பொதுபலசேனா ராவண பலய போன்ற முஸ்லிம் எதிர்ப்பு அமைப்புக்கள் மஹிந்த ராஜபக் ஷவை ஆதரிக்க ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் முஸ்லிம்கள் மஹிந்த ராஜபக் ஷவை ஆதரிப்பதானது முஸ்லிம்களே முஸ்லிம்களை அழித்துக்கொள்ள எடுக்கும் முயற்சியாகும். அவருக்கு ஆதரவளிக்கும்படி முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம்களை வற்புறுத்துவார்களேயானால் அது சமூக விரோத செயலாகும் என கண்டி மாவட்ட ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்தார்.
மாவில்மடையில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சி கண்டி மாவட்ட முஸ்லிம் அமைப்பின் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
கடந்த காலங்களில் பொதுபலசேனா ராவண பலய போன்ற அமைப்புக்கள் செய்த முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகள் நாடறிந்ததே. இவர்களின் முக்கிய நோக்கம் முஸ்லிம்களை அழிப்பதாகும். இவர்களது முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் தடுக்கவில்லை. மௌனமாக இருந்து பார்த்துக்கொண்டிருந்தது என்றும் கூறலாம்.
இந்த இனவாத அமைப்புக்கள் மஹிந்த ராஜபக் ஷவை ஆதரிப்பதானால் ஒப்பந்தம் செய்தே ஆதரிக்கும். எனவே இந்த ஒப்பந்தங்களில் உடன்பாடுகளில் முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகள் கட்டாயமாக இருக்கும்.
இவ்வாறு இருக்கும் நிலையில் மஹிந்த ராஜபக் ஷ வெற்றியடைந்தால் இந்த இயக்கங்களின் கோரிக்கைகளை வழங்குவதை தவிர்க்க முடியாது. அதை எதிர்க்கவும் முடியாது. எனவே முஸ்லிம் சமூகத்திற்கு பாதிப்பே ஏற்படும். எனவே முஸ்லிம்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டும். அரசினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் முஸ்லிம்களைப் பொறுத்தவரை ஏமாற்றமாகவே உள்ளது. அரசிலுள்ள முஸ்லிம் பிரமுகர்களும் சக்தியற்றவர்களாக உள்ளனர். இவர்களால் வாக்குறுதிகளை வழங்கவும் முடியாது. வழங்கியவற்றை செயல்படுத்தவும் முடியாது. எனவே ஏமாந்து விடக்கூடாது.

Post a Comment