தம்புள்ளை பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றி தம்புள்ளை நகர பிரதேசத்தில் அமைத்துக் கொள்வதற்கு எனது எதிர்ப்புகள் இல்லை. புதிதாக அமைக்கப்படும் பள்ளிவாசலுக்கான முதல் நன்கொடையை நானே வழங்க தீர்மானித்துள்ளேன். இது குறித்து நான் பெருமைப்படுகிறேன் என தம்புள்ளை ரங்கிரி ரஜமகா விகாரையின் விகாராதிபதி இனாமலுவே சுமங்கல தேரர் தெரிவித்தார்.
தொலைபேசி மூலம் வழங்கிய விஷேட நேர்காணலின் போதே அவர் மேற் கண்டவாறு கூறினார்.
அவருடனான முழுமையான
நேர்காணலை இங்கு தருகிறோம்.
நேர்காணல்: ஏ.ஆர்.ஏ.பரீல்
கேள்வி: தம்புள்ளை பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றுவதிலேயே நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்களே?
இனாமலுவே தேரர்: அதனை பள்ளிவாசல் என்று கூறாதீர்கள். பள்ளிவாசல் ஒன்றுக்கான அடையாளங்களே அங்கு இல்லை. அமனா தகரத்திலான ஒரு கொட்டகை என்றே நான் கூறுவேன்.அது தற்காலிக கூடாரம். தகடுகளினால் கொட்டகையொன்று அமைத்துக் கொண்டு அதற்கு ஜும்ஆ பள்ளிவாசல் என்று பெயரிட்டுக் கொள்வதென்றால் அது இஸ்லாம் மதத்துக்குச் செய்யும் நிந்தனையாகும்.
இதேபோன்றுதான் தம்புள்ளையில் கோவில் ஒன்று இருக்காத இடத்தில் தகரத்தினால் கொட்டகை ஒன்று அமைத்து இந்து கோவில் என்று பெயர் வைத்து சிலையொன்றினையும் வைத்துக் கொண்டார்கள். இதற்கு கோவில் என்று ஊடகங்கள் பிரசாரம் செய்தன. பௌத்த புனித பூமியில் வேறுமத ஸ்தலங்கள் இருப்பதை அனுமதிக்க முடியாது. இதனாலே கோவில் அங்கிருந்து அகற்றப்பட்டது.
கேள்வி: இல்லை. அது முஸ்லிம்களின் பழமை வாய்ந்த பள்ளிவாசல். முஸ்லிம்களைப் பொறுத்தவரை தகரத்தில் அமைந்தாலும் தங்கத்தில் அமைந்தாலும் அது பள்ளிவாசல்தான். நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இனாமலுவே தேரர் : இல்லை. அது பள்ளிவாசலே இல்லை. நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். கோழிப் பண்ணைகளைப் பார்த்திருப்பீர்கள். ஒரு கோழிப் பண்ணையிலுள்ள கோழிகளை அகற்றிவிட்டு அதற்கு பள்ளிவாசல் என்று கூறுவதைப் போன்றுள்ளது உங்கள் கூற்று. தம்புள்ளையில் பள்ளிவாசல் என்று சொல்வது இஸ்லாம் மதத்தை அவமதிப்பதாகும்.
கேள்வி: தம்புள்ளை பள்ளிவாசல் சட்ட பூர்வமானது. முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இனாமலுவே தேரர்: ஏற்றுக் கொள்ளமாட்டேன். பிரதேச செயலாளர் காரியாலயம், நகர சபை, புத்தசாசன மற்றும் சமய விவகாரங்களுக்கான அமைச்சு என்பன பள்ளிவாசல் கட்டிடம் சட்டவிரோதமானது என ஏற்றுக் கொண்டுள்ளன.
கேள்வி: பள்ளிவாசல் இல்லை என்று கூறும் நீங்கள் அங்கு முஸ்லிம்களின் சமய கடமைகள் நடைபெறுகிறது என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?
இனாமலுவே தேரர்: ஆம். ஏற்றுக் கொள்கிறேன். சமய கடமைகள் நடைபெறுகின்றன. ஆனால் தம்புள்ளை ரஜமகா விகாரைக்கு 'பௌத்த தேவாலகம்' சட்டத்தின் கீழ் காணி வழங்கப்பட்டுள்ளது. இது பௌத்தர்களின் புனித பிரதேசமாகும். அந்தக் காணியிலே நீங்கள் பள்ளிவாசலொன்று கூறும் தகர கொட்டகை அமைந்துள்ளது. இந்தக் காணியில் வேறு மத நிலையங்கள் இருக்கக் கூடாது.
கேள்வி: பள்ளிவாசலுக்கு தொடர்ந்து சவால்களை விடுத்துவருகிறீர்கள். முஸ்லிம்கள் பீதியில், கவலையில் உள்ளார்கள். பிரச்சினை களை சுமுகமாக தீர்த்துக் கொள்ள முடியுமல்லவா?
இனாமலுவே தேரர்: ஆம். சரியாகச் சொன்னீர்கள். தம்புள்ளை விவகாரம் ஒரு சமய பிரச்சினை . இரு தரப்பு மதத்தலைவர்களும் ஒன்று கூடி இந்தப் பிரச்சினையை சுமுகமாக தீர்த்திருக்கலாம். கலந்துரையாடியிருக்கலாம். சமயங்கள் எந்த சமயமென்றாலும் வன்முறைகளைப் போதிக்கவில்லை. பௌத்த மதம் கருணையை வலியுறுத்தும் மதம். ஆனால் இங்கு அந்த மதத்தலைவர்களின் ஒன்று கூடலுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இது அரசியல்மயமாக்கப்பட்டுவிட்டது.
தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினையில் மூன்றாம் தரப்புக்கள் தலையிட்டுள்ளன. அரசியல் மற்றும் வேறு இயக்கங்கள் சம்பந்தப்பட்டுள்ளன. விருப்பு வாக்குகளை அதிகரித்துக் கொள்வதே அரசியல் வாதிகளின் இலக்காக இருக்கிறதே தவிர உண்மையில் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு பெற்றுக் கொள்வதல்ல. இதனாலேயே பிரச்சினைகள் தீர்வில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. மூன்றாம் தரப்புக்கள் இதனை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.
கேள்வி: பள்ளிவாசல் சட்டவிரோதமானதென நீங்கள் தானே கூறி வருகிறீர்கள்? முஸ்லிம் சமுதாயம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறதே?
இனாமலுவே தேரர்: இல்லை. நீங்கள் அப்படிச் சொல்ல வேண்டாம். மிக அண்மையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கலீல் மௌலவி என்றொருவர் என்னை வந்து சந்தித்தார். அவர் அகில இலங்கை இஸ்லாமிய ஆலோசகர். அவரிடம் நான் என்னிடமிருந்த காணி உறுதிகள், வரை படங்களைக் காட்டினேன்.
இந்தப் பள்ளிவாசல் சட்டவிரோதமானது என்பதை அவரும் ஏற்றுக் கொண்டார். இந்த இடத்தில் பள்ளிவாசல் இருப்பதற்கு நான் இடமளித்தால் தம்புள்ளை விகாரை வரலாற்றில் நான் பெரும் குற்றமிழைத்தவனாக கருதப்படுவேன்.
கேள்வி: பெரஹரா மாவத்தை என்று பள்ளிவாசலை ஊடறுக்கும் வகையில் புதிய பாதையொன்றை அமைத்து வருகிறீர்களே? இதனால் தானே இத்தனை பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன?
இனாமலுவே தேரர்: ஆம். பாதையொன்று அமைக்க ஆரம்பித்து பள்ளிவாசல் அதற்கு தடையாக இருப்பதால் அவ்விடத்தில் நிறுத்தி வைத்திருக்கிறேன். பள்ளிவாசல் தடை நீக்கப்பட வேண்டும்.பாதை அபிவிருத்திக்காக பள்ளிவாசலை உடனடியாக அகற்றித் தர வேண்டும். அபிவிருத்திப் பணிகளுக்கு பள்ளிவாசல் தடையாக இருப்பதை நல்லதாக நான் கருதவில்லை.
கடந்த வருடம் இந்த அபிவிருத்திப் பணிகளுக்காக 150 மில்லியன் ரூபாவை அரசு ஒதுக்கியது. பள்ளிவாசல் தடையாக இருந்தால் அந்தப் பணம் திறைசேரிக்கு திருப்பி அனுப்பப்பட்டது. இந்த வருடமும் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் அபிவிருத்திக்குப் பயன்படுத்தப்பட வேண்டும். இதனாலேயே பாதை அபிவிருத்தியை மேற்கொண்டுள்ளேன்.
கேள்வி: வீதி அமைப்பது வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபைகளின் வேலை அல்லவா? அதனை நீங்கள் ஏன் முன்னெடுக்க வேண்டும்?
இனாமலுவே தேரர்: வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வரைபடத்துக்கிணங்கவே பணிகனை முன்னெடுத்து வருகிறேன். தம்புள்ளை அஸ்கிரி ரஜமகா விகாரையின் அதிபதி என்ற வகையில் புனித பூமியில் அபிவிருத்திப் பணிகளை என்னால் முன்னெடுக்க முடியும். இது பற்றியாரும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.
கேள்வி: நீங்கள் புதிதாக அமைத்த பாதையினூடாக பெரஹரா ஊர்வலம் நடத்தவுள்ளீர்களே? பள்ளிவாசலை கடந்து செல்லும் போது பிரச்சினைகள் எழுந்தால்?
இனாமலுவே தேரர்: இல்லை நான் நியாயமானவன். அநீதிகள் ஏற்படும்போது தான் அதற்கெதிராகப் போராடுபவன். யாருக்கும் தீங்கு செய்பவனல்ல. அமைதியாகவே எமது பெரஹரா ஊர்வலம் பள்ளிவாசலைக் கடந்து செல்லும்.
கேள்வி: முஸ்லிம் சமூகத்திடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்?
இனாமலுவே தேரர்: மௌலவிகள், சமயத் தலைவர்கள் அமைதியான முறையில் அவர்கள் பள்ளிவாசல் என்று கூறும் தகர கொட்டிலை அகற்றித் தரவேண்டும். அபிவிருத்திப் பணிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்.
கேள்வி: தம்புள்ளை நகரில் வேறு நான்கு இடங்களில் புதிதாக பள்ளிவாசலைக் கட்டுவது தொடர்பில் ஆலோசிக்கப்படுகிறது. அவ்வாறு வேறு இடத்துக்கு இப் பள்ளிவாசலை இடமாற்றுவது பற்றிய உங்கள் நிலைப்பாட்டை தெரிந்து கொள்ளலாமா?
இனாமலுவே தேரர்: தாராளமாக. அப்படி புதிய பள்ளிவாசலைக் கட்டுவதாக இருந்தால் அதற்கான முதலாவது நிதி அன்பளிப்பை நான் தான் வழங்குவேன். ஆனால் எமது புனித பூமிக்குட்பட்ட பிரதேசத்தில் ஒருபோதும் பள்ளிவாசலை அமைக்க நான் சம்மதிக்கமாட்டேன்.

Post a Comment