ஆசியாவின் சிறந்த தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்ததாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் திங்கட்கிழமை (11) தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ்.ஊடகவியலாளர்களுக்கான ஊடகச் செயலமர்வொன்று யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (11) காலை முதல் இடம்பெற்று வருகின்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 'ஆசியாவின் சிறந்த தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்று பான் கீ மூன் கூறும் போது நானும் அருகில் இருந்தேன். அவ்வாறு அவர் கூறியதை என்னால் மறக்க முடியாது. அதற்கிணங்க ஜனாதிபதி நல்ல நோக்கோடு செயற்பட்டு வருகின்றார். அனைத்து இனங்களையும் ஒன்றிணைத்து நாட்டை அபிவிருத்தி மேற்கொண்டு வருகின்றார்' என கூறினார்.
'ஊடகவியலாளர்கள் உலக ஆக்கத்திற்குரியதும், அழிப்பதற்குரியதுமான ஆயுதத்தை கையில் கொண்டு செல்கின்றனர். ஆனால் அவர்கள் உலக ஆக்கத்திற்காக மட்டும் செயற்பட வேண்டும். அதற்காகவே தங்கள் பேனாக்களைப் பயன்படுத்த வேண்டும்.
மஹிந்த சிந்தனையின் அடிப்படையிலேயே இந்தச் செயலமர்வு இடம்பெற்று வருகின்றது. ஜனாதிபதியினாலேயே இன்று ஊடகவியலாளர்கள் எங்கும் செல்லக்கூடிய, எதிலும் பங்குபற்றக்கூடிய நிலைமையைக் கொண்டிருக்கின்றனர்.
தொலைபேசியினால் இன்று பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஒரு தகவல் பரப்பப்பட்டு அது உடனடியாக அனைவருக்கும் செல்கின்றது. சிலவேளைகளில் அவற்றினால் பாரிய விளைவுகள் ஏற்படுகின்றன. ஆகையால், ஊடகவியலாளர்கள் தங்கள் தொலைபேசிகளை நல்ல செயற்பாட்டிற்குப் பயன்படுத்த வேண்டும்' என்றும் அஸ்வர் எம்.பி மேலும் கூறினார்.

Post a Comment