மன்னாரில் 700 ஏக்கர் காணி கடற்படை வசம் - ரிஷாத் பதியுதீன்
Sunday, April 20, 20140 comments
மன்னார் மாவட்டத்தின் முள்ளிக்குளம் மற்றும் மறிச்சிக்கட்டுப் பிரதேசங்களில் சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்னர் புதிதாக அமைக்கப்பட்ட கடற்படை முகாம் காரணமாக சுமார் 700 ஏக்கர் பரப்புடைய தமிழ் - முஸ்லிம் மக்களின் காணிகள் அரசினால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தொழிற்துறை மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
மறிச்சிக்கட்டுப் பகுதியில் 300 ஏக்கர் காணியை கடற்படைத் தேவைக்காக அரசு கையகப்படுத்தியுள்ள நிலையில், காணிகளின் உரிமையாளர்களான 73 குடும்பங்களே தமது பாரம்பரிய காணிகளுக்கு சற்று தொலைவில் தற்காலிக கூடாரங்களில் வசித்துவருவதாகவும் அமைச்சர் பதியுதீன் கூறினார்.
இந்தக் குடும்பங்கள் வில்பத்து சரணாலயத்தின் எல்லைக்குள் குடியேற்றப்பட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களையும் அவர் நிராகரித்தார்.
இந்த மக்களுக்காக பிரதேச செயலாளரால் அளிக்கப்பட்டுள்ள மாற்றுக் காணிகளில் குடியேறுவதற்கும் இராணுவத்தினர் தடை விதித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
´சொந்தக் காணிகளுக்குள்ளும் வாழமுடியாமல், தற்போது தங்கியிருக்கும் பகுதிகளிலும் இருக்கமுடியாமல், மாற்றுக்காணிகளுக்கும் அனுமதிக்கப்படாமல் உள்ள நிலையில் மக்கள் தத்தளிக்கின்றனர்´ என்றார் ரிஷாத் பதியுதீன்.
இரண்டு வாரகாலத்துக்குள் மாற்றுக்காணிகள் கொடுக்கப்படாவிட்டால் மக்களுடன் ஜனநாயக ரீதியான போராட்டத்தில் இறங்கப்போவதாகவும் அமைச்சர் கூறினார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment