பதுளையில் இளைஞன் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் இதுவரை நடவடிக்கை எடுக்காமலிருப்பது கவலையளிக்கிறது.
எதிர்வரும் 18ஆம் திகதிக்கு முன்பு இது தொடர்பில் பொலிஸார் தகுந்த நடவடிக்கை எடுக்காவிடின் இதனை நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வர ஐ.தே.க. நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஐ.தே.க. வின் தலைவருமான கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
பதுளை வை.எம்.எம்.ஏ. மண்டபத்தில் மாவட்ட முஸ்லிம் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்
இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கும் சம உரிமையுள்ளது. ஆரம்பம் தொட்டே எமது முஸ்லிம் தலைவர்கள் இந்த நாட்டுக்காக குரல் கொடுத்துள்ளனர்.
ஆனால் இன்று கடும்போக்குவாதிகள் இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எவ்வித உரிமையுமில்லையெனக் கூறுவது நியாயமற்றது. இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கும் சம உரிமை உண்டு.
அண்மைக்கால தேர்தல் முறைமைகளைப் பார்க்கும் போது அரசாங்கம் பாரிய பின்னடைவுகளை எதிர்நோக்கியுள்ளது.
நாட்டில் ஐம்பத்து ஐந்து பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பித்தோம். ஆனால் அரசாங்கம் அவ்வாறு எவ்வித தாக்குதலும் இடம்பெறவில்லையென நாடாளுமன்றில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
அரசாங்கத்தின் அனுசரணையின்றி கடும் போக்குவாதிகள் அதிகாரத்தை கையில் எடுத்து செயற்பட முடியாது.
பதுளையில் இடம்பெற்றுள்ள சம்பவம் தொடர்பில் பூரண அறிக்கை எமக்கு கிடைக்கும் பட்சத்தில் நாம் அதை நாடாளுமன்றில் சமர்பிப்போம் என்றார்.

Post a Comment