொல்லி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியதில்லை.
கொள்ளையடிக்கும் ஹஜ் முகவர்களும் நீதமாக நடந்து கொள்ளாதவர்களுக்கும் இம்மையில் மாத்திரமல்ல மறுமையிலும் அல்லாஹ் தண்டனை வழங்குவான்.

Post a Comment