கல்முனை மாநகர சபை பிரிவுக்குட்பட்ட தமிழ்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கல்முனை மாநகர சபை மண்டபத்தில் தற்பொழுது உயர்மட்டப் பேச்சு நடைபெற்று வருகின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது.
கல்முனை பிராந்தியத்தில் வளர்ந்து வரும் தமிழ், முஸ்லிம் மக்களின் நல்லுறவுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் பிரச்சினைகள் தொடர்பாக இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது. குறிப்பாக, கல்முனை வடக்கு பிரதேச செயலகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் இக்கூட்டத்தில் முதன்மை விடயங்களாக ஆராயப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது.
இக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் சார்பில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கல்முனை மாநகர சபை மேயர் எம்.நிசாம் கரியப்பர், முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹஸன் அலி, மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் ஆகியோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அதன் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மட்டக்களப்பு தமிழ்க் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பொன்.செல்வராஜா, பா.அரியநேத்திரன், எம்.யோகேஸ்வரன், ரெலோ அமைப்பின் செயலாளர் ஹென்ரி மகேந்திரன், கிழக்கு மாகாண சபை தமிழ்க்கூட்மைப்பு உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர். இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர் எனத் தெரியவருகின்றது.

Post a Comment